Saturday, April 16, 2005

மாமனிதர்

வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்?
- வாஷிங்டன் இர்விங் -


ஆனால் துவேசம் கக்கும் ஒருசிலர் முஹம்மது நபியின் வாழ்க்கையை படித்திராதவர்களிடம் அவதூறு பரப்புவதில் தீவிரமாக இருந்தாலும் இத்தகைய எள்ளல்களின் விளைவுகள் அவர்களின் எண்ணங்களுக்கு எதிராகத்தான் இதுவரை அமைந்துவந்திருக்கிறது.

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
- ஜி.ஜி. கெல்லட் -

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
- எஸ். எச். லீடர் -


இத்தகைய போற்றுதலுக்கு காரணம் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக, ஏழைகளின் துயர் நீக்க பாடுபட்டவராக, நம்பிக்கைக்கு உரியவராக, பொய் சொல்லாதவராக, ஆன்மீக தலைவராக, சிறந்த ஆட்சியாளராக, மெளட்டீகத்தை உடைத்தெரிந்தவராக, எளிமையை கடைப்பிடித்தவராக இன்னும் பல நற்பண்களை தனது வாழ்க்கையில் கடைப்பிடிப்பவராக இருந்ததால்தான்.

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன்.
- பெர்னாட்ஷா -


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின்னர், மற்ற அரசர்கள் அச்சம் கொள்ளும் அளவுக்கு வல்லரசாகவே திகழ்ந்தார். ஆனால் வல்லரசு நாட்டின் ஆட்சித் தலைவர் விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை பின்வருமாறுதான் இருந்தது.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்பு பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். என் சிறிய தாயாரே அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பேரீச்சம் பழமும் தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தது சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள் அதை அருந்துவோம் என விடையளித்தார்கள்.
நூல்: புகாரி, முஸ்லிம்

நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் தீட்டப்பட்ட (தோல் நீக்கப்பட்ட) கோதுமையில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹல் பின் ஸஅது அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை என்றார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா? என்று கேட்டேன். அதற்கவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை என்றார்கள். தீட்டப்படாத (தோல் நீக்கப்படாத) கோதுமை மாவைச் சலிக்காமல் எப்படி சாப்பிடுவீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் நாங்கள் தீட்டப்படாத கோதுமையைத் திருவையில் அரைப்போம் பின்னர் வாயால் அதை ஊதுவோம் உமிகள் பறந்துவிடும் எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம் என்று விடையளித்தார்கள்.
நூல்: புகாரி

ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக்குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டின் கால் பகுதியை பதினைந்து நாட்களுக்குப் பிறகு எடுத்து வைப்போம் அதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள் இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் சிரித்து விட்டு குழம்புடன் கூடிய ரொட்டியை முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினாராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே என விளக்கமளித்தார்கள்.
நூல்: புகாரி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும் வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) கூறினார்கள்.
நூல்: புகாரி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன் உடனே என் தாயார் உம்மு சுலைம் அவர்களிடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர்கள் என்னிடம் ஒரே ஒரு ரொட்டித்துண்டும் சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய்விடும் என்றார்கள், என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி

ரொட்டியுடன் தொட்டுக் கொள்வதற்கு குழம்பு இல்லாமல் வினிகரை வைப்போம் வினிகர் சிறந்த குழம்பாகவுள்ளதே எனக் கூறி அதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல். புகாரி

(தொடரும்)

1 comment:

பாபு said...

இஸ்லாத்தின் மீது துவேஷங் கக்கப்படுகிற போது 'வாளா'விருந்துவிடாமல் 'எழுதுகோலே ஆயுதமெனத் தூக்கி விட்ட உங்களுக்கு நன்றிகள். துவேஷங்களை 'நேசமுடன்' பரப்புகிறவர்கள் இதையெல்லாம் வாசித்து உண்மை உணர வேன்டும். ஆனால், ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷத்தை விட்டாலும் - ஒரு குடம் விஷத்தில் ஒருதுளி பாலை விட்டாலும் ஒன்றுதாந் இரண்டுமே விஷம் என்றே உணரப்படும்.