Friday, March 17, 2006

இந்தியாவில் இஸ்லாம்-19

தொடர்-19: தோப்பில் முஹம்மது மீரான்

யார் அஞ்சுவண்ணத்தார்?

அஞ்சுவண்ணத்தாரைப் பற்றியும், மணிக்கிராமத்தாரைப் பற்றியும் இரண்டாவது செப்பேட்டின் முதல் பக்கத்தில் 34, 35 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரு வியாயார அமைப்புக்கள் என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடில்லை. ஆனால் எது யாருடைய அமைப்பு என்பதில்தான் குளறுபடிகள்.

இந்த இடத்தில் சற்று நிதானமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இதை அணுகவேண்டும்.

அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பு (Trade Association) என்றும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய வியாபார அமைப்பு என்றும் சொல்லி முற்றுப்புள்ளி போட்டு விட்டனர். பஹ்லவி, கூபிக் ஹீப்ரு மொழிகளில் எழுதப்பட்ட செப்பேட்டில் காணப்படும் 'கூபி' லிபியில் எழுதப்பட்ட பெயர்களை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நொண்டி சாக்குக் கூறி அப்படியே விட்டுவிட்டார்கள்.

இங்கு சொல்லப்படும் வியாபார அமைப்புகளில் முஸ்லிம்களைப் பற்றியோ முஸ்லிம்களுடைய அமைப்புகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை. சுருங்கக்கூறின் துவக்க காலத்திலேயே வரலாற்றிலிருந்து முஸ்லிம்களைத் துடைத்து அப்புறப்படுத்துவதற்காக நடந்த பல சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று.

வியாபார அமைப்புக்கள் என குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சுவண்ணத்தாரையும், மணிக்கிராமத்தாரையும் அறுநூற்று பேரையும் (நாயர் அமைப்பு) ஈசோ சபீருக்கு வழங்கும் உரிமைகள் (அதிகாரங்கள்) முறையாக செய்யப்படுகின்றனவா என்று மேற்பார்வை செய்ய அதிகாரப்படுத்தியதாக செப்பேட்டில் காணப்படுகிறது. (செப்பேட்டில் 32-36 வரிகள்)

"32 க்கடவராகவும் உல்கு (கூ)ட்டுஞ்சரக்கு இவைகளை வச்சு உல்குவிடுப்பதாகவு ---
33 ம் சரக்குமி (வி) லையிடுமிடத்தும் மற்றுமே ஸாமிகரியம் எக்காரியமும்
34 வைகளைக் கூட்டியே செய்வதாகவும் அன்றன்று படுமுல்கு --- அஞ்சுவண்ணமும்
35 மணிக்கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும் நாலு வாதிலகத்து ---
36 ம் விலக்கும் பூமியாக காராண்மைக் கொடுக்குமெடத்து கோப்பதவாரங் ---
37 கோயில .........."

மேலேயுள்ள செப்பேட்டு வரிகளை டி.ஏ. கோபிநாத் ராவ் மொழிபெயர்த்துத் தருகிறார்.

"the levying of customs on dutiable articles should be done only in their presence. (Similarly) the apprising of articles and all other business of the Lord (The Kind) shall be done in company with their people. The Anjuvannam and the Manigramam shall take care of the customs collected every day.' (T.A.S. Page 84)

சுங்கவரி வசூலிப்பதை அஞ்சுவண்ணத்தார்களும் மணிக்கிராமத்தார்களும் கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை செப்பேட்டின் 34, 35 வரிகளில் பார்த்தோம். அஞ்சுவண்ணம் யூதர்களுடைய வியாபார அமைப்பாகவும், மணிக்கிராமம் கிருத்தவர்களுடைய அமைப்பாகவும் இருப்பின், கிருத்தவரான ஈகோ சபீருக்கு வழங்கப்பட்ட மானியத்தில் கிருத்தவர்களை சாட்சிகளாகவும் கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்ய வாய்ப்பு இருக்காது. கிருத்தவர்களுக்கு வழங்கிய மானியத்தில் கிருத்தவர் அல்லாத வேறு மூன்று மதப்பிரிவினரைக் கொண்டு சாட்சி கையெழுத்துப் போட வைத்திருக்கின்றனர். ஈப்ரு மொழியில் கையொப்பம் போட்டவர்கள் யூதர்களும், பஹ்லவி மொழியில் கையொப்பம் போட்டவர்கள் பாரசீகத்தைச் சார்ந்த வணிகர்களும், கூஃபி லிபியில் கையொப்பம் போட்டவர்கள் அரேபியர்களான முஸ்லிம்களும் ஆவார்கள்.

இனி அஞ்சுவண்ணம் முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பாக இல்லாவிட்டால் கூஃபி லிபியில் கையொப்பம் போட்ட அரபி தெரிந்த வியாபாரிகள் யார்? அதில் காணப்படும் 11 முஸ்லிம் பெயர்கள் அதில் எப்படி இடம்பெற்றன? இந்த முஸ்லிம்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? இந்தக் கேள்விகளுக்கு முன் இப்போது வரலாற்று ஆசிரியர்கள் மவுனம் சாதிக்கின்றனர். அஞ்சுவண்ணம் என்பது முஸ்லிம்களுடைய வியாபார அமைப்பை அல்லது முஸ்லிம்களைக் குறிக்கும் சொல்லாகும்.

அஞ்சுவண்ணம் என்ற பெயரில் ஒரு ஊர் இருந்ததாகவும், அவ்வூரைச் சார்ந்த மக்கள் அஞ்சுவண்ணத்தார்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் டாக்டர் Dr. HULTZSCH என்பவர் குறிப்பிடுகிறார். சிலர் அஞ்சுவண்ணம் என்பது யூதர்களுடைய காலனி என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். கிருத்தவ மதத்திற்கு மதம் மாறி வந்த ஐந்து சாதியைத்தான் அஞ்சுவண்ணம் என்ற சொல் குறிப்பிடுவதாக திரு.வெங்கய்யா என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திரு.வெங்கய்யா குறிப்பிடும் ஐந்து சாதியினர் 1) ஈழவர் 2) தச்சர் 3) வெள்ளாளர் 4) வண்ணார். ஐந்தாவது சாதி பெயர் கோட்டயம் செப்பேட்டில் (தரிசாபள்ளி செப்பேட்டில்) தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.

இங்கு குறிப்பிடப்பட்ட நான்கு சாதியினரும் பெயர் தெரியாத ஐந்தாவது சாதியும் தான் அஞ்சுவண்ணத்தார் என்றால் கிருத்தவர்களாக மதம் மாறிய இவர்கள் எப்படி யூத அமைப்பாக குறிப்பிடப்பட்ட அஞ்சுவண்ணத்தார்கள் ஆனார்கள்?

மதம் மாறிய மேற்குறிப்பிட்ட ஐந்து சாதியாளர்களை 'அஞ்சுவண்ணத்தார்' என்று ஏற்றுக்கொள்வோமேயானால் யூதர்களுடைய அமைப்பாக சொல்லப்படும் அஞ்சுவண்ணம் எது?

தொடரும்...

மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 20 - 26 , 2006

Saturday, March 04, 2006

தீர்ப்பு :: பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்

இந்தியாவை உலுக்கிய பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்:
வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு


காவி கேடிகளால் குஜராத் இனப்படுகொலையில் 14 பேர் கொளுத்தி கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி நிகழ்வை யாராலும் மறக்க முடியாது.

அந்த வழக்கு குஜராத் மாநில வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது இந்திய அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

உறவினர்களை கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் பரிகொடுத்த அபலைப் பெண் ஜஹீரா ஷேக்கின் பிறழ் வாக்குமூலமே குற்றவாளிகள் தப்ப காரணம் என்பதை மனித உரிமை போராளி தீஸ்தா செதல்வாட் ஜஹீரா ஷேக்கை தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேம்ஸ் லிங்டோவிடம் ஆஜர் படுத்தி உண்மை வாக்குமூலத்தை வெளியிடச் செய்தார். அந்த வாக்குமூலத்தில் "தன்னையும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 37 சாட்சிகளையும் பாஜகவின் எம்.எல்.ஏ மது ஸ்ரீவத்ஸவா அச்சுறுத்தியதாகவும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே தானும் தனது தரப்பினரும்..
பெஸ்ட் பேக்கரி கொடூரக் கொலைகள் குறித்து நீதி மறு விசாரணைக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டினை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மும்பையில் பெஸ்ட் பேக்கரி நெருப்புக் கொலைகள் குறித்து மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டும் உத்தரவைப் பிறப்பித்தது.

2002 பிப்ரவரி மாதம் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலைகளின் கொடூரங்களில் ஒன்றான பெஸ்ட் பேக்கரி படுகொலைகள் தொடர்பான தீர்ப்பினை மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி நீதியரசர் அபய் திப்சே வழங்கியுள்ளார்.

இந்த வெறிச் செயலின் காரணகர்த்தாக்களாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் மீதம் உள்ள 8 பேரின் மீது போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

1. ராஜுபாய் தாமிர்பாய் பரியா
2. பங்கஜ் விரேந்தர் கிர் கோஸை
3. பகதூர் என்ற ஜிட்டு
4. சந்திர சிங் சவுகான்
5. ஜக்தீஷ் சுனிலால் ராஜ்புத்
6. தினேஷ் பூல் சந்த் ராஜ்பர்
7. சானாபாய் சிமன்பாய் பரியா
8. சுரேஷ் என்ற லாலு தேவ்ஜிபாய் வாசவா
9. சைலேஷ்
என்ற காவி பயங்கரவாதிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் முன்பாக இந்திய தண்டனைச் சட்டம் 143, 147, 324, 326 மற்றும் 148 என்ற பிரிவுகளின் கீழ் சட்டவிரோதமாகக் கூடுதல், தீய நோக்குடன் தீயிடல், கொடுங்காயம் விளைவிக்கும் எண்ணத்துடன் பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துதல் என்ற கடும் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்துள்ளதால் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் முன்பாக அவர்கள் முத­ல் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு குஜராத் வடோதரா விரைவு நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டு மும்பை அமர்வு நீதிமன்றத்திற்கு மறு விசாரணைக்கு வந்தபோது கூட ஜஹீரா ஷேக் மீண்டும் பிறழ் சாட்சி அளித்தார். இது தொடர்பாக ஜஹீரா ஷேக் மற்றும் அவரது தாயார் ஹைருன் னிஸா, ஜஹீராவின் சகோதரர்கள் நுத்ஃபுல்லாஹ், நஸீபுல்லாஹ், ஜஹீராவின் சகோதரி ஸாஹிராவுக்கும் நீதியரசர் திப்சே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஜஹீரா வேண்டுமென்றே தவறான பொய்யான தகவல்களை, சாட்சியங்களைக் கூறி தீஸ்தா செடல் வாட்டின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டியும் இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

இதற்கு ஜஹீராவும் அவரது தரப்பினரும் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டுள்ளது.

ரூ.500 முதல், 10,000 வரை அபராதம் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டது.
கொளுத்திக் கொல்லப்பட்டு இன்று வரை உடல் கூட கண்டுபிடிக்கப்படாத ஜஹீராவின் மாமா கவுசரின் மனைவி ஷாஜகானுக்கு 50,000 ரூபாய் இழப்பீட்டு தொகையாய் குற்றவாளிகள் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடாக தங்களுக்கு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப் பட்டது. ஆனால் அந்த கொலைகாரப் பரதேசிகள் தங்களுக்கு அவ்வளவு தொகை கொடுக்க இயலாது என நீதிபதியிடம் கெஞ்சிய பிறகு 50,000 வழங்க நீதிபதி உத்தர விட்டார். நீதி மெல்ல கண் விழித்து பார்க்கிறது. மனித மிருகங்கள் வெலவெலத்து போயிருக்கின்றனர். அனைத்து இனப்படுகொலை யாளர்களையும் நீதியின் முன் மண்டியிட வைக்க வேண்டும் என்பதே நாட்டிலுள்ள நல்லோரின் விருப்பமாகும்.

நீதியின் வெற்றி

பெஸ்ட் பேக்கரி வழக்கின் தீர்ப்பு குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஆனந்த் கூறும்போது இது நீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.

ஜஹீரா ஷேக்கிற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஆனந்த் இதன் மூலம் சாமானிய மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்பட வழி பிறக்கும் என்றார்.

இந்த தீர்ப்பின் மூலம் வலுவற்றவர்களின் (சிறுபான்மை சமூகம்) மீது தாக்குதல் தொடுப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டுவிட்டது என்றார் முன்னாள் உச்சநீதிமன்ற வி.என்.காரே. ஒரு மாநிலத்தில் அரசுத் தரப்பே குற்றவாளிகளை தப்ப விட வழக்கு மாற்றப்பட்டு மற்றொரு மாநிலத்தில் விசாரித்து முடிக்கப்பட்டது வரலாற்று நிகழ்வு என மேலும் குறிப்பிட்டார்.

மறக்க முடியாத கண்ணீர் நினைவுகள்

2002 பிப்ரவரி 27ல் குஜராத் வடோதராவில் உள்ள ஹனுமான் தெஹ்ரியில் பெஸ்ட் பேக்கரி என்ற சிறுபான்மை இன நிறுவனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவி குண்டர்களின் இந்த வெறிச் செயலால் இந்தியாவே கொதிப்பில் ஆழ்ந்தது.

காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தை உலகம் அன்று கண்டது. 14 பேர் (இரண்டு குழந்தைகள்) உள்பட தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பதையே உணராமல் துடிதுடித்து இறந்தது இளகிய நெஞ்சங்களால் மறக்க முடியாத நிகழ்வல்லவா?

நீதியின் பயணம்

குஜராத்திலிருந்து பெஸ்ட் பேக்கரி நெருப்பு கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையமும் 'சிட்டிஸன் ஃபார் ஜஸ்டீஸ் அன்ட் பீஸ்' இயக்கமும் சேர்ந்து ஒரு சிறப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறது. 2004 ஏப்ரல் 12 அன்று தெற்கு மும்பையில் நீதி மறு விசாரணை செய்ய ஒரு தனி நீதிமன்றம் மும்பையில் அமைக்கப்படுகிறது.

அந்த தனி நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் விசாரணை நடத்தி 2004 டிசம்பர் 31 தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது. தெற்கு மும்பையின் மஜ்கான் பகுதியில் அமைக்கப்படும் இந்த நீதிமன்றத்திற்கு கூடுதல் அமர்வு நீதிபதி அபய் திப்சே நியமிக்கப்படுகிறார். இதன் பணி இறுதிக்காலம் நான்கு முறை நீடிக்கப்படுகிறது.

மறு விசாரணைப் பணிகள் செப்டம்பர் 22ல் தொடங்கப்பட்டு 2004 அக்டோபர் 4லி­ருந்து 75 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 7 பேர் எதிர் சாட்சி அளித்து வாக்குமூலங்கள் 3000 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத் வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது 73 பேர் மட்டுமே விசாரிக்கப்பட்டனர். பேக்கரியில் உள்ள மற்ற இரு தொழிலாளர்களின் சாட்சியங்களை பதிவு செய்யவில்லை என்பதை விசாரணை அதிகாரி பி.பி. கனானி கூறியபோதும் குஜராத் கொடுங்கோல் அரசு கண்டு கொள்ளவில்லை.

இப்போது மறு விசாரணையில் ஜஹீராவும் அவரது தாயாரும் முரண்பாடான தகவல்களைக் கூறத் தொடங்கினர். நவம்பர் 2-ஆம் தேதி இதற்கென ஜஹீரா அன்ட் கோ பிரத்தியேக செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினர். தீஸ்தா செதல் வாட் தன்னை கத்திமுனையில் மிரட்டி வாக்குமூலம் கொடுத்ததாகவும் மற்றும் அவரது தொடர் மிரட்டல்கள் எல்லை மீறியதாகவும் ஜஹீரா வகையறாக்கள் புகார் கூறினர். மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் போலி பேர்வழிகள் உலாவுகிறார்கள் பார்த்தீர்களா என காவிக் கூட்டம் கூத்தாடியது.

ஜஹீராவின் பல்டிகளின் பின்னணி குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு தனி குழுவை ஏற்படுத்தியது. அதன் மூலம் ஜஹீரா காவி கேடிகளின் கருவியாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சங்கும்பல் அம்பலப்படுத்தப்பட்டது.

பத்திரிகையாளர்கள் அண்ட முடியாத அளவுக்கு ஜஹீராவுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இந்துத்துவா வீரர்களின் (?) கட்டுப்பாட்டில் ஜஹீரா வைக்கப்பட்டார். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்பதைப் போல சீப்பாக செயல்பட்ட ஹிந்துத்துவ கும்பலின் செயல் இன்று சிரிப்பாய் சிரிக்கிறது.

நன்றி: www.tmmkonline.org