Saturday, February 05, 2005

பழசு இப்ப புதுசு

ப்ளாக்ஸ்பாட் வலைப்பதிவுகளுக்கான மேம்பட்ட மதிப்பீட்டு முறை நிரல்துண்டை எனது டெம்ப்லேட் பகுதியில் இணைத்த பிறகு பக்கத்திற்கு ஒரு பதிவு மட்டுமே தெரியும் வண்ணம் இருந்ததை அதிகரித்தேன். தற்போது பழைய மூன்று பதிவுகள் தமிழ்மணம் வாசகர் பகுதியில்.

Tuesday, January 04, 2005

Asian Tsunami Relief

We would also like to invite our readers to contribute generously to various online donation campaigns to raise fund for victims of the Asian tsunami which struck across more than ten countries on 26 December. As we write this, the death toll is already exceeding 150,000, and millions are homeless.

There are many online donation campaigns run by various organizations where internet users can transfer fund using their secure online payment by credit cards. One such campaign is found at

http://www.islamicity.com/donate/?ref=30

Please donate now. Millions of people - most of whom are poor - await YOUR help.

(According to islamicity.com)

இனி தேவை மறுவாழ்விற்கான உதவிகள் (சுனாமி)

இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை மறுவாழ்விற்கான உதவிகளாகும். அவர்களுக்கு குடியிருப்புகள், தொழில் கருவிகள் முதலியவைத் தான் அத்தியவசியமாக தேவைப்படுகின்றன.

TMMK-வின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிவாரண பணிக்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்களும் அதன் கிளையின் தன்னார்வ தொண்டர்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் எ.ராஜா ஆளுநர் பர்னாலாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தமுமுக தொண்டை குறிப்பாக எழுதியுள்ளார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பொறையாரிலிருந்து எழுதியுள்ள செய்தியில் நாகை மாவட்டத்தில் எவ்வித வேறுபாடுமின்றி தமுமுக செய்துள்ள சேவையை பாராட்டியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் காஞ்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் தமுமுக ஆற்றி வரும் சேவையை வெகுவாக பாராட்டி எழுதியுள்ளது.

உணவு, உடை, மருந்து போன்ற உதவிகளை தமிழக மக்கள் மிக தாராளமாக செய்து வருகின்றனர். தேவைக்கு அதிகமாகவே பழைய ஆடைகள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால் இனி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை மறுவாழ்விற்கான உதவிகளாகும். அவர்களுக்கு குடியிருப்புகள், தொழில் கருவிகள் முதலியவைத் தான் அத்தியவசியமாக தேவைப்படுகின்றன.

ஆகவே முடிந்தவரை நம்மாள் ஆன உதவிகளை செய்வோமாக.

Sunday, January 02, 2005

TMMK Trust - Unity in adversity

Mosque now a home for Hindu families

CHENNAI: Disasters often unite people and here is a classic case of communal harmony in the face of adversity.

A "masoodhi" (mosque) at Tambaram has become home to around 200 families, mainly Hindus, after the tsunami waves wreaked havoc on the shores of Tamil Nadu. They eat and sleep with their Muslim counterparts.

Religious differences do not matter to these poor souls who saw everything they had perish in a matter of minutes. For instance, Burkat Nisha, from Panayur, watched helplessly as her father was dragged by the waves. "For me, to be a Hindu or Muslim is too small an issue after what I went through in the last few days," she says, eyes swelling with tears.

These people, mainly fisherfolk from places such as Kovalam, Kalpakkam, Panayur, Padur and other places lost all their belongings to the sea on that ill-fated Sunday morning.Boarded in buses, trucks and other vehicles, they were brought to their temporary homes by the volunteers of Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK).

The volunteers then distributed basic amenities to theses people. Said S Rajendran, a fisherman from Kovalam, "We came here a desolate lot, with just the clothes we were wearing. But the people here welcomed us with open arms, igniting hope in us."

Adds V Uma, a victim from Kalpakkam: "The mosque provided us with all that we asked for, even the injured were taken to hospitals without any discrimination of being a Hindu or Muslim.

"The TMMK said that it had set up such camps in the mosque all over the state. With help from private sponsors and other organisations, food and clothing are being provided to the victims, said A Mohammed Ismail, president of Pallavaram unit of TMMK. "At the moment, we have planned to help anyone who needs it, be it a Hindu or a Muslim. Such feelings do not stand before the crises we face today,” he added.

On Wednesday, the local people were queuing up at the mosque to help the victims. Traders from around the area were seen supervising the distribution of rice and other groceries at the mosque. Large packets of clothes, collected from homes in Tambaram were brought in trucks and later distributed among the people.

According to the TMMK volunteers, traders from the Jain community had helped a lot in providing the necessary provisions to the mosque. Vegetarian food has been arranged for Hindus who want it.

Apart from this, The Indian Welfare and Education Trust (IWET), a social welfare organisation had been assisting the TMMK in its efforts to provide relief to the Tsunami victims, said the volunteers. "We have been providing money and material assistance to the volunteers," said A Faizur Rahman, assistant managing trustee, IWET.

Although the initial problems of the victims have been overcome by the mosque and its volunteers, not many are sure about what the future holds for them.

For instance, G Rani, who lost her belongings while trying to save a neighbour's young son, said: "Where and when do we go from here remains a major question." She also complained that no government official, apart from the Tahsildar, had turned up to listen to our grievances.


Thanks: New Indian Express
http://www.newindpress.com/coastalcalamity/News.asp?Topic=-367&Title=&ID=IET20041229220601&nDate=&Sub=&Cat=&
___________________

Please send your help to:

TMMK TRUST-TSUNAMI RELIEF FUND
A/C NO. 10000309
ANDHRA BANK
CHENNAI MAIN BRANCH
TAMIL NADU
INDIA

Tuesday, December 28, 2004

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நல்லதொரு வாய்ப்பு

பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய தமிழ் சொந்தங்களுக்காக நாம் தரும் துணிகளை ஜித்தா "ST கார்கோ ஏஜென்ஸி" (அல்பைக் பின்புறம், பலத்) இலவசமாக தமிழ்நாட்டுக்கு ஏர்-கார்கோ மூலம் அனுப்பி வினியோகிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஜித்தா நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ST-யின் ரியாத், தமாம் கிளை இதுபோன்ற சேவை செய்கிறார்களா என்று தெரியவில்லை.

கடல்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஜித்தா ST கார்கோ ஏஜென்ஸின் இச்சேவை குறித்து கேள்விப்பட்டு நானும் எனது நண்பர் முஹம்மதுஅலியும் துணிகளை சேகரித்து கொண்டுபோய் கொடுத்துவந்தோம். இன்று காலையில்தான் கீழ்வீடு ஆண்ட்டி மற்றும் அங்கில் ஷரஃபுதீனிடம் தொலைபேசியில் சொல்லியிருந்தேன். துரிதமாக இயங்கி அவர்கள் வீட்டிலிருந்து மட்டும் 5 காட்டன் துணிகளை தந்தார்கள். அவர்களே காட்டன் ஏற்பாடு செய்து Export Standard Packing-கும் செய்து தந்துவிட்டார்கள். உயர்ந்த உள்ளங்கள் - நன்றாக இருக்கட்டும்.

இலங்கைக்கு இதுபோன்ற இலவச சேவையை துவக்க ஏதாவதொரு கார்கோ ஏஜென்ஸியை அணுகக்கூடாதா என்று இலங்கை நண்பரிடம் கேட்டபோது, இலங்கைக்கு கடல்வழி கார்கோ சேவை மட்டுமே ஜித்தாவில் தற்போது இருப்பதாகவும் அப்படி அனுப்பினால் போய்சேர நாட்கள் ஆகும், ஆனால் இப்பொழுது அவசரமாக தேவைப்படுவது பணம்தான் என்றார்.

உண்மைதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பொழுது அவசரமாக தேவைப்படுவது உணவும், உடையும், தங்க இடமும்தான். உடை வகைகளை சில ஊர்களில் தன்னார்வ தொண்டர்கள் ஆட்டோவில் சென்று சேகரிக்கும் செய்தியும் வந்தது. உடைகளோடு நம் உதவிகள் முடிந்துவிட்டதென்று கருதாமல் உங்களால் ஆன பண உதவியையும் உடனே செய்திடுங்கள்.

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் என் பங்கு தொகையை கொடுத்துவிட்டுதான் உங்களிடம் சொல்கிறேன். நாளையும் துணிகளை சேகரித்துபோய் கொடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

அரசியல்வாதிகளின் விசிட்களால் புதிய தொந்தரவு. இறந்த உடல்களை தேடி சேகரிக்கும் தன்னார்வதொண்டர்களின் பணிகளை நிறுத்தச் சொல்கிறார்களாம். எத்தனையோ ஊர்களில் இன்னும் அரசு நிறுவனம் மீட்பு பணியை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, December 27, 2004

உதவிடுவீர்!

போர் மற்றும் கலவரம் என்ற பெயரில் மனித உயிர்கள் மாய்க்கப்பட்டுவரும் இவ்வேளையில் பல்லாயிரம் உயிர்களும் அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களும் சிறு நேரத்தில் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. போரை கூட நிறுத்திவிடலாம். ஆனால் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை?

26.12.2004 ஞாயிறு அன்று ஏற்பட்ட நிலநடுக்கமும் கடல்கொந்தளிப்பும் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியை விவரிக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் நாகை மாவட்டம் மிகுந்த உயிர்சேதமும் பொருட்சேதமும் அடைந்திருக்கிறது. இதைவிட இலங்கையில் ஏற்பட்ட உயிர்சேதம் சொல்லி மாளாது.

காரைக்கால் - ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற ஒரு முஸ்லிம் குடும்பத்தினர், டாக்டரை சந்திக்க காத்திருக்கும் அந்த சிறு நேரத்தை கடலோரகாற்றை சுவாசிக்க செலவிடலாம் என்று சென்றவர்கள் டொயோட்டா குவாலிஸோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

தரங்கம்பாடிக்கு உதவிக்காக போய்வந்த எனது உறவினர், அதிகமாக உயிர்சேதம் பெண்களும் குழந்தைகளும் என்று தெரிவித்திருக்கிறார். இதுவல்லாமல் சென்னை உயிரிழப்புகளை சற்றுமுன்தான் வெக்டோன் டி.வியில் காணமுடிந்தது. உயிரற்ற இளந்தளிர்களும் தாய்மார்களும் பெருங்குழிகளில் ஒன்றாக புதைக்கப்படுவதை பார்த்து, அவர்களின் உறவினர்கள் கதறுவதை கண்டு நம் கண்ணில் நீர் துளிர்ப்பதை தவிர்க்க இயலவில்லை.

குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்களும் அவர்களின் உறவினர்களும் கதறி அழும் காட்சி வன்நெஞ்கங்களையும் கலங்கடித்துவிடும். இவர்களெல்லாம் யார்? நேற்று காலைவரை பிறரிடம் கையேந்தாமல் சொந்த தொழில்செய்து உழைத்து நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்தவர்கள். இயற்கையின் சீற்றத்தினால் நிலைகுழைந்துள்ளார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், உணவளிப்பதும், அவர்கள் முன்புபோல் தொழில்செய்து தலைநிமிர்ந்திட அவர்களுக்கு தோளோடு தோள்கொடுப்பது நமது கடமை.

கண்ணீர் சொட்ட எழுதிவிட்டாலோ அல்லது இறங்கல் தெரிவித்து விட்டாலோ நம் பணிகள் முடிந்துவிடாது. அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அவர்களின் துயர்துடைத்திட வேண்டும்.

இதற்கெல்லாம் யாராவது உண்டியல் குலுக்கி உங்களிடம் வருவார்கள் என்று காத்திருக்காமல் நாமாகவே முன்வந்து நமக்கு நம்பகமான பொதுசேவை குழுக்கள் மூலம் நமது உதவிகளை செய்திட வேண்டும். நண்பர்களிடம் உள்ள நல்ல துணிகளை சேகரித்து அதனை கார்கோ மூலம் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் அனுப்பி அவர்களுக்கு உதவமுன்வாருங்கள். உங்கள் வீடுகளில் உபரியாக உள்ள சாமான்களை அவர்களுக்கு கொடுத்திடுமாறு அறிவுறுத்துங்கள்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் முற்பகலில் இருந்த போது முளர் கூட்டத்தைச் சார்ந்த அனைவருமோ, அல்லது அவர்களில் பொம்பாலனவர்களோ வாட்களைத் தொங்க விட்டுக் கொண்டும், முரட்டுத்தனமான கம்பளியைப் போத்திக் கொண்டும் நிர்வாணமாக வந்தனர். அவர்களின் ஏழ்மை நிலையைக் கண்ட நபி(ஸல்) அவர்களின் முகம் மாறியது. நபி(ஸல்)அவர்கள் (வீட்டினுள்) நுழைந்து, பிறகு வந்து பாங்கு கூறும் படியும், இகாமத் கூறும் படியும் (தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி) பிலாலிடம் கூறினார்கள். (பிறகு) தொழவைத்தார்கள். பின்பு உரை நிகழ்த்தினார்கள்.

தன் உரையில் 4:1, 59:18-20 ஆகிய வசனங்களையும் ஓதிகாட்டிய பிறகு, "ஓருவர் தன் தங்க நாணயத்திலிருந்தோ, வெள்ளி நாணயத்திலிருந்தோ, தன் ஆடையிலோ, கோதுமையில் ஒரு ஸாஉ அளவோ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ அளவோ தர்மம் செய்யட்டும்" என்று கூறினார்கள்.பேரீத்தம் பழத்தின் பாதியையேனும் தர்மமாக வழங்கட்டும் என்று கூறும் அளவுக்கு அவர்கள் தர்மத்தைப் பற்றி கூறினார்கள்.அப்போது மதீனாவாசி ஒருவர் தன் உள்ளங்கை கொள்ளாத அளவுக்கு ஒரு பையை தூக்கி வந்தார். (அதனைப்பார்த்து) பின்பு மக்களும் கொண்டு வந்தனர். உணவுப் பொருள்களும், ஆடைகளும் இரு குவியல் போன்று குவிந்திருந்ததை நான் கண்டேன். நபி(ஸல்) அவர்களின் முகம் தங்கம் போன்று பிரகாசிக்கத்திருந்ததையும் நான் கண்டேன்.
அறிவிப்பவர்: ஜரிர்(ரலி) - நூற்கள்: முஸ்லீம், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ

நபியவர்கள் ஓதிக் காட்டிய 4:1, மற்றும் 59:18-20 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள்:
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (4:1)

ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)

அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.(59:19)

நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர். (59:20)

Friday, December 17, 2004

இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் Part-1

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இரண்டுவித பிரச்சினைகள்:

1) இஸ்லாத்திற்கெதிரான (குர்ஆன், நபிமொழிகள் இவற்றிற்கெதிரான) குற்றச்சாட்டுகள்
2) முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள்

இதுவல்லாமல் முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளின் உப பிரிவாக மேற்கண்ட இரண்டையும் கலக்கி இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுகளாக திரிப்பது. வாததிறமையை மட்டுமே ஆதாரமாக கொண்டவர்கள் இந்த உப பிரிவையே நம்புகிறார்கள். இஸ்லாம் என்பது குர்ஆன் என்னும் இறைவேதமும், நபிகளாரின் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளே தவிர முஸ்லிம்கள் அல்ல.

ஆனால் ஒருவரின் கொள்கை ஏட்டின் வழியாக மற்றவர்களை கவர்ந்திடுமா? அல்லது மனிதர்கள் வாழ்ந்து காட்டிய வழியினூடே கவர்ந்திடுமா? என்றால், வாழ்ந்து காட்டுவதால்தான். எனவே முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நாடுகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுகளாக விமர்ச்சிக்கப்படுகிறது. ஆனால் இது உண்மையில் முஸ்லிம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகளாகும். எனவே முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு ஒழுக்க சீலர்களாக, நியாயவாதிகளாக, நடுநிலைவாதிகளாக இஸ்லாம் சொல்லும் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நடந்த குஜராத் கலவரம் குறித்து யாவரும் மறந்திருக்க மாட்டோம். அக்கலவரத்தைப் பற்றி திரு. வீரபாண்டியன் தனது "சபர்மதி நதிக்கரையில்" என்ற கவிதையில் இவ்வாறு கூறுகிறார்.

மனுவின் புத்திரர்களே..
மாமிச வியாபாரிகளே..
கர்ப்பிணிப் பெண்களின்
வயிற்றைக் கீறி
"சிசு வதை" செய்த
சின்ன புத்திக்காரர்களே!
வாழ்ந்தவர்களின்
சதையைக் கழித்துச்
சமாதிவைத்த நீங்கள்
எப்போதோ இறந்தவர்களின்
எலும்புகளை தேடி
பூமிக்குள்
பயணம் செய்கிறீர்கள்

மாவு சுட்டுப்
பலகாரம் செய்யுமிடத்தில்
மனிதர்களைச் சுட்டுப்
பலகாரம் செய்த
மாபாவிகள் நீங்கள்

அடுப்புக்குக்
கரியைப் பயன்படுத்துவது
அனைவரும் செய்வதுதான்.
நீங்களோ கையையும் காலையும்
கரிக்கட்டைகளாக்கி
ரொட்டி சுட்ட
வெட்டியான்கள்!

இப்போதெல்லாம்
"பெஸ்ட் பேக்கரி" என்பது
எங்கள் காதுகளில்
"பெஸ்ட் போக்கிரி"
என்றே விழுகிறது
....

இக் கவிதை சொல்லும் பொருளுக்கு காரணமானவர்கள், சில இந்துக்கள் என்பதால் இந்துமதம் இப்படி சொல்லித்தருகிறது என்று என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனென்றால் மதங்கள் அனைத்தும் அன்பையே போதிக்கின்றன. அது உண்மையான மதமாக இருக்குமேயானால்.

முஸ்லிம்களின் தவற்றை சுட்டிக்காட்டும் தளங்கள் இருப்பதுபோல இந்துக்களின் கலவரத்தைப்பற்றி பதிவு செய்கின்ற தளமும் இருக்கத்தான் செய்கின்றது. உதாரணத்திற்கு ஒன்று மட்டும்.

http://indianterrorism.bravepages.com/indianmuslimsindex.htm

இது ஒருபுறமிருக்கட்டும்,

ஒரு மதத்தைப் பற்றி விமர்சனம் செய்ய அம்மதத்திற்கு எதிரானோர் எழுதிய புத்தகங்களையோ, இணையதளங்களையோ வாசித்துவிட்டு வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

தி.க.இயக்கத்தினர்கள் எழுதிய புத்தகங்களை இந்து மதத்தைப் பற்றிய நடுநிலை விமர்சன புத்தகமாக பார்க்க முடியாது.

இன்று "இஸ்லாம் - முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில்" என்று விமர்ச்சிக்கப்படுவதும் இஸ்லாத்தை பிடிக்காத முஸ்லிம்களோ, பிறமதத்தினர்களோ எழுதிய புத்தகங்களின் மறுபதிப்பே தவிர நடுநிலையான விமர்சனம் அல்ல. மறுபதிப்பு குறையை மறைக்க Google-ன் உதவி சிலருக்கு தேவைப்படுகிறது.

காய்தல் உவத்தல் ஒருவரின் விமர்சனத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை எழுதியரோ அல்லது பிறரோ சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எழுதியவரின் எழுத்துக்களே சாட்சி. அவரின் "இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்ற பழைய தலைப்பே அதற்கு சாட்சியாக நிற்கிறது. எப்படி இருந்தாலும் விமர்சனங்களுக்கு கண்ணியமான முறையில் பதில் கொடுக்க முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்மணம் வாசகர்களுக்கு முஹம்மது நபியைப்பற்றிய நடுநிலையான விமர்சனம் ஒன்றை தருவது நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் (நல்லவர்கள், தீயவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்களில்) யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபிக்கு முதலாம் இடத்தையும், உமர்(ரலி) அவர்களுக்கு 52-வது இடத்தையும் கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.


முஹம்மது நபி (கி.பி. 570 to 632)

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின. அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.

நன்றி : The 100
ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்

தமிழில்:
இரா. நடராசன்
மோ. வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா
மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்

பதிப்பாசிரியர் : மணவை முஸ்தபா

Published by:
Meera Publication
AE 103, Anna Nagar
Chennai - 600 040, India

Saturday, December 11, 2004

இனவாத சக்திகளுக்கு முன்னால் ...

உலகம் ஒழுக்கரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் யுத்தம் காரணமாகவும் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் சில மதகுருமார்களும், அரசியல்வாதிகளும், இனவாதிகளும் தங்களது சுயநலத்திற்காக குரோதம். பொறாமை காரணமாக சில தீய சக்திகளுடன் இணைந்து துண்டுப் பிரசுரங்களினூடாகவும், இணையம் போன்ற தொடர்பு சாதனங்களினூடாகவும் குறிப்பாக முஸ்லிம்களுக்தெதிராக இனவெறிளையும் துவேஷத்தையும் வளர்க்கின்ற வேலையை அண்மைக்காலமாக மேற்கொண்டுள்ளார்கள்.

இக்கட்டான இச்சமயத்தில் இனவாதத்திற்குத் துணைபோகத் கூடிய நடவடிக்கைகளை முஸ்லிம்கள் தவிர்த்துக்கொள்ளுவது மட்டுமல்லாது, இத்தகைய இனவெறியர்களின் விஷக் கருத்துக்களை அகற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு இனங்களுக்கிடையேயான விரிசல் நிலையையும் குரோத மனப்பான்மையையும் இல்லாதொழித்து சமூகங்களுக்கிடையே அன்பையும் இனக்கத்தையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த அனைத்து வழிகளிலும் உழைப்பது தவிர்க்க முடியாத கடமையாகிறது. அவற்றை சற்று சீர்த்துக்கிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முஸ்லிம்கள் ஒரு கொள்கையை ஏற்ற சமூகத்தினர். எப்போதும் நடுநிலையாக நடந்தகொள்ள வேண்டியது அவசியமாகும். நமது சிந்தனை, செயற்பாடுகளில் நடுநிலை பேண வேண்டும் என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் கூறுகிறது.

....உங்களை நடுநிலை சமூதாயமாக்கினோம். (அல்குர்ஆன் 2:143)

இனவாத கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படும் இச்சூழலில் நாமும் சிந்தனைக் குழப்பத்தில் சிக்கி நிதானமிழத்தல் அறிவுடைமையாகாது. எப்போதும் தூரநோக்குடனும், சிந்தனைத் தெளிவுடனும் பிரச்சினைகளை அணுகுதல் அவசியம். இஸ்லாத்தின் வழிகாட்டலில் நிதானமாக ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையென்ற வகையில் நாம் தவறு செய்கின்ற அல்லது நமது சிந்தனைக்கு வராத சில விஷயங்களை அலசலாம்.

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?" என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்).

ஆயினும் இந்த நபிமொழிக்
கருத்துக்கு மாற்றமாக, தனது இனத்தின் மீதான பற்று இனவெறியாக மாறும்போது கண்டிப்பாக அது தடுக்கப்பட வேண்டும். இனவெறி என்பது தானும் தனது சமூகமும் மட்டும் வாழ, ஏனைய சமூகங்களை இல்லாதொழிக்கவும், அவற்றுக்குக் குழிபறிக்கவும் முற்படும் நிலைப்பாடே!.

இனப்பிரச்சினை காரணமாக எண்ணற்ற கலவரங்கள் நடந்துமுடிந்துவிட்டன. உதாரணமாக நமக்கு மறக்கமுடியாத பம்பாய், குஜராத், போன்றவை. இனி நடப்பதற்கு நாட்களும் குறிக்கப்பட்டிருக்கலாம். இத்தருணத்தில் நாமும் நம் பங்குக்கு சிக்கலை உண்டாக்காமல் எச்சரிக்கையாகவும், சிந்தனைத் தெளிவோடும், தூரநோக்கோடும் முஸ்லிம் என்ற வகையில் நல்ல முன்மாதிரியாகவும் செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். இதற்காக சில விஷயங்களைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

1. ஒவ்வொருவரும் வேற்று மதத்தவர் உட்பட, அனைவரோடும் நீதமாக நடக்க வேண்டும். எத்தரப்பில் சத்தியம், உண்மை நீதி இருக்கிறதோ அத்தரப்பிற்கு குரல் கொடுகப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். மாற்றமாக, தான் சார்ந்துள்ள சமூகம் அசத்தியத்திலும், அநீதியிலும், அத்துமீறலிலும் இருக்கும் பட்சத்திலும் என் சமூகத்தின் பக்கம்தான் இருப்பேன் என்ற எண்ணம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனைப் பின்வரும் அல்குர்ஆன வசனம் எடுத்துக் காட்டுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்!. ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்!. அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

மேலும் அநீதி இழைப்பவர் முஸ்லிமல்லாதவராக இருப்பினும், அவரது பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வுக்குமிடையே எந்தவித திரையும் கிடையாது. ஆதலால் முஸ்லிம் என்பதனால அநீதி இழைக்கும் போது, அது அனுமதிக்கப்பட்டது எனும் நினைப்பில் இருத்தலாகாது. கண்டிப்பாக அநீதி இழைக்கப்பட்டவனின் பக்கம் அல்லாஹ் இருப்பதோடு. அநீதி இழைத்தவர்களுக்கு எதிராகவும் இருப்பான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

2. நாம் முஸ்லிம்கள் என்ற வகையில் எங்களது சொல்லாலும் நடத்தைகளாலும் இஸ்லாத்திற்கு நற்சான்று பகர வேண்டும். நமது வியாபாரம், கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய அனைத்து சமூக விவகாரங்களிலும் சிறந்த முன்மாதிரியாக வாழ கடமைப்பட்டுள்ளோம்.

3. நன்மையான விடயங்களுக்கு ஒத்துழைப்பதுடன், தீமையான, அநீதியான விடயங்களுக்கு எதிராகவும் செயலாற்ற வேண்டும். மாற்று மதத்தவர் நம்மீது வரம்புமீறி முறைகேடாக நடந்தாலும் நாம் அவர்களோடு முறையாக நடந்துகொள்ள வேண்டுமென்பதே இஸ்லாத்தின் நிலைபாடு ஆகும். ஏனெனில், தீமையை தீமையால் இல்லாதொழிக்க முடியாது. தீமையை நன்மையாலும், நன்மையான வழிமுறைகளாலுமே திருத்தவும், இல்லாதொழிக்கவும் முடியும் என்பதையே இஸ்லாம் போதிக்கிறது. இதனை அல்குர்ஆன் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது:

புனித பள்ளியை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!. அல்லாஹ்வை அஞ்சுங்கள்!. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)

ஒருவர் முஸ்லிமாக இருப்பினும்கூட, நன்மையான விடயங்களில் மாத்திரமே உதவ வேண்டும். தீமைகளுக்குத் துணைபோகக்கூடாது. தனது இனத்திற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அநீதியிலும், அத்துமீறலிலும் தீமையான விஷயங்களிலும் துணை போவதே இனவாதமாகும் என்பதை ஏற்கனவே ஹதீஸ் ஒன்றின் மூலம் பார்த்தோம்.

4. மாற்று மதத்தவராயினும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், அவர்களையும் மதிக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை. இதற்கு நபி முஹம்மது(ஸல்) அவர்களது வாழ்விலே நடந்த ஒரு சம்பவம் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

ஒரு முறை யூத ஜனாஸா (மரணித்த உடல்) ஒன்று பாதைவழியே கொண்டு செல்லப்பட்டபோது நபியவர்கள் எழுந்து நின்றார்கள். இது குறித்து ஸஹாபிகள் வியப்பாகக் கேட்கவே, "இதுவும் ஒரு மனித ஆத்மா அல்லவா?" எனக் கூறினார்கள்.

அதேபோல, கலீபா உமர்(ரலி) அவர்கள் பைத்துல் முகத்தஸை (ஃபலஸ்தீனில் உள்ள புனித பள்ளி) மீட்டபோது அதன் சாவியை ஒப்படைப்பதற்கென பாதிரிமாரின் அழைப்பிற்கிணங்க செல்லும் வழியில் தொழுகைக்கு நேரமானது. எதிர்ப்பட்ட கிறிஸ்துவ தேவாலயத்தில் தொழுமாறு கலீபாவிடம் வேண்டப்பட்ட போது அதனை கலீபா மறுத்துவிட்டார்கள். மற்றுமொரு முறை உமர்(ரலி) அவர்கள், வீடு வீடாக யாசகம் கேட்டுக்கொண்டிருந்த ஒரு யூத கிழவரைக் கண்டு அவருக்க இறக்கும்வரை பைத்துல்மாலிருந்து (பொதுக் கருவூலம்) உதவி நிதி வழங்கிட ஏற்பாடு செய்தார்கள்.

5. நாட்டுப் பற்றுள்ளவர்களாகவும், அதன் அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்கும் உதவுபவர்களாக வாழ்வது காலத்தின் தேவையாகும். இது இஸ்லாத்தின் அடிப்படையில், இஸ்லாத்திற்கு சான்று பகர்வதாக அமைய வேண்டும். மாறாக பயனற்றவர்களாக ஏனையோருக்கு தொல்லை தருபவர்களாக வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் விரும்புவதில்லை.

மேற்கூறப்பட்ட மிக முக்கியமான விஷயங்களோடு கால, சூழ்நிலை, சமூக மாற்றங்களை கவனத்திற்கொண்டு அவதானமாக நடந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அத்துடன் நம்மிடத்தில் காணப்படுகின்ற சில விஷயங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. தீமையான சமூக விரோதச் செயல்களுக்கு முஸ்லிம்கள் துணைபோகாதிருக்க வேண்டும். போதைவஸ்து வியாபாரம், வட்டி, மதுபான கடைகள் இவைகளை முஸ்லிம்களே நடத்துவது கவலைக்குறியது.

2. ஆடம்பர, வீண்விரயங்களை திருமணம் போன்ற வைபவங்களில் முற்றாக தவிர்த்தல், வீடு வாகனங்கள் போன்றவற்றை தேவைக்கேற்ற அளவு மட்டும் அமைத்துக் கொள்ளல்.

3. வறுமை, பிணி போன்ற கஷ்டங்களினால் அல்லலுறுவோர் எந்த மதத்தவராயினும் அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவுவதை இஸ்லாம் மிகவும் வரவேற்கிறது.

4. தவறான விஷயங்களுக்கு பிற மத்தவர்களைக் காட்டி, அவற்றைத் திருத்த முனைவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

5. பிற சமூகத்தவரது மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களது மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். மார்க்க விஷயமாயின் சமூகச் சூழலைக் கருத்திற் கொண்டு சமயோசிதமாகச் செயற்பட வேண்டும்.

6. இனப்பற்றை வெளிப்படுத்துதற்காக பட்டாசு கொளுத்துதல், பந்தயம் கட்டுதல் போன்றவற்றை முற்றாகத் தவிர்ந்து கொள்வது இன்றியமையாததாகும். (உதாரணம் கிரிகெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் பட்டாசு வெடிப்பது).

அனைத்து விஷயங்களிலும் நடுநிலையான சிந்தனையும், செயற்பாடும் மிகமிக அவசியமானது. நடுநிலையாக அமைகின்ற போது ஒரு தீமையை அதன் வரையறைக்குள் வைத்து நோக்க முடிகின்றது. ஒரு சமூகத்தில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலை, முழு சமூகத்தின்மீதும் சாட்டி விடுகின்ற நிலையை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஏனெனில் நிரபராதிகளும் குற்றவாளிகளாக்கப்படும் அநியாயத்தைச் செய்துவிடும் நிலைமை ஏற்படுகிறது.

ஆகையால் இனவாதிகளுக்குள் சிலரே இந்த சமூகத்திற்கெதிராகச் செயற்படுகின்றனர். அவர்களை இனங்கண்டு தடுத்து நிறுத்த முயலவேண்டும். இதனை எதிர்க்கின்ற சமூகத்தின் மேல் நடுநிலையான மதகுருமார், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை, எழுத்துமூலம் விவாதங்கள், கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்க மாநாடுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும்.

___________________________________
மார்ச் 2000, அல்ஹஸனாத் இதழில் வெளிவந்த "இனவாத சக்திகளுக்கு முன்னால் முஸ்லிம் சமூகம்" என்ற கட்டுரையிலிருந்து தொகுத்தெழுதியது.

சுமைதாங்கி

இப்னு அஹமது

ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.

சுமார் 22 முதியவர்களைக் கொண்ட அந்த முதியோர் இல்லத்தில் அலுவலகத்தை தாண்டியதும் இடதும் வலதுமாக சுமார் 10 அறைகள். இடது வரிசையில் மூன்றாவது அறை பாத்தும்மாவுடையது.

"மேலூருக்கு தந்தி குடுத்துருக்கு! இன்னும் யாரையும் வரக்கானோம்!... "

தாழ்வாரத் தின்ணையில் இரண்டு முதியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அமைதியான இரவுப் பொழுதில் குளிர் காற்றின் வேகத்தில் சவுக்கு மரத்தின் சப்தம் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. கூடவே உருக்குழைந்து தளர்ந்த பார்வையும், உலர்ந்த சருகான உடலுமாய் கிடந்த பாத்தும்மாவின் முனகல் சப்தமும் தெளிவாக கேட்டது.

எனக்கென்று யாருமில்லை, நான் நடந்து வந்த பாதைகள் நந்தவனமுமில்லை. என் பாதங்களை மொய்த்துக் கிடந்ததெல்லாம் நெருஞ்சிமுள் கூட்டங்கள்தான்!. அன்புக்கு ஏங்கி தடுமாரிய எனது பாதங்களைத் தொடர்ந்து தாக்கியதெல்லாம், உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள்தான்! குடும்பச்சுமை தூக்கி தள்ளாடிக் கொண்டிருக்கையில் ஏனோ மறந்து விட்டேன் நான் சுமைதாங்கி என்பதை. முதுமையின் தாக்குதலில் சிறகொடிந்த பறவையாய் வீழ்ந்து கிடக்கின்றேன் இந்த முதியோர் இல்லத்தில். மங்கிய பார்வையில், எனக்கு மிக அருகாமையிலிருக்கும் இந்த மருந்து பாட்டில் கூட மங்கிய பெரிய பிம்பமாய் என்னை பயமுறுத்துகின்றதே! என் கண்களின் பார்வைக்கென்று இங்கு ஒன்றுமில்லை.பிய்ந்த கூரையும், வெடித்த சுவர்களும், ஜன்னல் வழியாக எப்போதாவது கரையும் அந்த வீதிக் காகத்தையும் தவிர. இப்பொழுதெல்லாம் என் உதடுகள் என் கட்டுப்பாட்டையும் மீறி ஏனோ வார்த்தைகளை உதிர்த்துவிடுகின்றது.

செய்தாலி!. மக்கா.. செய்தாலி!...

நான் புலம்புகிறேனா?!... ஆ!.. இது என் பேரனின் பெயரல்லவா?!..

தூக்கி வளர்த்த என் புதல்வன் என்னை பாரமாய் நினைத்தபோதும் வந்த மருமகள் என்னை வார்த்தையால் குத்தியபோதும்... தென்றலாய் தழுவிக் கொண்டவனல்லவா என் செய்தாலி. என் முதுமை அவர்களுக்கு சுமையாகி கழட்டிய செருப்பாய் என்னைத் திண்ணையில் வீழ்த்துகையில் என்னுடன் ஒட்டி உறவு பாராட்டியவனல்லவா என் செய்தாலி!

மிஞ்சிய பழையகஞ்சியை மிளகாய் தொட்டு என்னோடு அமர்ந்து உண்டவன். என்னைப் போன்றே மிளகாயைக் கடித்து, உரைத்துத் துளிர்த்த கண்ணீர் துளியோடு என்னைப் பார்த்து சிரித்தவனல்லவா என் செய்தாலி!

என் உதடுகள் இந்த மரணத்தின் நுழைவு வாயிலில் காலைப் பதித்திருக்கும் இந்த வேளையில், என் செய்தாலியின் பெயரை என் உதடுகள் உதிர்ப்பதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. பெற்ற மகனும் புகுந்த மருமகளும் என்னை இரக்கமின்றி நடத்திய போது இந்த கன்றுக்கு மட்டும் ஏன் என்மீது பாசம்!...

எனது தலையணையின் நனைந்த பகுதியின் குளிர்ச்சியை என் கன்னங்கள் உணர்கின்றன. என்ன இது?! இப்போழுதெல்லாம் அடிக்கடி அழுதுவிடுகின்றேன்!. எனது சிந்தனையில் சின்ன இடையூறு. சிலஜோடி செருப்புகளின் சப்தம் கேட்கிறதே!... ஏதாவது புதிய சேர்க்கையாக இருக்கும் அல்லது பக்கத்து அறை தங்கம்மாவைப் பார்க்க யாராவது சொந்தங்கள் வந்திருப்பார்கள்.

இந்த முதியோர் இல்லத்தில் கொஞ்சம் வசதியானவள் இந்த தங்கம்மாதான். அவள் மகன் அமெரிக்காவில் இருக்கிறானாம். இங்கு மகன் வந்து பார்க்கும் ஓரே தாய் இந்த தங்கம்மாதான். நான் ஏன் தங்கம்மாவைப் போல் இல்லை! என் மகன் ஏன்?.....

எப்படி எல்லாம் வளர்த்தேன் அவனை. அவன் தடுக்கி விழும்போதெல்லாம் என் நெஞ்சம் பதரியதே!.... தந்தையுடன் சின்ன மனஸ்தாபத்தில் ஓடிப்போனானே!.... அப்போது இந்த செருப்பில்லாத கால்கள் தேடாத இடமில்லை. கல்யாணம் முடித்தால் திருந்திவிடுவான் என்ற சுற்றத்தினரின் அறிவுரையோடுதானே கல்யாணம் முடித்தோம்... திருந்துவான் என்ற ஏக்கங்கள் களைந்திடும் முன்பே திரும்பி விட்டானே!

பத்து மாதங்கள் சுமந்து நான் பெற்ற என் புதல்வன் வார்த்தைகளால் வீசிய அமிலத் தாக்குதலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!

என் அன்புக் கணவனின் பிரிவுக்குப்பின், சிந்தனையில் தொக்கி நின்ற கேள்விகளெல்லாம் எதிர்காலம் குறித்துத்தான்!.

அச்சம் கவ்விக்கொண்ட என் மனதுக்குள். நான் பெற்ற மகன் இருக்கின்றானே என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன், என்றாலும் துரத்திய சோகங்களுக்கு முன்னால் தலைத் தெறிக்க நான் ஒடிய சில வருடங்கள் இருக்கின்றதே!.... அந்தச் சோகங்களைச் சொல்வதற்கு என்னுள் போதிய கண்ணீர் துளிகள் இருக்கின்றது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

எ... என்ன சப்தம்? ஆம்! என் கைகளுக்கு அருகிலிருந்த மருந்து பாட்டில் கீழே விழுந்திருக்க வேண்டும். என் இதயத்தைப் போன்று அதில் விரிசல் ஏற்பட்டிருக்கும் அல்லது உடைந்து சிதறியிருக்க வேண்டும்.

இந்த அறையை சுத்தம் செய்யும் பெண் பார்த்தால் திட்டுவாளே! போனவாரம் கூட கெழடு... இங்க வந்து என் உசுற வாங்குது... செத்து தொலைய மாட்டேங்குதே!.. என்று திட்டினாளே! இதற்கு முன்பு வேலை செய்த பெண்ணைப்போல இவள் நல்ல குணம் இல்லை. என் செய்தாலி இருந்தால் ஏதாவது உதவி செய்திருப்பான். எங்கே அவன்? எப்படி இருக்கின்றான்?

8 வருடங்கள் உருண்டோடி விட்டதே! அன்று பார்த்த அந்த முகம் சற்று மாறிஇருக்கலாம். எண்ணங்கள் சுழன்று எங்கெங்கோ சென்றாலும். அன்று அந்த அறையை சுத்தம் செய்யும் பெண் கூறிய வார்த்தை என் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கெழடு! செத்து தொலையமாட்டேங்குதே!

ஆம்! நான் பலவீனத்தை உணர்கின்றேன்! அந்த பாழாய்ப்போன மருத்துவன் கடைசியாய் பார்க்கவந்தபோது இருமுவதற்கு கூட வரைமுறை வகுத்துவிட்டான். இது எனது மரணத்தின் மிக நெருங்கிய வேளையாக இருக்கும் என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் என் உதிரத்தை பாலாய் ஊற்றி வளர்த்தேனே! என் மகனின் மனது ஏன் இந்த மதில் சுவரைவிட கடுமையாகிவிட்டது? இந்த இறுதி வேளையில் என்னை அரவணைத்துக்கொள்ள யாருமே இல்லையே!..

ச்சே!... ஏன்? நான் தேவையில்லாமல் புலம்புகின்றேன்... என்மகன் வருவான்! என்மருமகள் வருவாள்! என் பேரன் செய்தாலி வருவான்!... நினைவுகளின் தாக்கம் மெல்லக் குறைந்து கண் அயர்ந்து விட்டேன்!.

அதிகாலையில் முதியோர் இல்லத்தின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தூக்கின் அருகில் கூடியிருந்த சிறு கூட்டத்தில் பேசப்படும் அந்த வார்த்தை மட்டும் அந்த அமைதியான சூழலில் தெளிவாய் கேட்டது.

"மேலூரிலிருந்து மகன் இன்னும் வரலியாமே!".


_______________________________________
சந்தூக் = இறந்த உடலை எடுத்துச் செல்லும் திறந்த பெட்டி

நண்பர் இப்னு அஹமதின் சிறுகதை. நேற்றுதான் என்னிடம் கொடுத்தார். வலைப்பதிவிற்காக கதையை தட்டச்சு செய்துவிட்டு சரிபார்க்கும் போதுகூட என் நெஞ்சு கனக்கிறது.

நினைவலைகள்

இப்னு அஹமது

பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது... "மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்" என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் "சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா" என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.

கைக்கடிகாரத்தைத் துடைத்து மணியைப் பார்த்தார் பஷீர். நேரம் 2:32 என காட்டியது. குளிர் காற்றும் மண்வாசனையும் பிற்பகலில் எதிர்பார்க்காததுதான். அண்ணார்ந்து வானம் பார்த்தார். அடுக்கடுக்காய் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. சற்று வலப்புறம் நகர்ந்து பள்ளியின் எல்லைச் சுவரை ஒட்டி நடந்து பின்புறத்தை அடைந்தார். அடர்ந்த கிளைகள் விட்ட புளிய மரம் அது.

"ஒரு காலத்துல முத்து வாப்பா ஹாஜியார் நட்டு வச்ச மரம் இன்னைக்கு அவரு பேரு சொல்லுது" என்று குஞ்சுபாய் மோதினார் அடிக்கடி கூறும் வாசகம் ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவர் விதைத்த விருட்சம் துளிர்விட்டு தளிராகி தழைத்து கிளை படர்ந்த பெருமரமாகியிருந்தது.

பஷீர் அஹமது தன் பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்த்தார்.

வயது இருபத்தியாறைக் கடந்திருந்த நேரம். தங்கை ஹலீமாவின் குரல், "பஷீரண்ணே...! வாப்பா கூப்புடுதாங்கோ"

உற்ற நண்பன் குத்தூஸுடன் இந்த புளிய மரத்தடியில் இருக்கும் போதுதான் அழைப்பு வந்தது. சங்கரன் கோவில் ஏஜண்ட் வீட்டிற்கு வந்திருந்தார்.

"ஜெளபரு பாய்! இந்தக் காலத்துல சவூதி விசா கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். 10 விசா மொத்தமா கெடச்சிருக்கு, மொதல்ல பத்தாயிரம் தாங்கோ. பையன் போய் நல்லாயிருக்கேன்னு கடுதாசி வந்தப்புறம் மிச்ச பணம் கொடுத்தா போதும். தொறைமுகத்துல வேலை. நம்ம புள்ளையோ நெறையே பேரு இருக்குதுவோ."

ஏஜெண்டு வாப்பாவுடன் பேசி தொகை முடிவாயிற்று.

இரண்டு மாதம் கழித்து பம்பாயில் மெடிக்கல் என்று தபால் வந்தது. மஞ்சள் பையுடன் புறப்பட்ட போதுதான், உம்மா பாத்துமாவின் விசும்பல் சப்தம் கேட்டது. ஏங் கண்ணூ...! என்று பாசத்தை அடக்க முடியாமல் அழுதாள். தாய் ஏன் அழுகிறாள் என்று அறியாமல் ஆறு வயது ஹலீமாவும் அழத்தொடங்கினாள்.

"அழாதீயோ!... நம்ம மொம்மதலி மவன் மூஸா கூட அங்கேதான் இருக்கான்." சாச்சாவின் ஆறுதல் வார்த்தைகளால் அழுகைகள் தற்காலிகமாக அடக்கப்பட்டன.

"அலாவுதீன் மாமா! தர்ஹாவுக்கு எண்ணைய் ஊற்ற மறந்திறாதீங்கோ!"

சிந்தா மதார்ஷா ஒலியுல்லாவின் சன்னதியில் எண்ணைய் ஊற்றி ஃபாத்திஹா ஓதி, சர்க்கரை பரிமாறிய பின், சம்பாதிக்க வெளிநாடு புறப்பட்டான் பஷீர் அஹமது.

சவூதி வாழ்க்கை தொடங்கியது. காலங்கள் உருண்டோடின. வேலை, ஓவர் டைம், கேன்டீன் சாப்பாடு, தூக்கம், புதிய இடம், புதிய நண்பர்கள் அனைத்தும் பழகிப் போனது. அரபியில் ஒரிரு வார்த்தைகளும் தெரிந்திருந்தன.

4 வருடம் கழிந்து முதல் வெக்கேஷனில் கல்யாணம். 41-ஏ, பிச்சுவனத் தெருவில் வசிக்கும் மு.நா. ஜஹுபர் சாதிக் அவர்களின் குமாரன் தீன் குலச்செல்வன் ஜெ. பஷீர் அஹமதுவிற்கும் 11-பி, பெரிய பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் பக்கீர் மைதீன் அவர்களின் குமாரத்தி தீன் குலச்செல்வி மஹமூதா பேகத்திற்கும் என்று நிக்காஹ் வாசிக்கப்பட்டு முடிந்தது.

ஒரு பெட்டி, ஒரு தோல்பை மற்றும் நிறைய சோகங்களைச் சுமந்தவனாக சவூதி திரும்பினான் பஷீர் அஹமது. 8 மாதம் கழிந்தது. மகள் பிறந்தசெய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைந்தான். மகிழ்ச்சிகள் நிரந்தரமாக இருக்கவில்லை.

"தந்தையின் உடல்நலம் சரியில்லை, உடன் பணம் அனுப்பிவை".

கடிதவரிகளைப் பார்த்துத் துவண்டு போனான் பஷீர் அஹமது.

ரூபாய் 10 ஆயிரத்திற்கான வங்கிக் காசோலை அனுப்பிவைக்கப்பட்டது. 6 மாதத்தில் கடன்களை எல்லாம் அடைத்து பெருமூச்சு விட்ட பஷீருக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி.

"வாப்பாவுக்கு ரொண்டாந்தறமா மாரடைப்பு வந்திருச்சு. டாக்டர் சொல்லிட்டார் இனி வெளியே நடக்கக்கூடாது. எந்த வேலைகளும் செய்யக் கூடாது", என்று தங்கை ஹலீமாவின் கையெழுத்தில் தாயின் சோக வரிகள்.

26 வயதில் சவூதியில் கால் பதித்தவனுக்கு பெற்றோரைப் பிறிந்த ஏக்கம், மனைவியின் பிரிவு. குழந்தையைக் காண ஆவல் என்று பல கவலைகள் சூழ்ந்து இருந்தன.

ஆனாலும் குடும்பச் சுமையின் பெரிய பாரம் தன் தோள் மீது சுமத்தப்படுவதை அன்றுதான் உணர்ந்தான் பஷீர்! தளர்ந்த தந்தையின் குடும்பச் சுமைகள் வளர்ந்த மகன் மீது சுமத்தப்பட்டது. பெற்றோரின் பாசவரிகள். மனைவியின் ஏக்கம். மகள் நடக்கத் துவங்கிய செய்தி என்று பத்து வருடங்கள் உருண்டோடின.

தங்கையின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணச் செலவுகள் பட்டியலிடப்பட்டன. நஷ்டத்தில் ஏலச்சீட்டெடுத்து 50,000 ரூபாய் அனுப்பிய பஷீருக்கு பிரிவுகளில் சருகாகும் சவூதி வாழ்கை போதும், ஒருவழிப் பயணமாய் தாயகம் திரும்பலாம் என்ற எண்ணக் கனவுகள் கடன் சுமைகளால் மீண்டும் ஒரு முறை நகர்த்தப்பட்டது. கூடவே தந்தையின் மரணம். அடுத்த இரு மாதங்களின் தாயின் மரணம். தங்கையின் பிரசவச் செலவு என்று செலவுகள் சங்கிலித் தொடராய்த் தொடர்ந்தன. பெற்றோரின் பிரிவில் துளிர்ந்த கண்ணீர்த் துளிகள் இருட்டுக்குள் துடைத்துக் கொள்ளப்பட்டன.

சோகத்தில் எழுந்த விசும்பல் சப்தம் ஏ.சியின் சப்தத்தோடு அமிழ்ந்து போனது. வேலையிலிருக்கும் போது மூர்ச்சையாகி நண்பர்கள் சகிதம் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அந்தச் சுபச் செய்தி வந்தது.

"மகள் பூப்பெய்து விட்டாள்".

தொடர்ந்து வந்த மனைவியின் கடிதங்களில் பாசங்கள் மற்றும் விசாரிப்பு வார்த்தைகளை விட மகளைக் கரை சேர்க்க வேண்டும் என்ற ஏக்கங்களே அதிகமாக இருந்தது.

"நல்ல பையனாம், ரியாத்தில் வேலையாம், பெரிய இடமாம், வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுறாங்க..." என்று எண்ணங்கள் பரிமாறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 1-ல் நிக்காஹ் நடந்தது.

அவ்வப் போது கேம்ப்களில் நடைபெறும் தமிழ் பயான்களில் கலந்து கொள்வது பஷீர் பாயின் வழக்கம்.

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவனுக்கு யாதொரு இணை கிடையாது, தர்ஹா வழிபாடு கூடாது, இணைவைத்தல் இஸ்லாத்தில் பெரும் பாவம்" ஆகிய பயான் வரிகள் பஷீர் அஹமதின் சிந்தனையைத் தூண்டின. தர்ஹா வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த பஷீர் பாயிக்கு குற்ற உணர்வு மேலிட்டது.

தர்ஹாவில் ஃபாத்திஹா ஓதியது, எண்ணை ஊற்றியது, மகள் பிறந்ததற்கு 101 ரூபாய் காணிக்கை செலுத்தியது. என்று தான் செய்த தவறுகளை எண்ணி இறைவனிடம் அழுது பாவமன்னிப்பு கேட்டார். ஐவேளை தொழுகையை குறித்த நேரத்தில் தொழலானார். கலாச்சார மையத்தில் நடக்கும் பயான் வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்லலானார்.

தன் தங்கைக்கும், மனைவிக்கும் இஸ்லாமிய பயான் சிடிக்கள் தவறாமல் அனுப்பிவைத்தார். மருமகனுக்கு நல்ல சம்பளம், ஊரில் தற்போதுதான் புது வீடு கட்டத்தொடங்கியுள்ளார். மருமகன் தவ்ஹீத் பற்றி அறிந்திருப்பதால் மகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.

நமக்கு ஏற்படும் கவலைகளை எண்ணி நொந்து கொள்வதைவிட இறைவன் நாடியது நடக்கும் என்று பொருமை காத்தார் பஷீர். மனம் சற்று நிம்மதியடைந்தது.

வயது 60-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. துக்கங்களை மட்டுமே சுவாசித்து 35 வருடங்களை கடந்து நிற்கையில், கம்பெனி அறிவிப்புப்பலகையில், நஷ்டமடைந்து விட்டதனால் கம்பெனி விரைவில் மூடப்படும், 600 பணியாளர்கள் தாயகம் அனுப்பப்படுவார்கள் என்ற செய்தி காணப்பட்டது. உடல் நிலை தளர்வடைந்து முதுமையின் நுழைவாயிலில் நின்ற பஷீருக்கு ஓய்வின் அவசியத்தை அப்பலகை உயர்த்தியது.

அவ்வப்போது மகளும், மருமகனும், மனைவியும் முடித்துவிட்டு வந்துவிடுங்கள் என்ற அழைப்புக்கெல்லாம் மெளனத்தையே பதிலாய் தந்த பஷீர், காலத்தின் கட்டாயம், இது இறைவன் ஏற்பாடு என்று எண்ணி முதல் அணியிலேயே தாயகம் திரும்பினார்.

காற்றில் புளியமரம் வேகமாய் அசைந்தது. சிறுவயதில் தனக்கு சினேகிதமான அந்த புளிய மரத்தைத் தொட்டவாரே பள்ளிவாசலில் தான் செய்த குறும்புகளை எண்ணி மெல்ல புன்னகைத்தார் பஷீர்.

"தன் உற்ற நண்பன் குத்தூஸு என்ன ஆனான். 15 வருடங்களுக்கு முன் ஒரு வெக்கேஷனில் அவன் துபாயிலிருப்பதாகச் செய்தி" நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்தார்.

குத்தூஸு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 6 மாத படுக்கைக்குப்பின் மரணம் அடைந்த செய்தியை பஷீருக்கு யாரும் சொல்லவில்லை.15 வருடங்களில் ஊர் வெகுவாக மாறியிருந்தது. பழைய நண்பர்கள் யாருமே தென்படவில்லை. தர்ஹாவின் கதவுகள் மூடப்பட்டு பாழடைந்து கிடந்தது.

அப்போது பஷீருக்கு இருந்த ஒரே சினேகிதம் முத்து வாப்பா ஹாஜியார் நட்ட புளியமரம் மட்டும்தான். சிறு வயதில் தான் அமர்ந்து விளையாடிய ஹவூது படிக்கட்டை காண ஆவல் கொண்டு மெல்ல நகர்ந்து படிக்கட்டில் அமர்ந்தார். மழைத்துளிகள் ஒவ்வொன்றாக ஹவூது தண்ணீரில் விழ அதில் ஏற்பட்ட வட்ட அலைகளை ரசித்துக் கொண்டிருந்த நேரம்,

"தாத்தா... உம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, மழ வர்ரமாதிரி இருக்காம், இந்தாங்க குடை" என்று தன் பேத்தி சுமையா கூறக் கேட்டு எழுந்தார்.

தாத்தாவும், பேத்தியும் குடையுடன் நடந்தனர். புளிய மரம் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது.

_________________________________
எங்களின் சுவனப்பாதை சிற்றிதழில் போன மாதம் வெளியாகிய நண்பர் இப்னு அஹ்மது அவர்களின் இச்சிறுகதையை வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.