Sunday, September 04, 2005

குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 3

மேலும் பெட்ரோலை ஊற்றி எரிப்பதற்கும், கேஸ் அடித்து எரிப்பதற்கும் முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் லட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். இந்த பயிற்சிகளை எல்லாம் இவர்கள் மிகவும் சிரமங்களை மேற்கொண்டு தான் எடுக்கிறார்கள் என்பதை நாம் பல நேரங்களில் உணர மறுக்கிறோம். அனைத்தையும் நாம் இலகுவாக பெற்றிட முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. மாறாக கஷ்டப்படாமல் எதையும் சாதிக்க முடியாது. உடலை வருத்தாமல் நம் இலக்கை அடைய முடியாது என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்.

1993ல் பம்பாய் கலவரத்தில் முஸ்லிம்களை அழிப்பதற்கு இவர்கள் ஹிட்லரின் பாணியை கையாண்டார்கள். வாக்களர் பட்டியலை வைத்துகொண்டு முஸ்லிம்களின் வீடுகளில் முதல் நாள் இரவோடு இரவாக பெயிண்டினால் அடையாளம் இட்டார்கள். அடுத்த நாள் அந்த வீடுகளை எல்லாம் சூறையாடி, தீயிட்டு கொளுத்தினார்கள். தீயுடன் சேர்ந்து முஸ்லிம்களின் உடல் ஜுவாலை விட்டு எரிவதைக் கண்டு ரசித்தார்கள்.
இதே பாணியை சற்று நவீன படுத்தி குஜராத்தை அழித்தார்கள். காலம் மாறுகிறது. விஞ்ஞானம் வளர்கிறது. பாசிஸ சிந்தனையும் நவீனப்படுகிறது.

இனப்படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே முஸ்லிம்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள், முஸ்லிம்களின் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், முஸ்லிம்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. இவர்கள் கஷ்டப்படகூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வளவு அக்கறை. (FrontLine March 29, 2002)

மேலும் பள்ளிவாசல் எத்தனை இருக்கின்றன? எங்கெங்கு இருக்கின்றன? தர்காக்கள், முஸ்லிம்கள் முக்கியமாக கருதும் இடங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் அலுவலகங்கள், இப்படி எதையும் விட்டுவைக்காமல் ஒரு முழு அளவிளான பட்டியல் திரட்டப்பட்டது.

குஜராத் கலவரத்தில் சுமார் 500 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் தரைமட்டமாக்கப்பட்டன. படங்களுக்கு இங்கு சுட்டவும்.

கலவரங்களுக்கு பல நாட்கள் முன்பே, 'முஸ்லிம் கடைகளில் வாங்காதே! பொருளாதார புறக்கணிப்பு ஒன்றே வழி! இன்று முதல் நாம் சபதம் ஏற்போம். நான் முஸ்லிம் கடைகளில் வாங்கமாட்டேன்! அவர்களின் உணவகங்களில் உண்ண மாட்டேன். ஹிந்து பணிமனைகளிலேயே நமது வாகனங்களைப் பழுது பார்ப்போம். முஸ்லிம் பணிமனைகளில் பழுது பார்க்க மாட்டோம். ஊசியிலிருந்து தங்கம் வரை எதையும் நாம் முஸ்லிம்களிடம் வாங்க மாட்டோம்.

முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க மாட்டோம். அவர்களிடம் வேலை செய்ய மாட்டோம். அவர்களுக்கு வாடகைக்கு வீடோ, கடையோ கொடுக்க மாட்டோம். அவர்களிடம் வாடகைக்கு வீடோ, கடையோ எடுக்க மாட்டோம். முஸ்லிம்களுக்கு கல்வி கற்று கொடுக்க மாட்டோம். கல்வியை பெற மாட்டோம்.' என்ற இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள். மேலும் இதை பத்து பேருக்கு நகல் எடுத்து கொடுக்கும் படி கேட்டு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

அக்டோபர் மாதம் 1989, பாகல்பூர் 1000 முஸ்லிம்களை காவு கொண்ட கலவரம். இதே விஹிப, பஜ்ரங்தள் முன்னின்று நடத்தியது. அந்த கலவரத்திலும், இதே போன்ற துண்டு பிரசுரம் இப்படி கேட்டு கொண்டது: 'முஸ்லிம்களை துடைத்தெறிய வேண்டும், மிஞ்சியவர்களை பிச்சைகாரர்கள் ஆக்கவேண்டும்' என்று. அதேபோல் குஜராத்திலும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இத்தோடு மட்டுமல்லாது பள்ளிவாசல்களை இடிக்க எங்கிருந்து புல்டோசர்களை கொண்டு வரவேண்டும். எத்தனை புல்டோசர்கள் பயன்படுத்தபட வேண்டும். இடிபாடுகளை அகற்றுவதற்கு எத்தனை கார்ப்பரேஷன் லாரிகள் பயன்படுத்தபட வேண்டும். இடிபாடுகளை எங்கே கொட்ட வேண்டும் என்ற அனைத்தையும் இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்திருக்கிறார்கள்.

எனவே, இவர்கள் வெகு நாட்களுக்கு முன்னரே கலவரத்தை தொடங்க திட்டம் போட்டு வைத்து விட்டார்கள். கோத்ரா நிகழ்வை இவர்கள் ஒரு சாக்காக எடுத்து கொண்டார்கள் என்பதை வாசகர்கள் மீண்டும் நன்றாக உணரவேண்டும்.

Ref:
ரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு

1 comment:

Anonymous said...

Not only Gujrath. If you analyze the events happened from when the "R.S.S" born, it's hands were behind that.

Surat, Bahalpur, Bombay, Koimbatore, Gujrath etc...

See how they killed Mahathma and the plannings behind that.

See the "Bunch of Thoughts" - we will understand their future plannings also.

Are u think only these writings and shoughtings will be effectful?

They didn't mind these silly doings. They will go back and establish their agenda - see the beforth BJP government's Educational Minister Murali Manohar Joshi, what he did is best example of this.