முகம்மதுக்கு முன்பு இறைத் தூதர்களாக இவ்வுலகில் அறியப்பட்டவர்கள் மொத்தம் இருபத்தைந்து பேர். அவர்களுள், முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இயேசு வரையிலான பதினேழு பேரைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியவர்கள், இறைவனாலேயே நல்வழி காட்டப்பட்டவர்கள் ஒருவகை. இறைவனிடமிருந்து மக்களுக்கு வேதத்தைப் பெற்று அளித்தவர்கள் இன்னொரு வகை.
முகம்மதுக்கு முன்னர் இப்படி வேதம் அருளப்பட்ட சம்பவம் மட்டும் மூன்றுமுறை நடந்திருக்கிறது. முதலாவது, மோஸஸுக்கு அருளப்பட்ட "தோரா" (குர்ஆன் இதனை "தவ்ராத்" என்று அழைக்கிறது. யூதர்களின் வேதமாக இருப்பது.) அடுத்தது, தாவீத் என்கிற டேவிடுக்கு அருளப்பட்ட சங்கீதம். (Psalm என்று ஆங்கிலத்திலும் ஸபூர் என்று குர்ஆனிலும் குறிக்கப்படுவது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இதனைப் பார்க்கமுடியும்.) மூன்றாவதாக, இயேசுவுக்கு அருளப்பட்ட "இன்ஜீல்" எனப்படும் Gospel).
இயேசுவுக்குச் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு "இறைத்தூதர்" (நபி) என்று அடையாளம் காட்டப்பட்டவர், முகம்மது.
முகம்மதுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்குமான வித்தியாசங்கள் பல. வேதம் அருளப்பட்ட விதத்தால் மட்டுமல்ல. தாம் ஓர் இறைத்தூதர் என்பதை உணர்ந்த வகையிலேயே முகம்மது மிகவும் வித்தியாசமானவர். மற்ற தூதர்கள் அனைவரும் எதிர்பாராத ஒரு கணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதன்பேரில் தம்மைத்தாமே இனம் கண்டுகொண்டுவிட்டார்கள். முகம்மது மட்டும், வருடக்கணக்கில் போராடி, உள்ளும் புறமும் ஏராளமான வேதனைகளை அனுபவித்து, ஆன்மிகச் சாதனை முயற்சிகளின் விளைவாக எத்தனையோ உடல் மற்றும் மன உபாதைகளை அனுபவித்து, போராடிப் போராடி, இறுதியில்தான் தாம் "அனுப்பப்பட்டிருப்பதன்" காரணத்தைக் கண்டறிந்தார்.
இந்த ஆன்மிகக் காரணங்கள் மட்டுமல்ல; மற்ற இறைத்தூதர்கள் அனைவரும் ஆன்மிகவாதிகளாக மட்டுமே அடையாளம் காணப்பட்ட நிலையில், முகம்மது ஒருவர்தாம் மக்கள் தலைவராகவும், மத்திய ஆசியாவின் தன்னிகரற்ற அரசியல் வடிவமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். அரேபியர்களின் வாழ்வில் சுபிட்சம் என்பது முதல்முதலாக எட்டிப்பார்க்கத் தொடங்கியதே முகம்மதுவும் அவரது தோழர்களும் வரிசையாக ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து (அவர்கள் கலீஃபாக்கள் எனப்படுவார்கள்.) ஆளத் தொடங்கியபிறகுதான்.
அரேபியர்களின் சரித்திரத்தில் முகம்மது ஓர் அத்தியாயம் அல்ல. மாறாக, அவர்களது சரித்திரத்தின் மையப்புள்ளியே அவர்தான். முகம்மதை மையமாக வைத்துத்தான் அவருக்கு முன், பின் என்று நம்மால் அரபுகளின் சரித்திரத்தை ஆய்வு செய்ய முடியும்..
இருபத்தைந்து வயதில் முகம்மதுக்குத் திருமணமானது. அவரைக் காட்டிலும் வயதில் மிகுந்த, அவரைக் காட்டிலும் பொருளாதார அந்தஸ்தில் உயர்ந்த, கதீஜா என்கிற விதவைப் பெண்மணி அவரை விரும்பி மணந்துகொண்டார். முகம்மதின் நேர்மையும் கண்ணியமும் அவரைக் கவர்ந்து, அப்படி ஒரு முடிவுக்கு வரத் தூண்டியது.
திருமணத்துக்குப் பின், ஒரு கணவராகத் தம் கடமைகள் எதிலிருந்தும் விலகாமல், அதே சமயம், ஆன்மிகச் சாதனைகளில் நாட்டம் மிகுந்தவராக அடிக்கடி தனிமை நாடிப் போகக்கூடியவராகவும் இருந்திருக்கிறார் முகம்மது. மெக்கா நகரிலிருந்து சிறிது தொலைவில் இருந்த ஹிரா என்கிற குன்றுப் பகுதிக்குத்தான் அவர் தியானத்தின் பொருட்டு அடிக்கடி செல்வது வழக்கம். ஒருநாள், இருநாளல்ல.. வாரக்கணக்கில், மாதக்கணக்கில்கூட அவர் அங்கே தன்னிலை மறந்து தியானத்தில் இருப்பது வழக்கம்.
கிளம்பும்போது கொஞ்சம் உணவுப் பொருள்களை மட்டும் எடுத்துச் செல்வார். குடிக்கக் கொஞ்சம் தண்ணீர். அவருக்கு உடைமை என்று வேறு ஏதும் கிடையாது. தியானத்தில் உட்கார்ந்தால், எப்போது எழுவார், எப்போது எடுத்துச் சென்ற உணவைச் சாப்பிடுவார் என்பதற்கெல்லாமும்கூட உத்தரவாதமில்லை. சில சமயம் சாப்பிடுவார். சாப்பிடாமலேயே வாரக்கணக்கில் கண்மூடிக் கிடந்ததும் உண்டு. பல சமயங்களில் வெளியே போன கணவர் நாள் கணக்கில் திரும்பி வராததைக் கண்டு கதீஜா ஆட்களை அனுப்பித் தேடி அழைத்து வரச் சொன்னதும் உண்டு.
ஆனால், முகம்மதின் ஆன்மிகச் சாதகங்களுக்கு கதீஜாவின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வசதியான வாழ்க்கை படைத்தவராக இருந்தபோதிலும் தம் கணவரின் ஆன்மிக நாட்டத்தைப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்திருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது. முகம்மதின் வாழ்க்கையில் இது மிக முக்கியமானதொரு கட்டம்.
எப்போதும் ஹிரா மலைப்பகுதிக் குகைகளின் இருளுக்குள் கரைந்து, தியானத்தில் லயித்திருக்கும் முகம்மதுக்கு, எப்போதாவது ஒரு பிரமாண்டமான ஆகிருதி படைத்த ஒளியுருவம் கண்ணெதிரே தோன்றும். யாரென்று அடையாளம் தெரியாது. பார்த்த கணத்தில் உடல் தூக்கிப் போட்டு, பதற்றம் மிகுந்து, பேச்சற்றுச் சமைந்துவிடுவார். அந்த உருவம் யார் என்று அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை. அது தன்னை ஏன் நெருங்கி வருகிறது என்றும் புரிந்ததில்லை. முதலில் கொஞ்சம் பயந்தார். இன்னார் என்று இனம் காண முடியாததால் ஏற்பட்ட பயம்.
பலநாள்கள் இந்தப் போராட்டம் அவருக்குத் தொடர்ந்தது. உடலும் மனமும் மிகவும் களைப்புற்று, பதற்றம் மேலோங்கியவராக இருந்தவரை, அவரது மனைவியான கதீஜாதான் அவ்வப்போது தேற்றி, தியானத்தில் உற்சாகம் கொள்ளச் செய்து வந்திருக்கிறார்.
மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான், தன்னை நோக்கி வந்த அந்த ஒளியுருவத்தை முகம்மதால் இனம்கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.
அந்த மாபெரும் உருவம், ஒரு வானவருடையது. வானவர் என்றால் தேவர் என்று கொள்ளலாம். இறைவனின் தலைமைத் தளபதி என்று வைத்துக்கொள்ளலாமா? தவறில்லை. அவரது பெயர் ஜிப்ரீல்.
முந்தைய "இறைத் தூதர்கள்" அனைவருக்குமேகூட இந்த ஜிப்ரீலின் மூலம்தான் தன் செய்தியை இறைவன் சொல்லி அனுப்பினான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை.
தன்னை வருத்தி, தியானத்தில் தோய்ந்து, ஆன்மிகச் சாதனைகளின் உச்சத்தை முகம்மது தொட்டுவிட்டிருந்த நேரம் அது. அதுவரை தூர இருந்து அவருக்கு அச்சமூட்டிக்கொண்டிருந்த ஜிப்ரீல், அப்போது நெருங்கிவந்து ஆரத் தழுவினார்.
"ஓதுவீராக!" என்று முதல்முதலாக ஓர் இறைக்கட்டளையை வெளிப்படுத்தினார்.
ஆனால் முகம்மதுக்கு என்ன பதில் சொல்லுவது என்று விளங்கவில்லை. அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். பள்ளிக்கூடங்களுக்குச் சென்றவரல்லர். நல்லவர், நேர்மையாளர், ஏழைகளுக்காக மனமிரங்குபவர், ஒட்டுமொத்த மெக்கா நகரவாசிகளின் நல்லபிப்பிராயத்துக்குப் பாத்திரமானவர் என்றாலும், படித்தவரல்லர். அரபியில் ஓர் அட்சரம்கூட அவருக்குத் தெரியாது. சுயமாக அல்ல; எதையும் படித்துக்கூட அவரால் ஓதமுடியாது!
ஆனால் ஜிப்ரீல் தொடர்ந்து வற்புறுத்தினார். "ஓதுவீராக."
"நான் எப்படி ஓதுவேன்?" என்று திரும்பவும் கேட்டார் முகம்மது. மூன்றாவது முறையாக "ஓதுவீராக" என்று உத்தரவிட்ட ஜிப்ரீல், முகம்மதை இறுகக் கட்டிப்பிடித்து, விடுவித்துப் பிறகு சொன்னார்:
"உம்மைப் படைத்த இறைவனின் திருநாமத்தால் ஓதுவீராக. அவனே மனிதனை ரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக. இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோலைக் கொண்டுவந்து கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றைக் கற்றுத்தருபவனும் அவனே."
ஜிப்ரீல் சொல்லச்சொல்ல, தன்வசமிழந்த முகம்மது இவ்வசனங்களைக் கேட்டு கூடவே சொல்லிக்கொண்டு வந்தார். பின்னாளில் இச்சம்பவத்தை நினைவுகூர்ந்தவர், "அந்தச் சொற்கள் உச்சரிக்கப்பட்டதாக அல்ல; என் இதயத்தின்மீது எழுதப்பட்டதாக உணர்ந்தேன்" என்று அவர் சொல்லியிருக்கிறார்.
விடைபெறும் தருணத்தில்தான் ஜிப்ரீல் தன் வருகையின் நோக்கத்தை அவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். "ஓ, முகம்மது! நீர் அல்லாவின் தூதராவீர். நானே ஜிப்ரீல்."
இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? அதுவும் "காட்டரபிகளின்" சமூகத்தில்!
ஆனால், முகம்மதுவின் அனுபவத்தை அவரது மனைவி கதீஜா முழுமையாக நம்பினார். நம்பமுடியாத அளவுக்கு வியப்பூட்டும் பெண்மணியாகத் திகழ்ந்தவர் அவர். தமது கணவர் ஓர் இறைத்தூதர் என்பதை நம்புவதில் அவருக்குச் சிறு தயக்கம் கூட இருக்கவில்லை. அவரது அந்த ஆழமான நம்பிக்கை, இன்னும் ஆழமாக வேரூன்றும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
கதீஜாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் இருந்தார். மிகவும் வயதான அவரது பெயர் வரகாஹ் (Waragah) என்பது. ஹிரா குகையில் தியானத்தில் இருந்த தம் கணவருக்கு ஜிப்ரீல் தரிசனமாகி, அவரை ஓர் இறைத்தூதர் என்று அறிவித்துப் போனதை வரகாஹ்விடம் கதீஜா சொன்னபோது, "சந்தேகமே வேண்டாம். முகம்மது ஒரு நபிதான். அவருடன் வந்து பேசியது ஜிப்ரீல் என்கிற வானவர்தாம்" என்று கூடுதல் நம்பிக்கை அளித்தார் அவர். கண் தெரியாத, பல வேதங்களில் பாண்டித்தியம் பெற்ற ஒரு கிறிஸ்துவர் அவர்.
ஜிப்ரீல் என்கிற வானவரின் வழியாக முகம்மதுக்கு இறைவன் அளித்த குர்ஆன் ஒரே நாளில், ஒரே பொழுதில் மொத்தமாக அளிக்கப்பட்ட வேதமல்ல. கிட்டத்தட்ட இருபத்துமூன்று ஆண்டுகால இடைவெளியில் பகுதி பகுதியாக, வரிசைகள் அற்று முன்னும் பின்னுமாக, வேறு வேறு சூழ்நிலைகளில், அந்தந்தக் காலகட்டத்தின் தேவையை அது எல்லா காலங்களுக்கும் பொருந்துமா என்கிற பார்வையை உள்ளடக்கி அருளப்பட்டது.
வேதவரிகள் தமக்குள் இறங்குவது பற்றி முகம்மது சில நுணுக்கமான விவரங்களைத் தந்திருக்கிறார்.
"மணி ஓசையின் அதிர்வைப் போல் சமயத்தில் அவை என்னுள்ளே இறங்கும். மிகுந்த சிரமம் தரத்தக்க அனுபவம் அது. இறங்கிய வரிகளை நான் உணர்ந்து, புரிந்து கொள்ளத்தொடங்கும்போது அதிர்வின் வீச்சு குறைய ஆரம்பிக்கும். முற்றிலும் புரிந்துவிட்டவுடன் அதிர்வு நின்றுவிடும். சில சமயங்களில் ஜிப்ரீல் நேரடியாக வந்து உரையாடுவார். அவரது சொற்கள், அப்படியே உணர்வுகளாக என் மனத்தில் இறங்கித் தங்கும்."
ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார்.
தமது வாழ்நாளுக்குள் ஒட்டுமொத்த அரேபிய நிலப்பரப்பையும் இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் பக்கம் அழைத்துவந்து, நெறிப்படுத்தி, தன்னிகரற்ற கலீஃபாவாக ஆண்டு மறைந்தவர் அவர். ஆனால் இறுதிவரை கிழிந்த ஆடைகளை உடுத்தி, வறண்ட ரொட்டிகளை உண்டு, இளமையில் இருந்தமாதிரியேதான் இருந்தார். மனைவி கதீஜா, ஒரு செல்வப் பெண்மணிதான் என்றாலும், மனைவியுடன் இணைந்து மகிழ்ச்சியாக அந்தச் செல்வங்களை அள்ளி அள்ளி ஏழைகளுக்குத் தரத் தயாராக இருந்தாரே தவிர, தமக்கென்று ஒரு திர்ஹம் (வெள்ளிக்காசு) கூட அவர் எடுத்துக்கொண்டதில்லை.
பாசாங்கற்ற இந்த எளிமைதான் முகம்மதின் மிகப்பெரிய பலமாக இருந்தது.
முகம்மது, தாமொரு நபி என்று கண்டுகொண்டதும், முதல்முதலில் அதைத் தம் மனைவியிடம் தெரிவித்தார். அடுத்தபடியாக அவர் இதுகுறித்துப் பேசியது, வரகாஹ்விடம்.
இருவருமே அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. ஆனால் வரகாஹ் மட்டும் ஒரு விஷயம் சொன்னார்:
"நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் இம்மக்களால் பொய்யன் என்று தூற்றப்படுவீர்கள். கஷ்டப்படுத்தப்படுவீர்கள். ஏன், ஊரைவிட்டே துரத்தப்படுவீர்கள். அவர்கள் உங்களுடன் போரிடவும் வருவார்கள்.."
வரகாஹ் சொன்னது சத்தியவாக்கு. அட்சரம் பிசகாமல் அப்படியேதான் நடந்தது.
இஸ்லாம் என்றொரு மார்க்கம் முகம்மது நபியினால் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதனை மனமுவந்து ஏற்றவர்களுக்கும் ஏற்க மறுத்தவர்களுக்கும் இடையில் உருவான முதல் மோதலில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பொருள், ஒட்டகத்தின் தாடை எலும்பு.
இத்தனைக்கும் பகிரங்கமாக இஸ்லாம் குறித்த பிரசாரங்கள் எதுவுமே அப்போது ஆரம்பமாகியிருக்கவில்லை. ஏராளமானவர்கள் இஸ்லாத்தில் இணைந்திருந்தார்களா என்றால் அதுவுமில்லை. மிஞ்சிப்போனால் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள். முகம்மதின் உறவினர்களும் நண்பர்களும். அந்தச் சிறு வட்டத்தில் இரண்டு பேர்தான் பெண்கள். ஒருவர், முகம்மதின் மனைவியான கதீஜா. அவருக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணியின் பெயர் உம்முல் பத்ல். இவர் முகம்மதுக்கு சித்தி முறை.
இறைவன் ஒருவனே என்கிற தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இந்தச் சிறு குழுவினர் அப்போதெல்லாம் தொழுகைக்காக நகருக்கு வெளியே சென்று ஒரு பள்ளத்தாக்கில் யாருமறியாமல் கூடுவார்கள். முகம்மது நபி வாயிலாகத் தாம் கற்றுக்கொண்ட வேத வரிகளை ஓதி வணங்குவார்கள். தமது நம்பிக்கை ஒரு கேலிப்பொருளாக ஆகிவிடக்கூடாது என்பதால்தான் அப்படி யாருமறியாத இடம் தேடிப் போனார்கள்.
அப்படியும் அவர்களால் நிம்மதியாகத் தொழுதுவிட்டு வர இயலவில்லை. மெக்கா நகரின் குறைஷிகள், அவர்கள் தொழுவதற்குப் போகிற வழியில் நின்றுகொண்டு கிண்டல் செய்வார்கள். அவர்களது நம்பிக்கையான இஸ்லாத்தை, அவர்களது தொழுகை முறையை, அவர்களையேகூட கிண்டல் செய்தால் சகித்துக்கொள்ள அவர்கள் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் முகம்மதை, அவர் ஓர் இறைத்தூதர் என்கிற அவர்களது ஆதார நம்பிக்கையை குறைஷிகள் கிண்டல் செய்ததைத்தான் அவர்களால் சகிக்கமுடியாமல் இருந்தது.
ஏனெனில் முகம்மது ஓர் இறைத்தூதர் என்பதையும், குர்ஆன் அவர் வாயிலாக அருளப்பட்டுக்கொண்டிருக்கிற வேதம் என்பதையும் அவர்கள் வாய்வார்த்தையால் அல்ல; தம் அந்தராத்மாவால் உணர்ந்திருந்தார்கள். இதைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக மெக்கா நகரத்துக் குறைஷிகள் இல்லையே என்பதுதான் அவர்களது வருத்தம்.
தம்மை அணுகிக் கிண்டல் செய்பவர்களிடம் கூடியவரை அவர்கள் தாம் உணர்ந்ததை எடுத்துச் சொல்லக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். "உங்கள் வழியில் நாங்கள் குறுக்கே வரவில்லை; எங்களை நிம்மதியாகத் தொழ அனுமதியுங்கள்" என்று வேண்டிக் கேட்டுக்கொள்ளக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், குறைஷிகளுக்கு முஸ்லிம்களை அவமானப்படுத்துவதில் ஓர் ஆனந்தம் இருந்திருக்கிறது. எத்தனை சிறியதொரு கூட்டம்! தனியரு மதத்தை, தனியரு இறைவனை, தனியரு நம்பிக்கையை இவர்கள்தான் வளர்த்து, பரப்பப்போகிறார்களோ? என்கிற எகத்தாளம்.
அந்த எகத்தாளம்தான் நாளடைவில் மிரட்டலாகவும் தீராத தொந்தரவாகவும் ஆகிப்போனது. தொழுவதற்கு எந்தத் தனியிடத்தைத் தேடிப்போனாலும் யாராவது நான்குபேர் வம்பு செய்வதற்கென்று பின்னாலேயே வந்துவிடுவது வழக்கமானது.
ஒரு குறிப்பிட்ட தினத்தில் அத்தகைய வம்பு எல்லை மீறிப்போனது. அதுகாறும் வெறும் கிண்டலுடன் தமது பணியை வரையறுத்துக்கொண்டிருந்தவர்கள், அன்றைக்குத் தொழ வருபவர்களைத் தாக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.
கிண்டலில்தான் ஆரம்பித்தார்கள். பேச்சில் சூடேறி, கைகலப்பு வரை போனது. சிறு குழுவினரான முஸ்லிம்களுக்கு, தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தற்காப்பு யுத்தம் செய்தே ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டது. குறைஷிகளின் கூட்டத்தில் சுமார் முப்பதுபேர் வரை இருந்தார்கள். முஸ்லிம்கள் அதிகபட்சம் பத்துப் பன்னிரண்டு பேர்.
குறைஷிகள் அவர்களைத் தொழக்கூடாது என்று முதலில் எச்சரித்தார்கள். குர்ஆன் ஓதினால் விபரீதம் நடக்கும் என்று அறிவித்துவிட்டு, ஆயுதங்களைக் காட்டினார்கள். ஆனால், தொழுவதற்கு என்று புறப்பட்டு வந்த முஸ்லிம்கள், உரிய நேரத்தில் தொழுதே தீரவேண்டும் என்கிற உறுதி கொண்டவர்கள். ஆகவே, என்ன ஆனாலும் சரி என்று தம் வழக்கமான தொழுகையைத் தொடங்கினார்கள்.
காத்திருந்த குறைஷிகள் அவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள். நிம்மதியாகத் தொழக்கூட முடியவில்லையே என்கிற துக்கம் கோபமாக உருக்கொண்டது, அவர்களில் ஒரே ஒருவருக்குத்தான். அவர் பெயர் ஸஅத். இயற்கையிலேயே போர்க்குணம் மிக்க ஸ§ஹ்ரா என்கிற வம்சத்தில் வந்தவர் அவர். தமது மூர்க்க சுபாவங்களை விட்டொழித்து, முகம்மதின் வழிகாட்டுதல்களை ஏற்று அமைதியாகத் தம் கடமைகளில் ஈடுபட்டுவந்த ஸஅத், அன்றைக்குச் சகிக்கமுடியாத கோபம் மேலோங்க, ஆயுதம் ஏந்தினார்.
ஒட்டகத்தின் தாடை எலும்பு.
உருட்டுக்கட்டைகளுடனும் தடிகளுடனும் வந்திருந்த குறைஷிகள் ஸஅத்திடமிருந்து அப்படியோர் ஆயுதத்தை எதிர்பார்க்கவில்லை. அவர்களால், அந்த எலும்புத் தாக்குதலைச் சமாளிக்கவும் முடியவில்லை.
இஸ்லாத்தின் சரித்திரத்தில் சிந்தப்பட்ட முதல் ரத்தம் அது. குறைஷிகளின் ரத்தம். ஸஅத்தின் கோபத்தின் விளைவாக உதிர்ந்த ரத்தம்.
ஆனால் சம்பவத்தைக் கேள்விப்பட்ட முகம்மது, தற்காப்புக்காகக் கூட இனி யாரையும் தாக்கக்கூடாது என்று அவர்களை எச்சரித்துவிட்டார். தோதாக, அச்சம்பவம் நடைபெற்றதற்குச் சற்றேறக்குறைய சமமான காலத்தில் அவருக்கு அருளப்பட்ட இறை வசனங்களும் முகம்மதின் கருத்தையே பிரதிபலிப்பதாக இருந்ததைக் கவனிக்கவேண்டும்.
ஓர் உதாரணம் : "நபியே, நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்கள் கூறுவதையெல்லாம் சகித்துக்கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இருங்கள். இந்நிராகரிப்போருக்கு அவகாசம் அளியுங்கள். அதிகமல்ல; சொற்ப அவகாசம் போதும்."
(குர்ஆனின் இறுதி அத்தியாயங்களில் ஒன்றான அத்தாரிக் (உதய தாரகை) என்னும் பகுதியில் வருவது இது. (86:17.) ஆனால் முகம்மதுக்கு மிகத் தொடக்க காலத்திலேயே இது அருளப்பட்டுவிட்டது.)
கண்ணியமாக விலகியிருங்கள் என்கிற உத்தரவுக்கு, திரும்பத் தாக்காதீர்கள் என்று அர்த்தம்.
ஒரு சௌகரியம், இஸ்லாத்தை நம்பி ஏற்றுக்கொண்ட அந்தச் சிறு குழுவினருக்கு ஆரம்பத்திலிருந்தே முகம்மது மீதும், அவர் மூலமாக வழங்கப்படும் வேதத்தின் வரிகள் மீதும் ஒரு சந்தேகமும் ஒருக்காலும் ஏற்பட்டதில்லை. வழங்கப்படும் ஒவ்வொரு வரியையும் அதன் முழு அர்த்தத்துடன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது என்கிற முடிவில் இருந்தார்கள். ஆகையால், அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் குறைஷிகளால் எத்தனை துன்பங்களுக்கு உள்ளானபோதும் கையையும் வாயையும் கட்டிக்கொண்டு சும்மாவே இருக்கப் பழகிக்கொண்டார்கள்.
என்னதான் இருக்கிறது உங்கள் இஸ்லாத்தில் என்று விரும்பிக் கேட்டவர்களிடம் மட்டுமே முகம்மது விளக்கம் அளித்தார். குர்ஆனிலிருந்து சில வரிகளை ஓதிக் காண்பித்தார். நாலு வார்த்தை பேசி அவமானப்படுத்தலாம் என்று வந்தவர்கள், முகம்மது ஓதிக்காண்பித்ததும் பேச்சிழந்து இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்கள். இது மிகையல்ல. ஆரம்பகாலங்களில் ஏராளமான முறை இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. முகம்மதே இப்படி இருக்கையில் அவரது தோழர்கள் (முகம்மது தொண்டர்கள் வைத்துக்கொண்டதில்லை. எல்லாருமே அவருக்குத் தோழர்கள்தாம்.) வேறு எப்படி இருப்பார்கள்?
ஆயினும் இஸ்லாம் பரவத்தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோது, அம்மதத்தில் இருந்தோரின் மொத்த எண்ணிக்கை வெறும் நாற்பது பேர் மட்டுமே. நான்காவது ஆண்டின் தொடக்கத்தில்தான் பகிரங்கமாகப் பிரசாரம் செய்யலாம் என்கிற இறை உத்தரவு முகம்மதுக்கு வந்தது. அதுவுமே கூட "உங்கள் உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்து அழைப்பு விடுங்கள்" என்கிற உத்தரவுதான்.
முதல்முதலாக இஸ்லாம் என்றொரு மார்க்கம் குறித்த வெளிப்படையான அறிவிப்பும் அதில் இணைய வரும்படியான அழைப்பும் அந்த நான்காவது ஆண்டில்தான் முகம்மது நபியால் செய்யப்பட்டது.
இஸ்லாம் என்கிற பதம் முதல்முதலில் பாலஸ்தீனைச் சென்றடைந்ததும் அப்போதுதான்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய வர்த்தகர்களிடம் என்னென்ன இருந்தன என்று நகைச்சுவையாக ஒரு பட்டியல் போடுவார்கள். அவர்களிடம் ஏராளமான ஒட்டகங்கள் இருந்தன. அதைக்காட்டிலும் அதிகமாக அடிமைகள் இருந்தார்கள். அடிமைகளைக் காட்டிலும் அதிகமாக வைப்பாட்டிகள் இருந்தார்கள் என்று அப்பட்டியல் முடிவு பெறும்.
இதெல்லாவற்றைக் காட்டிலும் அவர்களது சொத்தாக இருந்த முக்கியமான விஷயம், தாழ்வு மனப்பான்மை.
சொத்து, சுகங்கள், அடிமைகள், வளமை இருப்பினும் கல்வியிலும் உலக ஞானத்திலும் தாம் பிற்பட்டவர்கள் என்கிற எண்ணம், அன்றைய பணக்கார அரேபியர்கள் அத்தனை பேருக்குமே உண்டு. தமது இறை நம்பிக்கை, வழிபாட்டு உருவங்கள் பற்றிய பெருமிதம் இருந்தாலும், மதக்கல்வி ரீதியில் தம்மைக் காட்டிலும் யூதர்கள் மேலானவர்கள் என்கிற உணர்வு அவர்களிடையே இருந்திருக்கிறது. யூத மதம் மிகவும் பண்பட்டது; யூதர்கள் அனைவரும் கற்றறிந்த மேலோர் என்னும் எண்ணம் அவர்களது இயல்பாகிப் போயிருந்தது.
இத்தனைக்கும் கிறிஸ்துவம்தான் அன்றைய தேதியில் வருவோரையெல்லாம் அரவணைத்துக்கொள்ளும் மதமாக இருந்ததே தவிர, யூத மதத்தில் பிரசாரம், மதமாற்றம் போன்றவை எதுவும் அறவே இருந்ததில்லை. இதனாலேயேகூட ஒருவேளை அவர்களுக்கு யூதர்கள் மேம்பட்டவர்களாகத் தெரிந்திருக்கலாம்.
இந்த எண்ணம் அவர்களிடையே எத்தனை தீவிரமாக ஊடுருவியிருந்தது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம் சொன்னால் போதும். விளங்கிவிடும்.
இஸ்லாம் தோன்றி, மூன்றாண்டுகள் ஆகி, மொத்தமே நாற்பது முஸ்லிம்கள் உலகில் இருந்த தருணம் அது. அரபிகளின் புனிதத் திருவிழாக்காலம் ஒன்று வந்தது. அந்தச் சமயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து மெக்காவுக்குப் புனித யாத்திரையாகப் பல்லாயிரக்கணக்கானோர் வரத் தொடங்குவார்கள். இன்றைக்கும் அதே மெக்காவுக்குத்தான் முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதே க'அபாவைத்தான் பயபக்தியுடன் சுற்றி வருகிறார்கள். ஆனால் இன்றைய க'அபாவுக்கும் அன்றைய க'அபாவுக்கும் வித்தியாசங்கள் பல. பிரதானமான வித்தியாசம், அன்றைக்கு அங்கே இருந்த ஏராளமான உருவச் சிலைகள், சிறு தெய்வங்கள்.
அப்படிப் புனித யாத்திரையாக வரும் பக்தர்களை உபசரித்து, தங்க வைத்து, விருந்துகள் நடத்தி, புண்ணியம் தேடிக்கொள்வதில் மெக்கா நகரத்துப் பணக்காரக் குறைஷிகளுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. புண்ணியம் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. சில வர்த்தகக் காரணங்களும் உண்டு.
புனித யாத்திரையாக வரும் வெளிநாட்டினருக்கு விருந்தளித்து உபசரிக்கும் குறைஷிகள், அப்படியே அவர்களுடன் சில வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு தங்கள் தொழிலையும் மேம்படுத்திக்கொள்வது வழக்கம். உலர் பழ வகைகள், தானிய வகைகளை ஏற்றுமதி செய்வது அன்றைய குறைஷிகளின் பிரதானத் தொழில். கிட்டத்தட்ட, மத்திய ஆசியா முழுவதிலும் அன்றைய மெக்கா வர்த்தகர்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தார்கள். சில ஆப்பிரிக்க நாடுகளுடனும் தூர கிழக்கு நாடுகளுடனும் அவர்களுக்கு வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கிறது.
இந்த வர்த்தக உறவுகள் எப்போதும் சுமுகமாக இருப்பதற்கு, புனித யாத்திரைக் காலங்களில் மெக்காவுக்கு வருவோரை நன்கு கவனிப்பது மிகவும் அவசியம். யாத்ரீகர்கள் வசதியாகத் தங்குவதற்கு, நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல், சௌகரியமாக க'அபாவில் வழிபட்டுத் திரும்புவதற்கு, உணவுப் பிரச்னையில்லாமல் உண்டு களிப்பதற்கு, இன்னபிறவற்றுக்கு மெக்கா குறைஷிகள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள்.
வருஷா வருஷம் நடப்பதுதான். ஆனால் அந்த வருஷம் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருந்தது. முகம்மது. அவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற இஸ்லாம் என்கிற புதிய மார்க்கம். என்னதான் சொல்கிறார் முகம்மது என்று சும்மா வேடிக்கை பார்க்கப் போகிறவர்கள்கூட அவரது அடிபணிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிடுகிற அபாயம். அதுநாள் வரை பகிரங்கமாகப் பிரசாரம் மேற்கொள்ளாதிருந்த முகம்மதுவும் அவரது தோழர்களும், இஸ்லாம் தோன்றிய அந்த நான்காம் ஆண்டின் தொடக்கத்தில் பகிரங்கப் பிரசாரத்துக்கான இறை உத்தரவு கிடைக்கப் பெற்றவர்களாக, மெக்காவுக்கு வரும் யாத்ரீகர்களிடையே இஸ்லாம் குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருந்தார்கள்.
என்ன செய்து முகம்மதுவின் பிரசாரத்தைத் தடுக்கலாம் என்று குறைஷிகள் யோசித்தார்கள். அவரை ஒரு மந்திரவாதி என்றும் சூனியக்காரர் என்றும் சித்தரித்து, கூடியவரை அவரை யாரும் நெருங்க இயலாமல் செய்வதற்கு ஒருபுறம் ஏற்பாடு செய்தார்கள். மறுபுறம் கலகக்காரர் என்றும் பித்தலாட்டக்காரர் என்றும் மக்கள் விரோத, இறைவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என்றும் சொல்லிப் பார்த்தார்கள். கெட்ட ஆவியால் பீடிக்கப்பட்டவர் என்றும் ஒரு வதந்தியை திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
குறைஷி வர்த்தகர் சமூகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு விபரீதத்தை உண்டு பண்ணியது. குறைஷியர் சமூகத்திலேயே இளைஞர்களாக இருந்தவர்கள், தமது தந்தைமார்களும் பிற உறவினர்களும் ஏன் இந்த முகம்மதுவைப் பற்றி எப்போதும் தவறாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அவர் என்னதான் சொல்கிறார், செய்கிறார் என்று அறியும் ஆவல் மிக்கவர்களாக முகம்மது இருக்கும் இடம் நாடிப் போக ஆரம்பித்தார்கள்.
இதைக் காட்டிலும் குறைஷிகளுக்கு வேறு பிரச்னை வேண்டுமா? யாத்ரீகர்களையல்ல; முதலில் தமது மக்களை அவர்கள் முகம்மதுவிடமிருந்து "காப்பாற்றி"யாகவேண்டும்.
ஆகவே சிறுபிள்ளைத்தனமான சில நிபந்தனைகளை அவர்கள் முகம்மதுவுக்கு வைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு பவுர்ணமி தினத்தன்று முகம்மதுவிடம் சென்று, "உண்மையிலேயே நீங்கள் ஓர் இறைத்தூதர் என்று நாங்கள் எப்படி நம்புவது? உங்களால் இந்த முழுநிலவைப் பிளந்து காட்ட முடியுமா?" என்று சவால் விட்டார்கள். "பார், இந்த முகம்மது எப்படித் திண்டாடப்போகிறார்!" என்று தம் குலத்தின் இளவல்களைப் பார்த்துப் பெருமிதமாகப் புன்னகை புரிந்தார்கள்.
ஆனால், முகம்மது கண் மூடி தியானித்த மறுகணம் அந்த அற்புதம் நடக்கத்தான் செய்தது. பவுர்ணமி நிலவு இரண்டாக இரு பிறைகளாகப் பிரிந்து காட்சியளித்தது!
உடனே, முகம்மது ஒரு மந்திரவாதி, கண்கட்டு வித்தை செய்கிறார் என்று அலறத் தொடங்கிவிட்டார்கள் குறைஷிகள்.
ஒன்றல்ல; இதைப்போல் வேறு பல சம்பவங்களும் முகம்மதின் வாழ்க்கையில் நடந்ததற்கான சரித்திரக் குறிப்புகள் இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால், சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. இஸ்லாத்தின் மையம் என்பது குர்ஆன் தான்.
"குன்" என்கிற ஒரு சொல்லை மரியத்தின் மணிவயிற்றில் வைத்துத்தான் முகம்மதுக்கு முந்தைய நபியான இயேசுவை இறைவன் படைத்தான் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்தச் சமயம், சொல்லிலிருந்து உதித்தவர், இறைத்தூதர். இம்முறை சொல்லிலிருந்து உதித்தது, குர்ஆன் என்கிற ஒரு வேதம். ஆக, குர்ஆன்தான் முக்கியமே தவிர, நிகழ்த்தப்படும் அற்புதங்களல்ல. நிகழ்த்துபவருமல்ல.
இதை, மற்ற யாரையும்விட முகம்மது மிக நன்றாக உணர்ந்திருந்தார். தாம் இறைவனால் இஸ்லாத்தை விளக்கவும் பரப்பவும் நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி மட்டுமே என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்தார். ஆகவே, தன் மூலமாக நிகழ்த்தப்படும் எதற்கும் தான் உரிமை கொள்வதற்கோ பெருமைப்படுவதற்கோ ஏதுமில்லை என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார் அவர். ஆன்மிகத்தின் மிகக் கனிந்த நிலை என்பது இதுதான். இந்த ஒரு நிலைக்காகத்தான் எத்தனையோ முனிவர்களும் யோகிகளும் பல்லாண்டுகாலம் கடுந்தவம் புரிந்திருக்கிறார்கள். "தான்" என்கிற ஒரு விஷயத்தை முற்றிலுமாகக் களைய முடியும்போதுதான் ஆன்மிகம் வசப்படும் என்பார்கள்.
முகம்மது ஒரு பழுத்த ஆன்மிகவாதி.
அது ஒருபுறமிருக்க, இந்த முகம்மதை என்ன செய்து தடுத்து நிறுத்தலாம் என்று குறைஷிகள் கூடி ஆலோசிக்கத் தொடங்கியதைப் பார்க்கலாம். அவருக்கு எதிராகச் சாத்தியமுள்ள அத்தனை பிரசாரங்களையும் முடுக்கி விடுவது; புனித யாத்திரைக் காலத்தில் பிரச்னையில்லாமல் தமது வர்த்தக உறவுகளை பலப்படுத்திக்கொள்வது என்கிற ஒரு திட்டம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
ஆகவே, சற்றே மாறுபட்ட விதத்தில் முகம்மதை இன்னொரு விதமாகவும் பரீட்சித்து, அவர் ஒரு பொய்யர்தான் என்பதை நிரூபிப்பது என்று முடிவு செய்தார்கள்.
இங்கேதான் அவர்களுக்கு யூதர்களின் நினைவு வந்தது. படித்த யூதர்கள். பண்டிதர்களான யூதர்கள். அறிவிற் சிறந்த யூதர்கள். யூத ரபிக்கள் (Rabbi). இந்த ரபிக்கள் குறித்து ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். யூத மதகுருக்களாக விளங்கும் இவர்கள், யூதமதச் சட்டங்களிலும் விற்பன்னர்கள். தனியரு சமஸ்தானம், தனியரு நீதிமன்றம் என்று யூதர்களிடையே இந்த ரபிக்களின் செல்வாக்கு மிகப்பெரிது. மன்னர் அளிக்கும் தீர்ப்புகளை மாற்றி வழங்குமளவுக்கே செல்வாக்குப் பெற்ற ரபிக்கள் இருந்திருக்கிறார்கள். (யூத ஆட்சியாளர்கள் இருக்கும் இடங்களில் ரபிக்களைக் கேட்காமல் பெரும்பாலும் யாரும் தீர்ப்பு வழங்கமாட்டார்கள் என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)
இத்தனைக்கும் யூதமதம் தோன்றியபோதே உதித்தவர்கள் அல்ல அவர்கள். யூதர்களின் தேவதூதரான மோசஸ் மூலம் இறைவன் அளித்த வேதமான "தோரா"வில் ரபிக்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடையாது. பின்னாளில் "தால்மூத்" (Talmud) என்ற யூதச் சட்டதிட்டங்களும் யூத நம்பிக்கைகளும் அடங்கிய பிரதி உருவாக்கப்பட்ட காலத்தில்தான் ரபிக்களுக்கான முக்கியத்துவம் கூடியது. "தால்மூத்" காலத்தில் ரபிக்களின் செல்வாக்கு உச்சத்தை எட்டியிருந்தது.
அத்தகைய யூத மதகுருமார்களை அணுகி, தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கேட்பது என்று முடிவு செய்தார்கள், மெக்கா நகரத்து குறைஷிகள். தமது தகுதிகள் பற்றிய தாழ்வுமனப்பான்மை அவர்களுக்கு மேலோங்கியிருந்ததனாலும் யூத மதம் உயர்வானது என்கிற எண்ணம் இருந்ததாலுமே இப்படியரு முடிவுக்கு வந்தார்கள்.
இதற்காக யூதர்களின் தலைமையகமான இஸ்ரேலுக்கு ஓடமுடியுமா? அப்படி ஓடினால்தான் அங்கே யூத குருமார்கள் இருப்பார்களா? எல்லோரும்தான் இடம் பெயர்ந்து மத்திய ஆசியா முழுவதும் பரவி வசித்துக்கொண்டிருக்கிறார்களே.
ஆனால் அன்றைக்கு மெக்காவில் யூதர்கள் அதிகம் இல்லை. யூத குருமார்கள் ஒருவர்கூட இல்லை. ஆகவே, யத்ரிப் நகரில் (மெதினா நகரின் பண்டையகாலப் பெயர் இதுதான்.) வசித்துவந்த சில யூத ரபிக்களைச் சந்திக்க ஆள் அனுப்பினார்கள்.
பிரச்னை இதுதான். முகம்மது ஓர் இறைத்தூதர்தானா? அவர் சொல்லுவதையெல்லாம் நம்பி, ஏற்பதற்கில்லை. மந்திரவாதியோ என்று சந்தேகப்படுகிறோம். என்ன செய்து அவரை பரீட்சித்தால் சரியாக இருக்கும்? ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் அரபுகளின் நம்பிக்கைகளை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அடிப்படையே தகர்ந்துவிடும் போலிருக்கிறது. அரபுகளின் வழிபாட்டு உருவங்களை அவர் மதிப்பதில்லை. உருவமற்ற ஒரே இறைவன் என்றொரு புதிய கருத்தை முன்வைத்து மக்களை ஈர்க்கிறார். அவர் உண்மையா, போலியா என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும். இதற்கு யூத குருமார்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.
மெக்கா நகரத்து வணிகர்களின் இந்தக் கோரிக்கை, யத்ரிபில் வசித்துவந்த யூத குருமார்களின் சபைக்குப் போய்ச் சேர்ந்தது. அவர்கள், மெக்காவாசிகள் முகம்மது குறித்துச் சொன்ன ஒவ்வொரு தகவலையும் கூர்மையாக கவனித்துக் கேட்டார்கள். தமக்குள் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
இறுதியில், முகம்மதுவைப் பரிசோதிக்க மூன்று வினாக்களை அவரிடம் கேட்கச் சொல்லி அரபுகளிடம் சொல்லி அனுப்பினார்கள்.
"இதுதான் பரீட்சை. இவைதான் கேள்விகள். இதற்கு மேலான கேள்விகள் என்று எதுவுமில்லை. இந்த மூன்று கேள்விகளுக்கும் அந்த முகம்மது என்ன பதில் தருகிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். அவர் சொல்லும் பதில்கள் சரியானவையாக இருக்குமானால், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் இறைத்தூதர்தான் என்று நீங்கள் நம்பலாம். பதில்கள் சரியில்லை என்றால், அவர் பித்தலாட்டக்காரர்தான் என்பதில் சந்தேகமில்லை" என்று சொன்னார்கள்.
யூத மதகுருமார்கள் எழுப்பிய அந்த மூன்று வினாக்களுக்கு சத்தியமாக எந்த அரேபியருக்கும் விடை தெரிய நியாயமில்லை. முகம்மது ஒரு அரேபியர். எழுதப்படிக்கத் தெரியாதவர். யாரிடமும் பாடம் கேட்டவரும் அல்லர். எனவே யூத குருமார்களுக்கு மட்டுமே விடை தெரிந்த அந்த வினாக்களுக்கு அவர் எப்படி பதில் சொல்லுகிறார் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள் குறைஷிகள்.
ஆதிகாலத்தில் தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன?
கிழக்கு, மேற்கு திசையெங்கும் பயணம் செய்து இரு எல்லைகளையும் தொட்ட பயணி யார்? அவரது சிறப்பு என்ன?
ஆன்மா என்பது என்ன?
யூத மதகுருமார்களின் இந்த மூன்று வினாக்களுக்கு முகம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் கேள்விகளிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? மேலோட்டமாகப் பார்த்தால் முதல் இரு வினாக்களும் வெறும் சொற்களால் இட்டு நிரப்பப்பட்டவை போலத் தெரிகிறதல்லவா? உள்ளர்த்தங்கள் ஏதுமின்றி, வெறுமனே வம்புக்குக் கேட்கப்பட்டதுபோல!
உண்மையில் யூத மதகுருமார்களுக்கு வம்பு நோக்கம் ஏதுமில்லை. அர்த்தங்கள் பொருந்திய இந்த வினாக்களுக்கான விடைகளை அவர்கள் நிச்சயம் அறிவார்கள். சர்வநிச்சயமாக முகம்மதுவுக்கு விடைகள் தெரிந்திருக்காதென்று அவர்கள் நம்பியதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஏனெனில், முதல் இரு வினாக்களுமே சரித்திரம் தொடர்பானவை. முகம்மது நபியின் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு இது சரித்திர வினா என்றால், இக்கேள்விகளின் வயதை யூகித்துப் பார்க்கலாம். ஆதிகாலத்தில் பாதிக்காலம் அது. அதற்கும் முன்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகளை உள்ளடக்கிய வினாக்கள் அவை. அப்புறம், இருக்கவே இருக்கிறது ஆன்மா. இன்றைக்கு வரை அது என்ன என்கிற வினாவும், அதற்கான விடைதேடும் ஞானியரும் இருக்கவே செய்கிறார்கள்.
ஆகவே, எப்படியும் முகம்மது உண்மையான இறைத்தூதர்தானா என்பது இக்கேள்விகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலிருந்து தெரிந்துவிடும் என்று குறைஷிகளுக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தார்கள், யூத ரபிக்கள்.
வினாக்களைப் பெற்றுக்கொண்ட குறைஷிகள், நேரே முகம்மதுவிடம் வந்து அவற்றை முன்வைத்து, பதில் சொல்லக் கோரினார்கள்.
முகம்மது, படித்தவரல்லர். அதுவும் சரித்திரம்? வாய்ப்பே இல்லை. அந்த ஆன்மா? ம்ஹும். அவர், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதர். சராசரி மனிதர். தமது உள்ளுணர்வின் அடிச்சுவட்டில் பயணம் செய்து, ஆன்மிகத்தின் சிகரங்களைக் கண்டடைந்தவர். முகம்மதுவின் ஆன்மிகம், தத்துவம் சார்ந்ததல்ல. தர்க்கங்களுக்கோ, குதர்க்கங்களுக்கோ அங்கே இடமில்லை. உள்ளார்ந்த பக்தியின் மிகக்கனிந்த நிலையில் லயித்து வாழ்ந்தவர். தாம், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருவி என்பதை அவர் மிகத்தெளிவாக உணர்ந்திருந்தார். தனக்கென்று எதுவும் சுயமாகத் தெரியாது என்பதை மட்டும் அவர் மிகத்தெளிவாகத் தெரிந்துவைத்திருந்ததுதான், மற்றவர்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். ஜிப்ரீல் மூலம் இறைவன் தனக்களிக்கும் வேத வரிகளை அவர் தம் நண்பர்களுக்கு ஓதிக்காட்டி உணரச் செய்துகொண்டிருந்தார். தாம் படைக்கப்பட்டதன் நோக்கமே அதுதான் என்பதில் அவருக்கு ஒரு மழைத்துளி அளவு சந்தேகமும் இல்லை.
ஆகவே, தம்முன் வைக்கப்பட்ட வினாக்களுக்கு மறுநாள் விடை சொல்லுவதாகச் சொல்லி, வந்தவர்களை அனுப்பிவைத்தார்.
விபரீதம் இங்கேதான் வந்தது. அதெப்படி அவர் அத்தனை உத்தரவாதமாக, மறுநாள் விடை தருவதாகச் சொல்லிவிடமுடியும்? அவர் சொல்லிவிட்டார் என்பதனாலேயே அன்றிரவு ஜிப்ரீல் வந்து கேள்வித்தாளுக்கு விடைகள் எழுதிவைத்துவிட்டுப் போய்விடுவாரா என்ன?
ஒருநாளல்ல; இரு நாட்களல்ல. அடுத்த பதினைந்து நாட்களுக்கு ஜிப்ரீல் வரவேயில்லை. கேள்வி கேட்ட குறைஷிகள் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள். மிகவும் வருத்தமுற்றாலும், தன் இறைவன் ஒருபோதும் தன்னைக் கைவிடமாட்டான் என்பதில் மட்டும் முகம்மதுவுக்குத் தீராத நம்பிக்கை இருந்தது.
அந்த நம்பிக்கைதான் ஜிப்ரீலை அம்முறை வரவழைத்தது என்று சொல்லவேண்டும். அதுவும் சும்மா வரவில்லை. மறுநாளே பதிலளிப்பதாக முகம்மது சொன்னது தவறு என்று கடிந்துகொள்ளும் விதத்தில் ஓர் இறைவசனத்தைத்தான் முதலில் சுமந்துகொண்டு வந்தார் ஜிப்ரீல்.
("எந்த விஷயத்திலும் நிச்சயமாக நான் அதை நாளைக்குச் செய்வேன் என்று கூறாதீர்; இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன் என்று கூறுவீராக." _ அல் கஹ்ஃப், 18 : 23,24)
அதன்பிறகு யூத ரபிக்கள் எழுப்பிய மூன்று வினாக்களுக்கும் விடைகள் வெளிவந்தன.
முதலாவது, தமது சமூகத்தினரை விட்டுத் தனியே பிரிந்துபோன இளைஞர்களின் கதை. மத்திய ஆசியாவின் பிரசித்திபெற்ற புராணக் கதைகளுள் ஒன்று இது.
அவர்கள் "இபேஸஸ் நித்திரையாளர்கள்" என்று அழைக்கப்பட்டவர்கள்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். அந்தக் காலத்திலேயே உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்கிவந்த அந்த இளைஞர்களுக்கு, அவர்களது சமூகத்தினராலேயே பெரும் பிரச்னை உண்டானது. உலகமே சிலை வழிபாட்டில் மூழ்கியிருக்க, இவர்கள் மட்டும் ஒரே இறைவன், உருவமற்ற இறைவன் என்று சொல்வதைப் பொறுக்காத மக்கள், அவர்களுக்குப் பல சங்கடங்களை விளைவிக்கத் தொடங்கினார்கள்.
ஆகவே, தமது மக்களை விட்டு விலகி அவர்கள் ஒரு மலைக் குகைக்குள் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். (மொத்தம் எத்தனைபேர் என்று தெரியவில்லை.) அவர்களை அஸ்ஹாபுல்கஹ்ஃப் (குகைத் தோழர்கள் என்று அர்த்தம்) என்று அழைப்பார்கள். குகைக்குள்ளே போனவர்கள், தம்மை மறந்து உறங்கவும் ஆரம்பித்தார்கள். (குகைக்குள் சென்றவர்களை இறைவனே காதுகளைத் தட்டிக்கொடுத்து உறங்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆதாரம்: அல் கஹ்ஃப் 18:11) சுமார் முந்நூறு வருட உறக்கம்! பிறகு அவர்களது கண்விழிப்பை, அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களின் விழிப்புணர்வுக்கு உருவகமாக வைத்து நிறைவடையும் கதை அது.
யூத ரபிக்களின் இரண்டாவது வினா, கிழக்கையும் மேற்கையும் பயணத்தால் அளந்த யாத்ரீகரைப் பற்றியது. அவரது பெயர், துல்கர்னைன். (இச்சொல்லுக்கு இரண்டு கொம்புகள் உடையவர் என்று பொருள்.)
அவர்களது மூன்றாவது கேள்வி, ஆன்மா குறித்து. அரபு மொழியில் ரூஹ் என்றால் ஆன்மா. இக்கேள்விக்கு முகம்மதுவுக்குக் கிடைத்த பதில்: "அதைப்பற்றி மிகச் சொற்ப ஞானமே உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது."
முகம்மது என்ன செய்வார்? இறைவசனம் அப்படித்தான் வந்தது! ஆகவே, தமக்கு வழங்கப்பட்ட இறைவசனங்களை அப்படியே அவர் குறைஷிகளிடம் பதில்களாகத் தெரிவித்துவிட்டார்.
முகம்மது நபியின் பதில்களைக் கேட்ட யூத ரபிக்களுக்குப் பெருத்த தர்மசங்கடம் ஏற்பட்டது. நிச்சயமாக முகம்மதால் பதில் சொல்ல முடியாது என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தது ஒரு காரணம். அவர் பதில் தந்துவிட்டதால், அதைச் சரி என்றோ, சரியில்லை என்றோ ஒரு சொல்லில் சொல்லிவிடமுடியாதது இரண்டாவது காரணம்.
முகம்மது ஒரு நபிதான் என்று அவர்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆயினும் அப்படி ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் சம்மதிக்கவில்லை. குறைஷிகளுக்கு, ரபிக்களின் இந்த இரண்டுங்கெட்டான்தனம் புரியவில்லை. "முகம்மது ஒரு நபிதான்" என்று ரபிக்கள் சொல்லிவிட்டால்கூட, அவர்கள் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை! அவர்கள் வரையில் முகம்மது ஒரு போலி. பித்தலாட்டக்காரர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
ஆகவே, ரபிக்களின் கருத்தை அறிய மேலும் ஆர்வம் காட்டாமல் புறப்பட்டு விட்டார்கள்.
இந்த மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு, முகம்மது அவற்றுக்குத் துல்லியமான பதில்களை அளித்த சம்பவத்தால் இரண்டு முக்கியமான விளைவுகள் ஏற்பட்டன. இஸ்லாமியர்களின் சரித்திரத்தில் அந்த இரண்டு விளைவுகளுமே குறிப்பிடத்தகுந்த பங்கு வகிப்பவை.
முதலாவது, பாதி நம்பிக்கை, பாதி அவநம்பிக்கை கொண்டிருந்த அரேபியர்கள் பலர், முகம்மதை முழுவதுமாக நம்பி, அவர் காட்டிய பாதையில் நடக்க மனமுவந்து ஒப்புக்கொண்டார்கள். இதன்விளைவாக, அரேபியர்கள் பலர் முஸ்லிம் ஆனார்கள். பிரசாரங்களினால், கிறிஸ்துவம் பரவிக்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், இந்த ஒரு சம்பவத்தால், எவ்வித பிரசாரமும் இன்றி தானாகவே இஸ்லாம் பரவத் தொடங்கியது. முகம்மதுவைச் சந்திக்கவும் அவருடன் பேசவும் பல்வேறு தேசங்களிலிருந்தும் அரேபியர்கள் மெக்காவை நோக்கி வரத் தொடங்கியது இதன் பிறகுதான்.
இரண்டாவது விளைவு, மிகவும் பாதகமானது. குறைஷிகள், முஸ்லிம்கள் மீது மிகக் கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள். ஒருவர் முஸ்லிம் என்று தெரிந்தாலே கட்டி வைத்துத் தோலை உரிக்கிற அளவுக்கு அவர்களது வன்முறை எல்லை கடந்துபோனது.
ஆகவே, கொஞ்சமேனும் நிலைமை சீராகும் வரை முஸ்லிம்கள் வேறு தேசம் எங்காவது போய் வசிக்கலாம் என்றொரு யோசனை முகம்மது நபியிடம் முன்வைக்கப்பட்டது. அப்படி இடம் பெயர்ந்து வசிப்பதற்கு முகம்மது சுட்டிக்காட்டிய இடம், அபிசீனியா. (ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் இன்றைய எத்தியோப்பியா.)
கண்ணியமான மன்னன் (அப்போதைய அபிசீனிய மன்னனின் பெயர் நஜ்ஜாஷி); மத நல்லிணக்கம் பேணுகிற தேசம் என்று சொல்லி, முகம்மதுவே தம் மக்களை அங்கே அனுப்பிவைத்தார்.
அன்றைக்கு எத்தியோப்பியா ஒரு கிறிஸ்துவ நாடு. நஜ்ஜாஷியும் ஒரு கிறிஸ்துவர்தாம். ஆயினும் நம்பிக்கையுடன் முஸ்லிம்கள் அங்கே புறப்பட்டுப் போனார்கள்.
முஸ்லிம்கள் முதல்முதலில் இடம்பெயர்ந்த சம்பவம் அதுதான். மெக்காவைத் தாண்டி இஸ்லாம் வெளியே புறப்பட்டதும் அப்போதுதான்.
ரகசியமாகத்தான் அவர்கள் மெக்காவைவிட்டுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாலும், குறைஷிகளுக்கு அவர்கள் அபிசீனியாவில் நிம்மதியாக வசிப்பதும் பிடிக்கவில்லை. ஆகவே, அபிசீனிய மன்னரின் மனத்தில் முஸ்லிம்களைப் பற்றிய அபாய அறிவிப்பை ஒரு விதையாக விதைத்து, எப்படியாவது அவர்களை நாடு கடத்தச் செய்துவிடவேண்டுமென்று விரும்பினார்கள். இரண்டு தூதுவர்களை அபிசீனியாவுக்கு அனுப்பினார்கள். (அந்தத் தூதுவர்களுள் ஒருவன் பெயர் அம்ர் இப்ன் அல் ஆஸ். இன்னொரு தூதனின் பெயர் தெரியவில்லை.)
இந்தத் தூதர்களின் பணி என்னவெனில், எப்படியாவது அபிசீனிய மன்னரைச் சந்தித்து, மெக்காவிலிருந்து அகதிகளாக வந்திருக்கும் முஸ்லிம்களை நாடு கடத்தச் செய்துவிடவேண்டும் என்பது. முடிந்தால் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைக்கும்படி செய்வது. குறைந்தபட்சம் நாடு கடத்தலாவது அவசியம்.
அவர்களும் தக்க பரிசுப் பொருள்களுடன் மன்னரைச் சந்தித்துப் பேசினார்கள்.
"மன்னா! உங்கள் தேசத்தில் அடைக்கலம் தேடி வந்திருக்கிற சிலரை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அவர்கள் முட்டாள்தனமாகத் தங்கள் மதத்தைக் கைவிட்டுவிட்டார்கள். கிறிஸ்துவர்களாக மாறித்தான் உங்கள் தேசத்துக்கு வந்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. ஏதோ ஒரு புதிய மதம். அவர்களது உறவினர்களும் இனத் தலைவர்களும் இவர்களைத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த மதத்தையும் விடுத்து, உங்கள் மதத்தையும் ஏற்காத அவர்களைத் தயவுசெய்து திருப்பி அனுப்பிவிடுங்கள்" என்று ஆரம்பித்து, விஸ்தாரமாகத் தங்கள் நோக்கத்தை எடுத்து வைத்தார்கள்.
மன்னன் நஜ்ஜாஷி யோசிக்க ஆரம்பித்தான். "சரி, அழைத்து வாருங்கள் அந்தப் புதிய மதத்தவர்களை" என்று உத்தரவு கொடுத்தான்.
அபிசீனிய மன்னனின் அவையில், தாங்கள் யார் என்றும், தங்கள் மதம் என்ன, எத்தகையது என்பது குறித்தும் அன்றைக்கு முஸ்லிம்கள் எடுத்துச் சொன்ன சில வரிகள் இன்றைக்கும் இஸ்லாமியர்கள் திரும்பத்திரும்ப நினைவுகூரும் ஒரு சிற்றுரை.
இஸ்லாத்தைக் குறித்து ஆயிரமாயிரம் புத்தகங்கள் அளித்தாலும் தீராத வியாக்கியானங்களை அந்தச் சில வரிகள் மிக அழகாகப் புரியவைத்துவிடுகின்றன. அரேபிய மண் முழுவதும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வேரூன்றியதன் தொடக்கம் அந்தச் சிறு விளக்க உரைதான்.
ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள குர்ஆன், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும் ஹதீஸ்கள் (முகம்மது நபியின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் அவரது போதனைகளும் அடங்கிய பிரதிகளுக்கு ஹதீஸ் என்று பெயர். சிலர் ஹதீத் என்றும் இதனை அழைப்பார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. குர்ஆன் என்பது இறைவனால் அருளப்பட்டது. ஹதீஸ், முகம்மது நபியினுடையது.), எத்தனையோ விளக்க நூல்கள், ஆய்வு நூல்கள், ஆதரவு நூல்கள், எதிர்ப்பு நூல்கள், இஸ்லாத்தைப் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன. ஆனால், அபிசீனியா என்கிற எத்தியோப்பியாவின் மன்னன் நஜ்ஜாஷியின் அவையில், தாங்கள் யார், தங்களது புதிய மதம் என்ன என்பது பற்றி, அந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் சில வரிகளில் எடுத்துரைத்ததைக் காட்டிலும் இஸ்லாத்தைத் துல்லியமாகப் புரியவைக்கும் சொற்கள் வேறு எதுவும் கிடையாது.
எளிமையான சொற்கள். அலங்காரங்கள் கிடையாது. ஜோடனைகள் கிடையாது. உணர்ந்ததை, உணர்ந்தபடியே வெளிப்படுத்திய அந்த நேர்மையினால்தான் அந்தச் சொற்கள் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தபின்னும் ஜீவத் துடிதுடிப்புடன் இருக்கின்றன. ஒரு சிறிய சொற்பொழிவு போல அமைந்திருக்கும் அந்த விளக்கத்தை மிகச்சில வரிகளில் சுருக்கினால் கிடைக்கும் சாறு இதுதான்:
"நாங்கள் அறியாமையில் இருந்தோம். ஒழுக்கமற்று வாழ்ந்தோம். சிலைகளையும் கற்களையும் வணங்கிக்கொண்டிருந்தோம். உயிர்த்திருப்பதன் பொருட்டு அனைத்து அக்கிரமங்களையும் தயங்காமல் செய்தோம். எளியவர்களை எங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. எங்கள் இனத்திருந்தே ஒரு தூதரை இறைவன் தேர்ந்தெடுத்து அனுப்பும்வரை எங்கள் வாழ்க்கை இவ்வாறாகத்தான் இருந்தது.
எங்கள் தூதர் எங்கள் கண்களைத் திறந்தார். உருவமோ, ஆதி அந்தமோ அற்ற ஒரே இறைவனை வணங்கச் சொல்லி அவர் எங்களை அழைத்தார். பேச்சில் சத்தியம், வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி, உறவினருக்கும் நண்பர்களுக்கும் யாருக்குமே துரோகம் இழைக்காதிருத்தல், எதன்பொருட்டும் ரத்தம் சிந்த அனுமதிக்காதிருத்தல் ஆகியவற்றை வற்புறுத்திச் சொன்னார்.
பெண்களை மதிக்கச் சொன்னார். பொய்சாட்சி சொல்லாமலிருக்கும்படி கேட்டுக்கொண்டார். தொழுகை, நோன்பு, ஏழைவரி ஆகியவற்றைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இவைதான் எங்கள் தூதர் எங்களுக்கு இட்டிருக்கும் கட்டளைகள். இவற்றைத்தான் எங்கள் நாட்டைச் சேர்ந்த பலர் எதிர்க்கிறார்கள். அடைக்கலம் தேடியே உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறோம். காப்பாற்றுவீர்களாக."
குர்ஆன் என்னும் வேதம் விவரிக்கும் வாழ்க்கை நெறி என்பது இதுதான். அதன் அத்தனை பக்கங்களுமே இவற்றின் விரிவும் விளக்கமும்தான்.
முஸ்லிம்களின் இந்தத் தன்னிலை விளக்கத்தைக் கேட்ட அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி, அவர்களை நாடு கடத்தச் சொல்லிக் கேட்டுவந்த மெக்கா நகரின் குறைஷித் தூதுவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டான். ஒரு பாவமும் அறியாத இவர்களை எதற்காக நாடு கடத்த வேண்டும்? ரொம்ப சரி. நீங்கள் அபிசீனியாவிலேயே சௌக்கியமாக இருந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்.
அந்தத் தூதர்கள் அத்துடன் விடுவதாயில்லை. "இதெல்லாம் சரி, இவர்களின் புதிய மதத்தின் வேதம், உங்கள் கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்" என்று வேறொரு பிரச்னையை எழுப்பினார்கள்.
குர்ஆனில் இயேசுவை (ஈசா நபி என்று குர்ஆனில் வரும்.) "இறைவனின் அடிமை" என்னும் பொருளில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். இயேசுவை அடிமை என்று அழைப்பவர்கள் இவர்கள் என்று சொல்லியாவது தாம் வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்தார்கள், குறைஷித் தூதர்கள்.
ம்ஹும். அதற்கும் நஜ்ஜாஷி மசியவில்லை. ஆம். இயேசு இறைவனின் அடிமைதான். இதிலென்ன சந்தேகம் என்று சொல்லிவிட்டான்.
ஆனாலும், அபிசீனிய மக்களுக்கு, தம் மன்னனின் இந்தப் பரிபூரண சரணாகதி வேறொரு சந்தேகத்தை எழுப்பிவிட்டது. எங்கே தம் மன்னனே ஒரு முஸ்லிமாகிவிடுவானோ என்கிற சந்தேகம். இதன் விளைவாக, தேசம் முழுவதும் பெரும் பரபரப்பும் வதந்திகளும் எழத் தொடங்கின. "இயேசுவை நாம் இறைவனின் மைந்தன் என்றல்லவா சொல்லுகிறோம்? இறைவனின் அடிமை என்று அவர்கள் சொல்வதை நீங்கள் எப்படி ஒப்புக்கொள்ளலாம்?" என்று மக்கள் பிரதிநிதிகள், மன்னனிடம் சண்டைக்கு வந்தார்கள்.
உண்மையில் நஜ்ஜாஷி ஒரு மதநல்லிணக்க வாதி. அவனுக்கு முஸ்லிமாக மாறுகிற எண்ணமெல்லாம் இல்லை. அப்படியரு சிந்தனை கூட அவனுக்கு எழவில்லை. ஆயினும், அடுத்தவரின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மைமிக்க மன்னனாக இருந்ததுதான் அன்றைக்குப் பிரச்னையாகிவிட்டது. ஒருவேளை நாட்டில் பெரிதாகக் கலவரம் ஏதாவது நிகழலாம் என்று அவன் சந்தேகப்பட்டான். எதற்கும் இருக்கட்டும் என்று அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களை மூட்டை முடிச்சுகளுடன் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளவும் செய்திருக்கிறான்.
நல்லவேளையாக அப்படியரு விபரீதம் நிகழவில்லை. தாம் ஒரு உண்மையான கிறிஸ்துவன்தான்; மதம் மாறும் உத்தேசமெல்லாம் இல்லை என்று மக்களிடம் எடுத்துச் சொல்லி, இயேசு "இறைவனின் குமாரர்தான்" என்பதிலும் தமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்து, மக்களைச் சமாதானப்படுத்தினான். அதன்பின் முஸ்லிம்கள் அங்கே தொடர்ந்து வாழ்வதற்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் போய்விட்டது.
ஆனால், மெக்கா நகரத்துக் குறைஷித் தலைவர்கள் இதைப் பெரிய அவமானமாகக் கருதினார்கள். தாங்கள் அனுப்பிய தூதுவர்கள், காரியத்தை முடிக்காமல் திரும்பிவந்ததில் அவர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. ஏதாவது செய்து, முஸ்லிம்கள் அத்தனை பேரையும் வெட்டிப் புதைத்துவிட்டால்தான் தங்கள் ஆத்திரம் தீரும் என்று நம்பினார்கள்.
ஆனால், யார் தலைமையில் ஒன்று திரள்வது? செலுத்திய அம்பு போலக் குறி தவறாமல் சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை தங்களில் யாருக்கு உண்டு? குறைஷிகளிடையே அப்போது செல்வாக்கும் நன்மதிப்பும் பெற்ற தலைவர் அபூஜஹ்ல் என்பவர். ஆனால் வயதானவர். இந்தக் காரியத்துக்கு இள ரத்தம் தான் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்?
அபூஜஹ்லுக்குத் தன் மருமகன் உமரின் ஞாபகம் வந்தது. உமருக்கு அப்போது இருபத்தியாறு வயது. முரடு என்றால் அப்படியரு முரட்டு சுபாவம் கொண்ட இளைஞர். மிகத் தீவிரமான உருவ வழிபாட்டாளர். ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் முகம்மதுவையும் அவரது தோழர்களையும் ஒரு வழி பண்ணிவிடமாட்டோமா என்று பலநாட்களாகக் காத்துக் கிடந்தவர்.
ஆகவே, அபூஜஹ்ல் வாயிலாகவே அப்படியரு வாய்ப்பு வந்தபோது, மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஒரு பெரிய வாளைத் தூக்கிக்கொண்டு உடனே கிளம்பிவிட்டார்.
உமரின் கோபம், உருவமற்ற இறைவனை முகம்மது முன்னிறுத்தியதனால் மட்டுமல்ல. ஒரே கூட்டுப் பறவைகளாக இருந்த மெக்கா நகரின் மக்களிடையே இன்று இரு பிரிவுகள் தோன்றிவிட்டதற்கு முகம்மதுதானே காரணம் என்கிற உணர்ச்சிவயப்பட்ட மனநிலை அவருக்கு இருந்திருக்கிறது. அதனால், முகம்மதைக் கொன்றுவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பினார். தவிரவும் இஸ்லாம் ஒன்றும் மிகத் தீவிரமாகப் பரவி ஏராளமானவர்களை இன்னும் கவர்ந்திழுக்கவில்லையே. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே மதம் மாறிக்கொண்டிருக்கிறார்கள்? முகம்மதுவைக் கொன்றுவிட்டால் மதம் மாறுவதும் நின்றுவிடும்; மாறியவர்களையும் மீண்டும் மாற்றிவிடலாம்.
இவ்வாறு எண்ணியபடி முகம்மதைத் தேடி ஆக்ரோஷத்துடன் புறப்பட்டுப் போனார் உமர்.
போகிற வழியில் நுஐம் இப்ன் அப்த்அல்லாஹ் என்னும் ஒரு முஸ்லிம் (இவர் வெளிப்படையாகத் தன்னை முஸ்லிம் என்று அப்போது அறிவித்துக்கொண்டிருக்கவில்லை. உயிருக்குப் பயந்து ரகசிய முஸ்லிமாகத்தான் இருந்திருக்கிறார்.) உமரைத் தடுத்து நிறுத்தி, "எங்கே இத்தனை ஆக்ரோஷமாகக் கிளம்பிவிட்டீர்கள்?" என்று கேட்டார்.
"எங்கா? அந்த முகம்மதை ஒழித்துக் கட்டுவதற்காக" என்று சொன்ன உமர், தன் வாளையும் தொட்டுக்காட்டினார்.
நுஐமுக்குக் கவலை வந்துவிட்டது. என்ன செய்து இந்த முரட்டு உமரைத் தடுத்து நிறுத்துவது? கையில் கொலை வாளுடன் போய்க்கொண்டிருக்கிறார். முகம்மதும் அவரது தோழர்களும் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஆயுதம் ஏதும் இருக்காது. தற்காப்புக்காகக் கூட ஏதும் செய்துகொள்ள முடியாது. இங்கேயே இவரைத் தடுக்காவிட்டால் விபரீதம் நடப்பது உறுதி என்று அஞ்சியவர், வேறு வழியே இல்லை என்று கண்டவராக, "முகம்மதுவைக் கொல்வது இருக்கட்டும்; உன் வீட்டிலேயே முஸ்லிம்களை வைத்துக்கொண்டு நீ முகம்மதுவை நோக்கிப் போவதைப் பார்த்தால் யாராவது சிரிக்கமாட்டார்களா?" என்று கேட்டார்.
நுஐமின் நோக்கம் அப்போது எப்படியாவது முகம்மதைக் காப்பாற்றுவதாக மட்டுமே இருந்தது. களப்பலியாக வேறு யாரையாவது இழக்க நேர்ந்தாலும் சரியே என்னும் முடிவில் இருந்தார். ஆகவே உமரின் சகோதரியும் அவளது கணவரும் முஸ்லிமாக மாறிவிட்டார்கள் என்கிற உண்மையை (அன்றுவரை உமருக்கு அந்த விஷயம் தெரியாது.) முதல்முதலாக உமரிடம் சொல்லிவிட்டார்.
அதனாலென்ன? முதலில் என் வீட்டுக் களையைப் பிடுங்கிவிட்டுப் பிறகு முகம்மதிடம் போகிறேன் என்று சொல்லிவிட்டு உமர் நேரே தன் சகோதரியின் வீட்டுக்கு ஓடத் தொடங்கினார்.
தம் சகோதரி பாத்திமாவின் வீட்டருகே உமர் சென்றபோது உள்ளே யாரோ ஓதிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. சந்தேகமே இல்லை. நுஐம் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று கோபம் தலைக்கேறி, உருவிய வாளுடன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே பாய்ந்தார் உமர்.
உமரைக் கண்டதும் பாத்திமா, தாம் வைத்து ஓதிக்கொண்டிருந்த குர்ஆனின் பிரதியைத் தன் உடைக்குள் மறைக்கப்பார்த்தார். அவளது கணவனோ, தங்களை விட்டுவிடும்படி மன்றாடத் தொடங்கினார். ஆனால் உமர் விடவில்லை. தன் சகோதரியை அடித்து ரத்தக்காயப் படுத்திவிட்டு, மைத்துனரின் மீது பாய்ந்தார். இருவரும் கட்டிப் புரண்டார்கள். அடித்துக் கொண்டு எழப்பார்த்தார்கள். மைத்துனரைக் கொன்றுவிடுவது என்று வெறிகொண்டு தாக்கிய உமருக்கு, சகோதரி காயம் பட்டு விழுந்ததும் சிறிதே சலனம் ஏற்பட்டது.
சட்டென்று தாக்குதலை நிறுத்திவிட்டு, "நீங்கள் வைத்து ஓதிக்கொண்டிருந்ததைக் கொண்டுவாருங்கள். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று பார்க்கிறேன்" என்றார்.
வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் இப்படித்தான் மிகுந்த ரசமுள்ளவையாக எப்படியோ அமைந்துவிடுகின்றன.
தயக்கத்துடன் பாத்திமா எடுத்துவந்து கொடுத்த குர்ஆனின் அந்தச் சில பகுதிகளை வாசித்துப் பார்த்த உமர் தம்மையறியாமல் வாளைக் கீழே போட்டார். பிரமிப்பும் அச்சமும் கொண்டு அதுவரை இல்லாத கனிவும் அன்பும் மேலோங்கியவராகக் கண்கள் கலங்கி நின்றார்.
"இதென்ன! இந்த வசனங்கள் இத்தனை அழகும் சிறப்பும் கொண்டவையாக இருக்கின்றன! நிச்சயம் மனிதர் உருவாக்கியதாக இருக்கமுடியாது. என்றால், இது இறைவனின் வசனங்கள்தாம் என்று தோன்றுகிறது" என்று பேசத் தொடங்கியவர், சில வினாடிகளில் "முகம்மது ஓர் இறைத்தூதர்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதோ, இப்போதே போய் அவரைச் சந்தித்து இதனை உரக்கச் சொல்லுகிறேன்" என்று அலறிக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டார்.
இஸ்லாத்தின் சரித்திரத்தில் உமரின் இந்த மனமாற்றம், மிக முக்கியமானதொரு திருப்பம்.
இதே உமர்தான் முகம்மது நபியைச் சந்தித்த மறுகணமே முஸ்லிமாக மாறியவர். அதுநாள்வரை ரகசியமாக மட்டுமே தொழுது வந்த முஸ்லிம்கள் வெளிப்படையாக மெக்கா நகரில் உள்ள க'அபாவில் தொழுகை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, பாதுகாவலாக நின்றவரும் அவரேதான். பின்னாளில் அரேபிய மண்ணின் தன்னிகரற்ற இரண்டாவது கலீஃபாவாக முடிசூடி அமர்ந்தவர். (முதலாவது கலீஃபா, அபூபக்ர். இவர் அப்புறம் வருவார்.) உமரின் ஆட்சிக்காலத்தின்போதுதான் அரேபியாவுக்கு வெளியிலும் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியது.
உமர், கலீஃபாவாக இருந்த காலத்தில் ஜெருசலேம் எகிப்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. ஒரு பெரும் படையெடுப்பின் இறுதியில் எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த (கிறிஸ்துவர்களான) பைசாந்தியர்கள் என்கிற இனத்தவரை வீழ்த்தி, ஜெருசலேத்தில் காலெடுத்து வைத்தார் உமர்.
அப்போது ஜெருசலேத்தின் ஆர்ச் பிஷப்பாக இருந்தவர், நகரின் சாவியை (அடையாளச் சாவிதான்!) தாமே மனமுவந்து உமரிடம் அளித்து, ஆளவரும்படி அழைப்பு விடுத்தது வினோதமான ஆச்சர்யம்!
சரித்திரபூர்வமாக இன்று நமக்குக் கிடைக்கும் சான்றுகளின்படி கி.பி. 619 ம் ஆண்டு வரையில்கூட இஸ்லாம் அத்தனை ஒன்றும் வேகமாகப் பரவிவிடவில்லை. அரபு தேசங்கள் பலவற்றில் முகம்மது நபியின் செல்வாக்கு பரவியிருந்தது; அவரை அடியற்றி, இஸ்லாத்தில் பலர் இணைந்துகொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் மத மாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லிவிடமுடியாது. முகம்மது ஒரு நபிதான் என்று ஏற்பவர்கள் இருந்தாலும் இஸ்லாத்தில் இணைவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
அந்த 619 ம் வருடம் முகம்மதுக்கு ஐம்பது வயதானது. அதே வருடத்தில், அறுபத்து ஐந்து வயதான அவரது முதல் மனைவி கதீஜா காலமானார். உலகின் முதல் முஸ்லிம் பெண்மணி. பல அரபுப் பெண்கள் இஸ்லாத்தில் இணைவதற்குக் காரணமாக விளங்கியவர். முகம்மதுவின் உறவினர்கள் பலரேகூட இஸ்லாத்தை ஏற்பதற்கு கதீஜா மறைமுகக் காரணமாக இருந்து ஏராளமான உதவிகள் செய்திருக்கிறார். அவரது மரணம் முகம்மதுவுக்கு மட்டுமல்ல; அன்றைய தேதியில் இஸ்லாத்துக்கே மாபெரும் இழப்பு என்பதில் சந்தேகமில்லை.
இன்னொரு மரணம், முகம்மதைச் சிறு வயதிலிருந்தே தூக்கி வளர்த்த அவரது பெரியப்பா அபூதாலிப்பினுடையது. குறைஷியருக்கும் முகம்மதுவுக்கும் பகை முற்றிவிடாமல் இருக்க தம்மால் ஏதாவது செய்யமுடியுமா என்று இறக்கும்வரை முயற்சி செய்துபார்த்த ஒரு நல்ல ஆத்மா அவர். அவரும் அதே வருடம் இறந்து போனார்.
ஆனாலும் துயரத்தில் துவண்டுபோய் அமர்கிற அளவுக்கு முகம்மதுவுக்கு அப்போது அவகாசம் இருக்கவில்லை. வெகுநாட்கள் மெக்காவில் அவர் வசித்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு எதிர்ப்பாளர்களின் வன்முறை நடவடிக்கைகள் மிகுந்துகொண்டிருந்தன. ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து எங்காவது இடம் மாறினால்தான் சரிப்படும் என்று பலர் தொடர்ந்து கருத்துக்கூறி வந்தார்கள். ஆனால் முகம்மது ஒருபோதும் தாமாக ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்தியதில்லை. எத்தனை காலமானாலும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இறைக்கட்டளை என்று ஒன்று அவருக்கு வந்து சேராதவரை இம்மிகூட அசையமாட்டார். ஆகவே, காலம் கனிவதற்காகக் காத்திருந்தார்.
கனியத்தான் செய்தது. இடம் மாறுவதற்கல்ல. இன்னொரு விஷயத்துக்கு. அந்த ஒரு சம்பவம்தான் இன்றைக்கும் பாலஸ்தீனத்து அரேபியர்களால் தினசரி நினைத்துப் பார்க்கப்படுகிறது. நினைத்து நினைத்து மனம் கனக்கச் செய்கிறது. சொந்த மண். அதுவும் புனித மண். அங்கேயே அகதிகளாகத் தாங்கள் வாழ நேர்ந்திருப்பதன் அவலத்தை எண்ணி எண்ணி மனத்துக்குள் மறுகச் செய்திருக்கிறது.
சொந்தச் சோகங்களினாலும் இஸ்லாத்தின் எதிரிகள் குறித்த கவலைகளாலும் கொஞ்சம் துவண்டிருந்த முகம்மது, அன்றைக்கு இரவு தொழுகைக்காக மெக்கா நகரின் மத்தியிலுள்ள க'அபாவுக்குப் போனார். தொழுதுவிட்டு, களைப்பில் அங்கேயே ஓர் ஓரமாகச் சாய்ந்து, கண் அயர்ந்தார்.
எப்போதும் விழிப்பு நிலையிலேயே அவரை நாடி வரும் ஜிப்ரீல் அன்று உறங்கத் தொடங்கியபோது வந்து, தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த முகம்மதுவின் கைகளைப் பற்றி எழுப்பினார். அதன்பின் நடந்தவற்றை முகம்மதுவே வருணித்திருக்கிறார்:
"..அவர் என் கைகளைப் பிடித்து எங்கோ அழைத்தார். கூடவே நடக்கத் தொடங்கினேன். பள்ளிவாசலின் வெளியே நாங்கள் வந்து சேர்ந்தபோது அங்கே வெள்ளை வெளேர் என்றொரு மிருகம் நின்றுகொண்டிருந்தது. பார்த்தால் கழுதை போலிருந்தது. கோவேறு கழுதை போலவும் தெரிந்தது. ஆனால் இரண்டுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட தோற்றம் கொண்ட ஏதோ ஒரு மிருகம். (இம்மிருகத்தை முகம்மது நபி "புராக்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.) அம்மிருகத்துக்கு இருபுறமும் அகன்ற பெரிய சிறகுகள் இருந்தன. கால்களும் சிறகுகளைப் போலவே அசைந்துகொண்டிருந்தன. எத்தனை பெரிய மிருகம் அது! அம்மிருகம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் கண்ணின் பார்வைத் தொலைவு நிகர்த்ததாக இருந்தது.."
ஜிப்ரீல் வழிகாட்ட, முகம்மது அம்மிருகத்தின் மீது ஏறி அமர்ந்தார். பின்னாலேயே ஜிப்ரீலும் ஏறிக்கொண்டார். உடனே அந்த மிருகம் தன் பிரும்மாண்டமான சிறகுகளை அசைத்தபடி வானில் உயர்ந்து பறக்கத் தொடங்கியது. மதினா நகரின் மேலே அது பறந்து, வட திசையில் ஜெருசலேத்தைச் சென்றடைந்ததாக முகம்மது குறிப்பிடுகிறார்.
இதுதான். இங்கேதான் ஆரம்பம். இப்ராஹிம் என்கிற ஆபிரஹாம் நபி வாழ்ந்த பூமி. மூசா என்கிற மோசஸுக்கு தோரா அருளப்பட்ட பூமி. ஈசா என்கிற இயேசுவுக்கு பைபிள் வழங்கப்பட்ட பூமி. முகம்மதுவுக்கு முந்தைய இறைத்தூதர்கள் பலருடன் சம்பந்தப்பட்ட ஜெருசலேம் மண். இறைவனின் விருப்பப்பிரதேசம். அங்கேதான் ஜிப்ரீல், முகம்மதுவை அழைத்துவந்தார்.
முகம்மது நபி ஜெருசலேத்துக்கு வந்தது, இஸ்லாத்தின் சரித்திரத்தில் மிக, மிக, மிக முக்கியமானதொரு சம்பவம். அந்தப் பயணத்தின்போது முந்தைய நபிமார்கள் அனைவரும் முகம்மதுவை அங்கே சந்தித்ததாகவும் அனைத்து நபிமார்களும் சேர்ந்து தொழுகை நிகழ்த்தியதாகவும், தொழுகைக்குப் பின் விருந்துண்டதாகவும் (இவ்விருந்தில், திராட்சை ரசம் அடங்கிய பாத்திரம் ஒருபுறமும் பால் நிரம்பிய பாத்திரம் ஒருபுறமும் வைக்கப்பட்டிருந்தன. முகம்மது, திராட்சை ரசத்தைத் தொடாமல், பால் கிண்ணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதனாலேயே ஆசாரமான முஸ்லிம்கள் இன்றும் மதுவருந்துவது மத விரோதச் செயல் என்பார்கள்.) அதன்பின் முகம்மதுவை ஜிப்ரீல் வானுலகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் இஸ்லாம் தெரிவிக்கிறது.
அதற்கு முன், இலியாஸ், இயேசு போன்ற நபிமார்களுக்கு இதைப்போல் வானுலக யாத்திரை சித்தித்திருக்கிறது. முகம்மதுவுக்கு வானுலகில் ஓர் இலந்தை மரத்தினடியில் தெய்வீகப் பேரொளியின் தரிசனம் கிட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் முகம்மதுவுக்கு இஸ்லாத்தின் பிரமாணங்கள் குறித்த பல முக்கிய வசனங்கள் அருளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தினசரி ஐம்பது வேளை தொழவேண்டும் என்கிற இறை உத்தரவும் இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டதுதான். (ஆனால் "ஐம்பது வேளை தொழுவது என்பது மிகவும் சிரமம். இதைக் குறைத்துக் கேளுங்கள்" என்ற மூசா நபியின் ஆலோசனையின்பேரில் திரும்பத்திரும்ப இறைவனிடம் குறைத்துக்கொள்ளக் கோரி இறுதியில் ஐந்து வேளைத் தொழுகையை நிர்ப்பந்தமாக வைத்தார் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை.)
ஜிப்ரீல் அழைத்துச் சென்று வானுலகம் கண்டு புவிக்கு மீண்ட முகம்மது, நேரே வந்து இறங்கிய இடமும் ஜெருசலேம்தான். அந்தக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட மிருகமான புராக், அவரை ஒரு குன்றின்மீது கொண்டுவந்து இறக்கிவிட்டது.
இன்றைக்கும் ஜெருசலேம் என்றவுடனேயே நமக்கு நினைவுக்கு வரும் Dome of the Rock இந்தக் குன்றின் உச்சியில்தான் அமைந்திருக்கிறது. முகம்மது நபி, விண்ணுலகம் சென்று திரும்பி வந்து இறங்கிய இடத்தில், அச்சம்பவத்தின் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு வழிபாட்டுத்தலம். ஜெருசலேம் நகரின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் இந்த வழிபாட்டுத்தலம் தென்படும். அப்படியரு அமைப்பு நேர்த்தி கொண்டது. இந்தக் குன்றுக் கோபுரமும் இதனோடு இணைந்த அல் அக்ஸா என்கிற மசூதியும்தான் பாலஸ்தீன் முஸ்லிம்களின் ஒரே சொத்து. இந்த இரு தலங்களையும் இணைத்து அவர்கள் பைத்துல் முகத்தஸ் என்று அழைப்பார்கள்.
ஆனால் பாலஸ்தீன் என்று குறிப்பிடும்போதெல்லாம் அடையாளத்துக்கு Dome of the Rock படத்தை மட்டுமே தொடர்ந்து ஊடகங்கள் வெளியிட்டு வருவது (ஏனெனில் அதைப் படமெடுப்பதுதான் சுலபம்! குன்றுக் கோபுரத்தையும் கீழே உள்ள மசூதியையும் இணைத்துப் படமெடுப்பது மிகவும் சிரமமானதொரு காரியம்.) வழக்கமாகிவிட்டது. ஆகவே, Dome of the Rock தான் முஸ்லிம்களினுடையது; அல் அக்ஸா மசூதி இருக்குமிடம், முன்னாளில் இடிக்கப்பட்ட யூத தேவாலயம் என்று யூதர்கள் கூறி வருகிறார்கள்.
ஜெருசலேம் குன்றின்மீது வந்து இறங்கி இளைப்பாறியபிறகு, முகம்மதுவை மீண்டும் மெக்காவுக்கே கொண்டுவந்து கிளம்பிய இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டார் ஜிப்ரீல்.
மெக்காவிலிருந்து ஜெருசலேத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து வானுலகம் சென்று, திரும்பவும் ஜெருசலேம் வந்து, அங்கிருந்து மெக்காவிலுள்ள க"அபாவை அவர் அடைந்தபோது இன்னும் பொழுது விடிந்திருக்கவில்லை.
விடிந்ததும் புறப்பட்டுத் தன் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவரின் வீட்டுக்குச் சென்ற முகம்மது முந்தைய இரவு தனக்கு நடந்ததை, அப்படியே வரி விடாமல் அவரிடம் சொன்னார். இந்தச் சம்பவத்தை நான் மக்களிடம் கூறப்போகிறேன் என்றும் சொன்னார்.
சாதாரண மனிதர்கள் நம்பக்கூடிய விஷயமா இது! அன்றைக்கு மெக்காவிலிருந்து புறப்பட்டு ஜெருசலேம் செல்வதென்றால் குறைந்தபட்சம் ஒருமாத காலம் ஆகும். மாலைத்தொழுகையை மெக்காவில் முடித்துவிட்டு இரவுத் தொழுகையை ஜெருசலேத்தில் நிகழ்த்திவிட்டுத் திரும்பியதாக முகம்மது சொன்னால் யார் நம்புவார்கள்?
ஆனால் முகம்மது இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கிறவர் அல்லர். தமக்கு நேர்ந்ததை வார்த்தை மாற்றாமல் அப்படியேதான் சொன்னார். அவரது ஒன்றுவிட்ட சகோதரி அதை நம்பினாரா என்று தெரியவில்லை. ஆனால் குறைஷிகள் கைகொட்டி நகைக்கவும் கேலி பேசவும் இது ஒரு நல்ல காரணமாகிப் போய்விட்டது. முகம்மதுவை ஒரு பைத்தியக்காரர் என்றே அவர்கள் திட்டவட்டமாக முடிவுகட்டி, ஊரெங்கும் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். (ஆனால் ஓர் ஆச்சர்யம் இதில் உண்டு. பறக்கும் விலங்கின் மீதேறித் தான் சென்று திரும்பிய வழியில், கீழே சாலை மார்க்கமாகப் பயணம் செய்துகொண்டிருந்த யாத்ரிகர்கள், வர்த்தகக் குழுவினர் குறித்தும் அவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள், எத்தனை தொலைவு, அவர்கள் மெக்காவை வந்து அடைய எத்தனை காலமாகும் போன்ற விவரங்களையெல்லாம் துல்லியமாகத் தெரிவித்திருக்கிறார் முகம்மது. சம்பந்தப்பட்ட வர்த்தகக் குழுவினர்கள் குறித்து அவர் சொன்ன அடையாளங்களை அவர்கள் திரும்பி வந்ததும் ஒப்பிட்டுப் பார்த்து, முகம்மது சொன்ன அனைத்து விவரங்களும் சரியே என்று கண்டு வியந்திருக்கிறார்கள்.)
இந்தச் சம்பவத்துக்குப் பின் முகம்மது மெக்காவில் தொடர்ந்து வசிப்பது மிகப்பெரிய பிரச்னையாகிப் போனது. நிச்சயமாகக் குறைஷிகள் முஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்பது தெரிந்துவிட்டது. குறிப்பாக, முகம்மதின் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்று அவரது தோழர்கள் பலர் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறார்கள்.
கி.பி. 622ல் அது நடந்தது. முகம்மது மெக்காவிலிருந்து யத்ரீபுக்கு இடம் பெயரலாம் என்று தீர்மானித்தார். யத்ரீப் என்பதுதான் அரபுப் பெயர். ஆனால் மதினா என்று சொன்னால்தான் பொதுவில் புரியும்.
மதினா என்பது ஹீப்ரு மொழிப்பெயர். அன்றைக்கு அங்கே அதிகம் பேசப்பட்டுக்கொண்டிருந்த மொழியும் அதுதான். ஏனெனில் மதினாவில் அப்போது அரேபியர்களைக் காட்டிலும் யூதர்கள்தாம் அதிகம் வசித்துவந்தார்கள்.
அரேபியர்களான குறைஷிகளின் தொல்லையிலிருந்து தப்பிக்க யூதர்கள் நிறைந்த மதினா நகருக்கு முகம்மது இடம் பெயர நேர்ந்தது ஒரு சரித்திர வினோதம்தான். ஆனால் அடுத்த சில வருடங்களில் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் இஸ்லாம் என்கிற ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதற்கு அங்கே தங்கியிருந்த காலத்தில் அவர் ஊன்றிய வித்துகள்தான் ஆதாரக் காரணமாக இருந்திருக்கின்றன.
மதினா என்கிற யத்ரிப் நகரில் அரேபியர்களும், அவர்களைக் காட்டிலும் கொஞ்சம் அதிக அளவு யூதர்களும் வசித்துவந்தார்கள். இதில், அரேபியர்கள் என்பவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள். அதிகம் படித்தவர்களோ, பணக்காரர்களோ அல்லர். மெக்கா நகரின் குறைஷிகளைப் போலல்லாமல், முகம்மதுவை ஓர் இறைத்தூதராக ஏற்பதில் அவர்களுக்குப் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லை. காரணம், முகம்மதுவை அவர்கள் தங்களில் ஒருவராகப் பார்க்க முடிந்ததுதான். அவர்களைப் போலவே முகம்மதுவும் படிப்பறிவில்லாதவர். அவர்களைப் போலவே எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொள்பவர். அவர்களைப் போலவே கனிவும் பரிவும் கொண்டவர். அவர்களைப் போலவே பாசாங்கற்றவர். ஆனால் அவர் உதிர்க்கிற ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்ட அழுத்தமும் தீர்மானமும் தீர்க்கதரிசனமும் மதினாவாசிகளுக்குப் பரவசமூட்டுபவையாக இருந்தன. பாமரர்தான்; ஆனால் இம்முறை இறைவன் அத்தகைய ஒருவரைத்தான் தன்னுடைய தூதராகத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் விதத்தில் இருந்தன, அவருடைய பேச்சும் செயல்பாடுகளும்.
நூறு நூறு ஆண்டுகளாக வழிகாட்ட ஒரு ஜீவனில்லாமல், காட்டுச் செடிகள் போல் பிறந்து, வாழ்ந்து மடிந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் சேர்ப்பதற்காகவே இறைவன் முகம்மதைப் படைத்து அனுப்பிவைத்தான் என்று நம்பினார்கள் மதினாவாசிகள். இதனாலேயே, நம்ப முடியாத அளவுக்கு முகம்மதின் ஆதரவாளர்களும் இஸ்லாத்தில் இணைவோரும் அங்கே பெருகத் தொடங்கினார்கள். உருவமற்ற ஒரே பரம்பொருளின் பெருமைகளைத்தான் முகம்மது பேசினார். முஸ்லிம்களாக மாறிய அரேபியர்கள் தமது இனக்குழுப் பகைகளை முன்னிட்டுத் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகாமல், ஒற்றுமையாக இருந்து பொது எதிரிகளான உருவ வழிபாட்டாளர்களைப் பண்படுத்த முயற்சி செய்யும்படி முகம்மது தொடர்ந்து வலியுறுத்தி வரத் தொடங்கினார்.
இவ்விஷயத்தில் அன்றைய மதினா நகரத்து யூதர்களையும் அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தே இருந்தார். இதற்கான காரணங்கள் மிக நுட்பமானவை.
யூதர்களும் உருவமற்ற ஒரே பரம்பொருளை வணங்குபவர்கள் என்பது முதல் காரணம். தவிரவும் அவர்களில் படித்தவர்கள் அதிகம். அமைப்பு ரீதியில் வலுவாகக் காலூன்றிய அவர்களது மதகுருமார்களின் சபைகள், முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஓர் ஒழுங்கையும் நேர்த்தியையும் கடைப்பிடித்துவந்தன. உருவ வழிபாட்டாளர்களுக்கு எதிரான சமயமாக இஸ்லாத்தை முன்னிறுத்துகையில், யூதர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றே முகம்மது அப்போது கருதினார். இரண்டும் சகோதர மதங்கள் என்பதை முன்வைத்து, இரு மதத்தினரும் சகோதரத்துவத்துடன் பழகவேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னார்.
அப்படிச் செய்ய இயலுமானால், பொது எதிரியைச் சந்திக்க வலிமை கிட்டும். ஒரு யுத்தம் என்று வருமானால் ராணுவ பலம் அதிகரிக்கும். அரேபிய முஸ்லிம்களின் உடல் வலுவும் யூதர்களின் புத்திக்கூர்மையும் இணையுமானால் வெற்றிக்குப் பிரச்னை இராது. வேறு வேறு நம்பிக்கைகள், வேறு வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களே என்றாலும் உருவமற்ற ஒரே இறைத் தத்துவத்தின் அடிப்படையில் இரு மதங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது பெரிய காரியமல்ல என்றே முகம்மது கருதினார்.
யூதர்களால் முதலில் முகம்மதை முழுமையாக ஏற்க முடியவில்லை. ஓர் இறைத்தூதர், காட்டான்களாகிய அரேபியர்களிடையே உதித்திருக்கிறார் என்பதை அவர்களது மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. அதே சமயம், உருவமற்ற ஒரே இறைவன் என்கிற கருத்தாக்கத்தை முகம்மது தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, அவரை நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில், அரேபியர்களிடையே வேறு யாருக்கும் அப்படிச் சிந்திக்கக்கூடத் தோன்றாது.
மதக் காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், சமூகப் பாதுகாப்பு, அரசியல்ரீதியிலான பலம் போன்ற காரணங்களுக்காவது முஸ்லிம்களுடன் இணைந்து செயல்படலாம் என்று யூதகுருமார்களின் சபை அப்போது தீர்மானித்தது. ஏனெனில், முகம்மதுவைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் நம்பமுடியாத அளவுக்கு அப்போது பெருகிக்கொண்டிருந்தது. ஜெருசலேத்திலிருந்து புறப்பட்ட நாளாக, அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு அவசியம் என்று பட்டது. அவர்களிடம் ஓர் ஒழுங்கான மத நிர்வாக அமைப்பு இருந்ததே தவிர, ஒழுங்கான ராணுவம் கிடையாது. ஒரு தகராறு என்று வருமானால் எதிர்த்து நிற்க ஆள்பலம் போதாது.
ஆனால் முகம்மதுவின் ஆராதகர்கள் உடல்வலுவும் மனபலமும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்தார்கள். மண்டியிட்டுத் தொழத்தெரிந்தவர்களாகவும் வாளேந்தி யுத்தம் புரியக்கூடியவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். முகம்மது ஒரு சொல் சொன்னால் உயிரைத்தரவும் சித்தமாக இருந்தார்கள். அத்தகையவர்களுடன் நல்லுறவு கொள்வது யூதகுலம் யுத்தங்களில் மேலும் மடியாமல் இருக்க உதவியாக இருக்கும் என்று கணக்குப் போட்டது யூத மதகுருமார்களின் சபை.
இந்தக் காரணங்களை மிக கவனமாகப் பார்க்கவேண்டும். முகம்மது, யூதர்களின் தோழமை முக்கியம் என்று கருதியதற்கு மதக் காரணங்கள்தான் உண்டு. யூதர்கள், இஸ்லாமியர்களின் தோழமையை விரும்பியமைக்கு ராணுவக் காரணங்களே பிரதானம். முகம்மதின் பிரச்னை, அவநம்பிக்கையாளர்கள் சம்பந்தப்பட்டது. யூதர்களின் பிரச்னை, சொந்த வாழ்க்கை தொடர்பானது. இரண்டும் வேறு வேறு எல்லைகளில் நிற்கிற பிரச்னைகள். ஆயினும் ஒரு நேர்கோட்டில் வந்து இணையவேண்டிய காலக்கட்டாயம் அப்போது ஏற்பட்டது.
ஓர் உடன்பாடு செய்துகொண்டார்கள். இரு தரப்பினரும் பரஸ்பரம் வேண்டிய உதவிகள் செய்துகொள்ளவேண்டியது. யாருக்கு எந்தப் பிரச்னை என்றாலும் உடனே போய் உதவவேண்டியது முக்கியம். மெக்கா நகரின் குறைஷிகளால் மதினா முஸ்லிம்களுக்குப் பிரச்னை வருமானால் அங்குள்ள யூதர்கள் யுத்தத்தில் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அதேபோல், மதினாவாழ் யூதர்களுக்கு யாரால் எந்தப் பிரச்னை வந்தாலும் முகம்மதின் படை உதவப் போகும்.
நம்புவது கொஞ்சம் சிரமம்தான். மதினாவுக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் முகம்மது அங்கே ஒரு சக்கரவர்த்திபோலக் கருதப்பட்டார். அவரது சொல்லுக்கு மாறாக ஓர் எதிர்க்குரல் அங்கே எழுந்துவிட முடியாது. மதினாவில் இருந்த அரேபியர்கள் சமூகம் முழுவதையும் தமது அன்பாலும் கனிவுமிக்க பேச்சாலும் கவர்ந்திழுத்த முகம்மது, குர் ஆனின் வசனங்களை ஓதி ஓதிக் காட்டி, அவர்களின் மனங்களைப் பண்பட வைத்தார். எந்த ஒரு மனிதப்பிறவியும் குறிப்பாக அரபுக் கவிஞர்கள் இத்தனை அர்த்தம் பொதிந்த, இனிய வரிகளைக் கற்பனையில் தயாரித்துவிடமுடியாது என்று எண்ணிய அரேபிய ஆதிவாசிகள், நிச்சயமாக முகம்மது ஓர் இறைத்தூதர்தான் என்று பார்த்த மாத்திரத்தில் நம்பி, அடிபணிந்தார்கள். முகம்மதே தங்கள் மன்னர் என்றும் கருத ஆரம்பித்தார்கள்.
சந்தேகமில்லாமல் அவர் ஒரு மன்னர்தான். ஆனால் நம்ப முடியாத அளவுக்கு எளிமையைக் கடைப்பிடித்த மன்னர்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஒருகாலத்தில் பிணங்களை அடக்கம் செய்துகொண்டிருந்த ஓரிடத்தை விலைக்கு வாங்கி, அங்கே ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார் முகம்மது. பக்கத்திலேயே ஈச்ச ஓலைகள் வேய்ந்ததொரு பள்ளிவாசலையும் தாமே கட்டிக்கொண்டார். முஸ்லிம்கள் ஜெருசலேத்தை நோக்கித் தொழவேண்டும் என்பதுதான் ஆரம்பக் காலத்தில் முகம்மது வாயிலாக வெளிவந்த இறைக் கட்டளையாக இருந்தது. (பின்னால்தான் மெக்கா இருக்கும் திசை நோக்கித் தொழுகை நடத்தும்படி கட்டளை மாற்றப்பட்டது.)
எளிமையான, பாசாங்கில்லாத வாழ்க்கை, தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் நேர்மையைக் கடைப்பிடிக்கச் சொன்னது, சகோதரத்துவ போதனைகள் போன்றவை, கேள்விகளற்று முகம்மதுவை ஏற்கும்படிச் செய்தன. யூதர்களுக்குக் கூட, முகம்மது தம் ஆதரவாளர்களை ஜெருசலேம் நோக்கித் தொழச்சொல்லியிருந்தது மிகுந்த சந்தோஷமளித்தது. யூத மதமும் இஸ்லாமும் பல்வேறு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதுதானோ என்றும் அவர்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.
முஸ்லிம்கள் யூதப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்றுகூட அப்போது முகம்மது கூறியிருந்ததாகப் பல யூத சரித்திர ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். திருமண உறவுகள் அரசியல் உறவை வலுப்படுத்தும் என்று இரு தரப்பினருமே கருதியிருக்கலாம்.
அதே சமயம், இந்தச் சரித்திர ஆசிரியர்கள் சில கற்பனையான யூகங்களையும் செய்திகள் போலவே வெளியிட்டுவிடுவதையும் சொல்லவேண்டும். உதாரணமாக, மார்ட்டின் கில்பர்ட் என்கிற புகழ்பெற்ற யூத சரித்திர ஆய்வாளர், "யூதர்கள் தன்னை அவர்களது இறுதி இறைத்தூதர் என்று முழுமையாக ஏற்றுக்கொண்டுவிடுகிற பட்சத்தில், முகம்மது தாமே ஒரு யூதராக மாறிவிடவும் தயாராக இருந்தார்" என்று சொல்கிறார். இதற்கு யூதர்கள் சம்மதிக்காததால்தான் இரு தரப்பாரிடையே உறவு முறியவேண்டியதானது என்று எழுதுகிறார்.
குர்ஆனிலோ, முகம்மதின் வாழ்வையும் போதனைகளையும் சொல்லும் ஹதீஸ்களிலோ, முகம்மதின் உடனிருந்தவர்கள் வைத்துவிட்டுப் போன நினைவுக்குறிப்புகள் எது ஒன்றிலோ அல்லது மாற்று மதத்தவர் யாருடைய குறிப்புகளிலுமோகூட இம்மாதிரியானதொரு அதிர்ச்சிதரத்தக்க விஷயம் காணப்படவில்லை.
இரண்டு வருடகாலத்துக்கு மேலாக மிகுந்த நல்லுறவுடன் வளர்ந்துவந்த முஸ்லிம் _ யூத சகோதரத்துவம் மதினாவில் இற்றுப்போகத் தொடங்கியதற்கு உண்மையான காரணங்கள் வேறு.
முதலாவது, கொடுத்த வாக்குப்படி அவர்கள் முஸ்லிம்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் செய்வதில் தயக்கம் காட்டினார்கள். முஸ்லிம்கள் மட்டும் தமக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
இரண்டாவது காரணம், முஸ்லிம்களின் ஒத்துழைப்பு வேண்டும்; ஆனால் முகம்மதை முழு மனத்துடன் இறைத்தூதராக ஒப்புக்கொள்ள இயலாது என்று அவர்கள் விடாப்பிடியாக நின்றது. இதை எந்த முஸ்லிமும் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார். "நீங்கள் இறைவனையும் எங்களையும் பழித்தால்கூட, சகித்துக்கொள்வோம். முகம்மது ஓர் இறைத்தூதர் என்று ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் எவ்வித உறவும் நமக்குள் இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டார்கள்.
மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், இயேசு செய்ததைப் போலவே முகம்மதும் யூதர்கள் தம் மதத்தின் ஆதி நம்பிக்கைகளுக்குப் புறம்பான புதிய மதப்பழக்க வழக்கங்களை மேற்கொண்டதையும் குருமார்களுக்கான ஆராதனைகள் பெருகுவதையும் விமர்சனம் செய்யத் தொடங்கினார். ஒரே இறைவன். அவனைத்தவிர வழிபாட்டுக்குரியவர்கள் வேறு யாருமில்லை என்பதுதான் ஆபிரஹாம் என்கிற இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் மேற்கொள்ளவேண்டிய உறுதி. இதற்கு மாறாக யூதர்கள் நடந்துகொள்ளத் தொடங்கியபோது, அவர்களது நடத்தையை முகம்மது தயங்காமல் விமர்சித்தது, யூதர்களுக்குப் பிடிக்கவில்லை.
இந்தக் காரணங்களால்தான் யூதர்கள் முஸ்லிம்களிடையே முதல் முதலில் பிளவு உண்டானது.
கி.பி. 624 ம் வருடம் முகம்மது தமது மக்களிடம் இனி மெக்காவை நோக்கித் தொழுங்கள் என்று சொன்னார். அதுநாள்வரை ஜெருசலேம் நோக்கித் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் அப்போதிலிருந்து மெக்காவை நோக்கித் தொழ ஆரம்பித்தார்கள்.
இரண்டும் வேறு வேறு திசைகள். எதிரெதிரேதான் இருக்க முடியும்.
"பிரசாரகர்களின் சாமர்த்தியத்தால் கிறிஸ்துவம் பரவியது; வாள்முனை மிரட்டலினால் இஸ்லாம் பரவியது" என்று ஒரு கருத்து உலகெங்கும் பரவலாகச் சொல்லப்பட்டு வருவது. இன்று நேற்றல்ல, இஸ்லாம் பரவத் தொடங்கிய நாளாகவே இக்கருத்து ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டு வந்திருக்கிறது. கிறிஸ்துவம் எப்படிப் பரவியது என்பதை ஆழமாக அலசுவதற்கு இது இடமல்ல. ஆனால், இஸ்லாம் பரவிய விதத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.
முகம்மது நபி பிறந்த சவூதி அரேபியாவிலோ, எல்லா நபிமார்களுக்கும் உகந்த இடமான பாலஸ்தீனிலோ மட்டும் இஸ்லாம் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அங்கே மட்டும் அம்மார்க்கம் செல்வாக்குப் பெற்றிருக்குமானால் இத்தகையதொரு விஷயம் பற்றிப் பேசவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது. மாறாக, ஒட்டுமொத்த மத்திய ஆசியாவிலும் மிகக்குறுகிய காலத்தில் செல்வாக்குப் பெற்று, முகம்மது நபியின் மறைவுக்குப் பின் மிகச்சில ஆண்டுகளிலேயே ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் பரவி, உலகின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் காலூன்றி நிற்க முடிந்திருக்கிறதென்றால், அது எவ்வாறு பரவியது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.
இதை ஆராய்வதற்கு முதல் தடையாக இருப்பது, "அது அச்சுறுத்தலால் பரப்பப்பட்ட மதம்" என்கிற முன் அபிப்பிராயம், அல்லது முன் முடிவு அல்லது முன் தீர்மானம். இந்த முன் தீர்மானம் அல்லது முன் அபிப்பிராயத்தை இஸ்லாத்தைக் காட்டிலும் வேகமாகப் பரப்பி வேரூன்றச் செய்தவர்கள் மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள். பெரும்பாலும் யூதர்கள். சிறுபான்மை கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர்கள்.
மிகவும் அற்பமானதொரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். முகம்மது நபியின் காலத்தில் இஸ்லாத்தை முன்னிட்டு மொத்தம் சுமார் எழுபத்தைந்து அல்லது எண்பது யுத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக அனைத்து மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். அத்தனை யுத்தங்களிலும் ரத்த ஆறு பெருகியதென்றும் யுத்தக் கைதிகளை வாள்முனையில் மிரட்டி இஸ்லாத்தில் இணைத்ததாகவும் ஏராளமான சம்பவங்களை இந்தச் சரித்திர ஆய்வாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.
உண்மையில் முகம்மது நபியின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களாக ஆதாரங்களுடன் கிடைப்பது மொத்தம் மூன்றுதான். பத்ரு, உஹைத், ஹுனைன் என்கிற மூன்று இடங்களில் முஸ்லிம்கள் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாம் குறித்து அல்லாமல், முகம்மது நபியின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்களில் இந்த யுத்தங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. உண்மையில் எண்பது யுத்தங்கள் அவர் காலத்தில் நடந்திருக்குமானால், இந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவற்றையும் அவசியம் பதிவு செய்திருப்பார்கள். மாறாக, மேற்சொன்ன மூன்று யுத்தங்கள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள்.
இதைக்கொண்டே, இஸ்லாத்தை முன்னிட்டு முகம்மது நபியின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்கள் மூன்றுதான் என்கிற முடிவுக்கு வரவேண்டியதாகிறது.
முகம்மது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம் பெயர்ந்து சென்றது கி.பி.622 ம் ஆண்டு. பத்தாண்டுகளே அவர் மதினாவில் இருந்தார். கி.பி. 630 ல் மெக்காவை வெற்றி கொண்டதற்கு இரண்டாண்டுகள் கழித்துக் காலமாகிவிட்டார். (கி.பி.632) இந்தக் கணக்கில் பார்த்தால், ஆண்டுக்கு எட்டு யுத்தங்கள் வீதம் நடந்திருந்தால்தான் எண்பது யுத்தங்கள் சாத்தியம். அரேபியாவில் அல்ல; உலகில் வேறு எங்குமே கூட அத்தனை யுத்தங்கள் ஒரு சேர நடந்ததாகச் சரித்திரமில்லை.
ஆக, முகம்மது நபியின் காலத்தில் யுத்தங்களின் மூலம் இஸ்லாம் பரப்பப்படவில்லை என்கிற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஆதாரங்களுடன் உள்ள மூன்று யுத்தங்கள் கூட ஒரே தினத்தில் ஆரம்பித்து, நடந்து, முடிந்தவையாகவே இருக்கின்றன. அதாவது, ஒருநாள் கலவரம்.
முகம்மதுவுக்கும் மற்ற இறைத்தூதர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில், முகம்மது ஒருவர்தான் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்திருக்கிறார். மதப்பிரசாரம் மட்டுமே அவரது பணியாக இருக்கவில்லை. மாறாக, அவர் மெக்காவிலிருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்த நாளாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கட்டிக்காக்கும் ஒரு பெரிய இனத்தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. மிகக் குறுகிய காலத்தில் மதினாவாழ் அரேபியர்கள் அத்தனைபேருமே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டபடியால், மதினாவின் முடிசூடாத மன்னராகவே அவர் ஆகிப்போனார்.
ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிரான குறைஷிகளின் யுத்தம் என்பது காலப்போக்கில் மதினா மக்களுக்கு எதிரான மெக்காவாசிகளின் யுத்தம் என்று ஆகிவிட்டது. மதினாவைத் தாண்டி இஸ்லாம் பரவத் தொடங்கியபோது, எங்கெல்லாம் முஸ்லிம்கள் அபாயத்தைச் சந்திக்க நேரிடுகிறதோ, அங்கெல்லாமும் பிரச்னையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு முகம்மது நபியைச் சேர்ந்தது. கட்டக்கடைசி வினாடி வரை அவர் யுத்தங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருப்பதாகச் சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. தவிர்க்கவே முடியாத மூன்று சந்தர்ப்பங்களில்தான் முகம்மது, யுத்தத்துக்கான உத்தரவு அளித்திருக்கிறார்.
அந்த மூன்று யுத்தங்களுள், பத்ரு யுத்தம் மிகவும் முக்கியமானது. இந்த யுத்தத்தில் பங்குபெற்ற முஸ்லிம்கள் மொத்தம் 313 பேர். எதிரிகளாக இருந்த குறைஷிகளின் படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி, வியப்புக்குரியது. (முதலில் படையெடுத்து வந்தவர்கள் குறைஷியர்தாம்.) ஆயிரக்கணக்கான குறைஷி வீரர்களை எப்படி வெறும் முந்நூறு முஸ்லிம் வீரர்கள் வென்றார்கள் என்கிற கேள்விக்கு அறிவியல்பூர்வமான பதில் ஏதும் கிடையாது. ஆனாலும் ஜெயித்தார்கள்.
இந்த யுத்தத்தில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக குறைஷிகள் தொடுத்த அடுத்த யுத்தம்தான் உஹைத் யுத்தம். (அதாவது, உஹைத் என்கிற இடத்தில் நடந்த யுத்தம்.) முகம்மது ஓர் இறைத்தூதரே ஆனாலும், இதுவும் வலிய வந்த யுத்தமே ஆனாலும் இந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த யுத்தத்தில் முகம்மது நபியே வாளேந்தி, கலந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படியும் முஸ்லிம்கள் இதில் தோல்வியே அடைந்தார்கள்.
மூன்றாவது யுத்தமான ஹுனைன் போருக்குக் குறைஷிகள் காரணமல்ல. மெக்கா நகரின் குறைஷி இனத்தவரின் ஜென்மப்பகையாளிகளான ஹவாஸின் என்கிற இன்னொரு அரபு இனத்தவர்களே இந்தப் போரின் சூத்திரதாரிகள். குறிப்பாக மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி என்கிற அந்த இனத்தலைவர்.
பத்ரு போரில் குறைஷிகளை முஸ்லிம்கள் வெற்றி கொண்டதிலிருந்தே அவருக்கு ஒரு பதற்றம் இருந்தது. தங்களது பகையாளிகள் என்றாலும், குறைஷிகள் பெரிய வீரர்கள். அவர்களையே போரில் வெற்றி கொண்டவர்கள் என்றால், முஸ்லிம்களைச் சாதாரணமாக எண்ணிவிடமுடியாது. நாளைக்கு இந்த முஸ்லிம்கள் நம்மையும் தாக்கினால் என்னாவது என்கிற தீவிர முன் ஜாக்கிரதை உணர்வுடன் தாமாகவே வலிந்து தம் இனத்தவரைத் திரட்டி, தோழமையான பிற சாதியினரையும் உடன் இணைத்துக்கொண்டு முஸ்லிம்களுடன் யுத்தம் செய்யக் கிளம்பினார் மாலிக் இப்னு அவ்ஃப் அன்சாரி.
ஒரு முழு நாள் நடந்த இந்த யுத்தத்தில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது.
இந்த மூன்று யுத்தங்கள்தான் முகம்மது நபி உயிருடன் இருந்த காலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்ட யுத்தங்கள். இவை தவிர உஷைரா யுத்தம், அப்வா யுத்தம், சவீக் யுத்தம், சஃப்வான் யுத்தம், துமத்துல் ஜந்தல் யுத்தம், தபுக் யுத்தம், ஜாத்துர் யுத்தம், நுலைர் யுத்தம் என்று ஏராளமான யுத்தங்கள் நடந்ததாக மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் சொன்னாலும் இந்த யுத்தங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. சில சந்தர்ப்பங்களில் யுத்த மேகங்கள் சூழ்ந்தது உண்மையே. ஆனால் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் யுத்தம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் சில யுத்தக்களங்களில் முகம்மது நேரில் கலந்துகொள்ள வருகிறார் என்று கேள்விப்பட்டு, யுத்தம் செய்ய வந்தவர்கள் பின்வாங்கிப் போனதாகவும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
முகம்மது நபி ஒரு சிறந்த போர் வீரரா, யுத்த தந்திரங்கள் அறிந்தவரா என்பது பற்றிய போதுமான ஆதாரங்கள் ஏதும் நமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் மக்கள் செல்வாக்குப் பெற்ற ஒரு பெருந்தலைவராக அவர் இருந்தபடியால் இயல்பாகவே அச்சம் கலந்த மரியாதை இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இருந்திருக்கிறது. அதே சமயம், முகம்மதின் தோழர்கள் பலர் மாபெரும் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் கலீஃபாக்களான உமர், அலி போன்றவர்கள், போர்க்களங்களில் காட்டிய வீரத்துக்காகவே இன்றளவும் நினைக்கப்படுபவர்களாக இருந்திருக்கிறார்கள். (முகம்மது நபியின் காலத்துக்குப்பின் நடந்த யுத்தங்கள் பிறகு வரும்.)
இவை ஒருபுறமிருக்க, தொடர்ந்து போர் அச்சுறுத்தல்களும் நிம்மதியின்மையும் இருந்துகொண்டே இருந்ததால் மதினாவில் நிரந்தர அமைதிக்கான ஓர் ஏற்பாட்டைச் செய்யவேண்டிய கட்டாயம் முகம்மதுவுக்கு ஏற்பட்டது. மதத்தலைவராக அல்லாமல், ஓர் ஆட்சியாளராக இதனைச் செய்யவேண்டிய கடமை அவருக்கு இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முகம்மது ஓர் உபாயம் செய்தார். மெக்காவிலிருந்து அவருடன் மதினாவுக்கு வந்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும், மதினாவாழ் மக்கள் தம் உறவினராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதாவது, முகம்மதுவுடன் மெக்காவிலிருந்து வந்த ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் குழந்தையையும், ஒவ்வொரு மதினாவாசியும் தம் உறவினராக மானசீகமாக சுவீகரித்துக்கொள்வது. இதன்மூலம் மெக்கா முஸ்லிம்களுக்கும் மதினா முஸ்லிம்களுக்கும் பிரச்னை ஏதும் உண்டாகாது. பொது எதிரி யாராலாவது பிரச்னை வந்தாலும் இரு தரப்பினரும் இணைந்தே எதிர்கொள்வார்கள்.
அடுத்தபடியாக மதினாவாழ் யூதர்கள். முன்பே பார்த்தபடி அன்றைக்கு மதினாவில் யூதர்கள் அதிகம் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் மெக்கா முஸ்லிம்களும் மதினா முஸ்லிம்களும் இணைந்தபோது அவர்களின் பலம், யூதர்களின் பலத்தைக் காட்டிலும் அதிகரித்துவிட்டிருந்தது. ஆகவே முகம்மது நபி, மதினாவில் வசிக்கும் யூதர்கள், அங்குள்ள முஸ்லிம்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவேண்டும்; ஒருத்தருக்கொருத்தர் உதவிகள் செய்துகொண்டு வாழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வெறும் வேண்டுகோள் அல்ல அது. ஓர் அதிகாரபூர்வ அரசு அறிக்கையே வெளியிட்டார். அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது சுதந்திரம் குறித்தும் திட்டவட்டமான ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.
"நமது குடியரசில் தம்மை இணைத்துக்கொள்ளும் யூதர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களுக்குச் சம உரிமை படைத்தவர்களாவார்கள். யூதர்கள் தமது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையும் இல்லை. அனைத்து இனக்குழுக்களையும் உள்ளடக்கிய மதினாவாழ் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து உருவாக்குகிற தேசம் இது."
முகம்மது நபி, ஓர் ஆட்சியாளராக, அதிகாரபூர்வமாக வெளியிட்ட முக்கியமான முதல் அறிக்கை இது.
முகம்மது நபிக்குப் பின்னால் வந்த கலிஃபாக்களோ, சரித்திரத்தின் வழியெங்கும் பின்னால் உலகெங்கும் ஆண்டு மறைந்த எத்தனையோ பல முஸ்லிம் மன்னர்களோ, சக்ரவர்த்திகளோ இந்தளவுக்கு மத நல்லிணக்கத்துடன் ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. குறிப்பாக, யூதர்களைப் பொறுத்தவரை அவர்கள் அதுநாள் வரை வாழ்ந்த அடிமை வாழ்வுடன் ஒப்பிடுகையில், முகம்மதுவின் இந்த அறிக்கைப் பிரகடனம், அவர்களாலேயே நம்ப முடியாதது.
இந்த அறிக்கைக்குப் பிறகு, முகம்மது எதிர்பார்த்தபடி மதினாவாழ் யூதர்கள் அங்கிருந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைத் தொடர்ந்திருப்பார்களேயானால், பின்னாளில் உறங்க ஒரு நிலமில்லாமல் உலகெங்கும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கவே வேண்டியிருந்திருக்காது என்று தோன்றுகிறது. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றியே யூதர்களுக்கான தனி தேசம் சாத்தியமாகியிருக்கலாம்.
ஏனெனில், கலீஃபா உமரின் காலத்தில் முதல்முதலாக ஜெருசலேத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது, மதினாவில் முகம்மதுநபி யூதர்களின் உரிமைகளாக எதையெதையெல்லாம் வகுத்தாரோ, அதையெல்லாம் அப்படியே கடைப்பிடித்தார்கள். யூதர்களும் முஸ்லிம்களும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்தான் என்பதைத் தமது பல்வேறு நடவடிக்கைகளின்மூலம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் காட்டி, யூதர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் கூடாது என்று உமர் வலியுறுத்திச் சொன்னார்.
தங்களது சுதந்திரம் என்பது, தனியான யூததேசம்தான் என்பதை அன்று அவர்கள் உமரிடம் எடுத்துச் சொல்லியிருந்தால்கூட ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.
மாறாக, முஸ்லிம்களின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு, அந்த ஆட்சிக்கு உட்பட்ட அளவில் சுதந்திரமாக வாழ்வதாக ஒப்புக்கொண்டு, பின்னால் மறைமுகமாகச் சதித்திட்டங்கள் தீட்டத் தொடங்கியபோதுதான் யூதர்களின் இருப்பு பிரச்னைக்குள்ளானது.
எப்போதும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளுக்குப் பேர்போன யூதர்கள், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் ஏன் அப்படியரு முட்டாள்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்கிற கேள்விக்கு விடையில்லாததுதான் சரித்திர வினோதம்.
முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கை வெளியானபோது, அதனை மனப்பூர்வமாக ஏற்பதாகச் சொல்லித்தான் யூதர்களும் தம்மை மதினாவின் இஸ்லாமிய அரசுக்கு உட்பட்ட குடிமக்களாக அறிவித்துக்கொண்டார்கள். ஆனால் இஸ்லாமிய சரித்திரத்தில் குறிப்பாக முகம்மது வாழ்ந்த காலத்தில் இஸ்லாத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஏராளமான கலகங்களுக்கும், ஒரு சில யுத்தங்களுக்கும் மறைமுகத் தூண்டுதல்கள் அவர்களிடமிருந்தே வந்ததாகச் சரித்திரம் சொல்கிறது. யுத்தம் என்று வரும்போது, ஒப்பந்தப்படி யூதர்கள் முஸ்லிம்களை ஆதரித்தாகவேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் யூதர்கள் யுத்தத்தில் பங்கெடுக்காமல் "நடுநிலைமை" காப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
முஸ்லிம்களுக்கு முதலில் யூதர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது புரியவில்லை. பிறகு, அவர்கள் முகம்மதை ஒரு இறைத்தூதராக மனப்பூர்வமாக ஏற்கவில்லை; ஒப்புக்குத்தான் அவரது அறிக்கையை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியவந்தபோது, உடனடியாக யூத உறவைக் கத்திரித்துவிட விரும்பினார்கள்.
யூத குலத்திலேயே பிறந்து, யூதர்களின் மரபு மீறல்களை மட்டுமே சுட்டிக்காட்டி கண்டித்த முந்தைய இறைத்தூதரான இயேசுவையே ஏற்காதவர்கள் அவர்கள். முகம்மதை எப்படி மனப்பூர்வமாக ஏற்பார்கள்? தவிரவும் யூதர்களுக்குத் தம்மைப்பற்றிய உயர்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. யூத இனத்தைக் காட்டிலும் சிறந்த இனம் வேறொன்று இல்லை என்பதில் அவர்களுக்கு இரண்டாவது அபிப்பிராயமே கிடையாது. ஆகவே, ஓர் அரேபியரை இறைத்தூதராகவோ, அரபு மொழியில் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த குர்ஆனை ஒரு வேதமாகவோ ஏற்பதில் அவர்களுக்கு நிறையச் சங்கடங்கள் இருந்தன.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான காரணம், அச்சம். இஸ்லாத்தின் வீச்சு குறித்த அச்சம். பெரும்பாலான அரேபிய சமூகமும், ஏராளமான கிறிஸ்துவர்களும் "உமக்கே நாம் ஆட்செய்தோம்" என்று குழுக் குழுவாக இஸ்லாத்தில் இணைந்துகொண்டிருந்ததால் விளைந்த அச்சம். ஏற்கெனவே கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்களையே மீட்க இயலாத நிலையில், மிச்சமிருக்கும் யூத சமூகத்தினர் எங்கே இஸ்லாத்தில் இணைந்துவிடுவார்களோ என்கிற கலவரம்.
அப்போது பெரும்பாலும் பிரசாரம் மூலம்தான் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்தது. புனிதப்பயணமாக உலகெங்கிலுமிருந்து சவூதி அரேபியாவுக்கு வரும் மக்களிடையே முஸ்லிம்கள் பிரசங்கம் நிகழ்த்துவார்கள். குறைஷியரின் வன்முறைகளுக்கு இடையிலும் பிரசாரப் பேச்சுகள் நிற்காது. பேச்சு என்பது பெரும்பாலும் பேச்சாக இருக்காது. மாறாக, குர்ஆனிலிருந்து சில சூராக்களை ஓதிக் காட்டுவார்கள். மனிதர்கள் ஆயிரம் எடுத்துச் சொன்னாலும் இறைவனின் நேரடிச் சொற்களின் வலிமைக்கு நிகராகாது என்பதை முகம்மதின் தோழர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆகவே, தமது கருத்துக்களை முன்வைக்காமல், குர்ஆனிலிருந்து முக்கியமான பகுதிகளை ஓதிக்காட்டுவார்கள். அதனால் கவரப்பட்டு விவரம் கேட்பவர்களிடம் மட்டுமே இஸ்லாம் குறித்து விளக்கம் அளிப்பார்கள். இந்த இரு கட்டங்களைத் தாண்டுபவர்கள் அவசியம் முகம்மது நபியைச் சந்திக்க விருப்பம் தெரிவிப்பார்கள். அவரை ஒருமுறை சந்தித்துவிட்ட யாரும் இஸ்லாத்தில் இணையாதோராக இருந்ததாகச் சரித்திரமில்லை!
படித்தவர்கள் அதிகமில்லாத அந்தக் காலத்தில், ஓர் இனக்குழுத்தலைவர் இஸ்லாத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறார் என்றால், அந்த இனக்குழுவே ஏற்றுக்கொண்டுவிடுவதில் பிரச்னை ஏதுமிராது. அதாவது, தலைவர் ஒப்புக்கொண்ட ஒரு விஷயத்தைத் தம் சமூகத்தின் மக்களுக்குத் தெரிவித்துவிட்டால் போதும். கேள்விகளற்று ஒட்டுமொத்த சமுதாயமும் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான அரேபியர்கள் இஸ்லாத்தில் இணைந்ததற்கு இந்த வழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது.
இதனாலெல்லாம்தான் யூதர்கள் கலங்கிப்போனார்கள். பரவல், பிரசாரம் போன்ற எதுவுமே யூத மதத்தில் கிடையாது. இதனை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். இருக்கும் யூதர்களையாவது கட்டிக்காக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்த யூத மதகுருமார்களின் சபை, இந்தக் காரணத்தினால்தான் முகம்மது நபியிடம் ஒப்புக்கொண்டபடி முஸ்லிம்களுடன் நல்லுறவு பேணாமல், விலகி விலகிப் போகத் தொடங்கியது.
கி.பி. 630 ல் மிகப்பெரிய ராணுவபலம் பொருந்திய ஒரு குட்டி ராஜ்ஜியமாக இருந்தது மதினா. அதன் முடிசூடாத சக்ரவர்த்தியாக முகம்மதுவே இருந்தார். பத்தாண்டுகால வெளியேற்றத்துக்குப் பிறகு அந்த ஆண்டுதான் மெக்காவை அடைந்தே தீருவது என்கிற உறுதி கொண்டு படையுடன் புறப்பட்டார். எந்த முகம்மதுவையும் அவரது தோழர்களையும் ஒழித்துக்கட்டியே தீருவது என்று கொலைவெறி கொண்டு திரிந்தார்களோ, அந்த குறைஷிகளுக்கு அப்போது முகம்மதுவின் படையினரை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லை. காரணம், முகம்மதுவின் பின்னால் அணிவகுத்திருந்த அந்தப் படை, பத்ருப்போரில் பங்குபெற்றதைப் போல முந்நூற்றுப் பதின்மூன்று பேர் கொண்ட படை அல்ல. மாறாக, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை அணிவகுத்திருந்தனர் முஸ்லிம் ராணுவ வீரர்கள். அவர்களது ஒட்டகப்பிரிவு ஒரு சாலையை அடைத்து நிறைத்திருந்தது. யானைகள் மறுபுறம் அணிவகுத்திருந்தன. வீரர்களின் வாள்களில் நட்சத்திரங்கள் மின்னின. வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்தவர்களைப் போல் அவர்களின் முகங்களில் அமைதியும் உறுதியும் ததும்பின.
முன்னதாக முகம்மது தன் வீரர்களிடம் சொல்லியிருந்தார். "இந்த யுத்தம் மனிதர்கள் தம் பகைவர்களுடன் நிகழ்த்தும் சராசரி யுத்தமல்ல. இறைவனுக்காக நிகழ்த்தப்படும் யுத்தம். நமது தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு இதில் இடமில்லை. மெக்காவில் உள்ள க'அபா இறைவனின் வீடு. அதனுள்ளே செல்லவும் தொழுகை செய்யவும் எல்லாரைப் போலவும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைக்காகத்தான் இப்படி அணிவகுத்திருக்கிறோம்."
ஆனால் முகம்மது உள்பட யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. போரிட அச்சம் கொண்ட குறைஷியரும் அவர்களது அணியிலிருந்த பிற இனக்குழு படையினரும் தமது ஆயுதங்களை வீசிவிட்டு க'அபாவுக்குள்ளே இருந்த ஏராளமான தெய்வச் சிலைகளின் பின்னால் உயிருக்குப் பயந்து பதுங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த யுத்தம் மட்டும் நடக்குமானால் மெக்காவில் ஒரு குறைஷியும் உயிருடன் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
காரணம், அணிவகுத்து வந்திருந்த முஸ்லிம்களின் படைபலம் ஒருபுறம் என்றால், மெக்காவிலேயே பொதுமக்களிடையே பரவியிருந்த முகம்மதுவின் புகழ் இன்னொருபுறம். உள்ளூர் மக்களின் செல்வாக்கை இழந்திருந்த குறைஷி ராணுவத்தினர் எப்படியும் தம் மக்களே முகம்மதுவுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆகவே, ஏதாவது செய்து உயிர்பிழைத்தால் போதும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது!
ஒரு துளி ரத்தம் சிந்தாமல் அன்றைக்கு மெக்கா முகம்மது நபியின் வசமானது. போரில் அடைந்த வெற்றியல்ல; அதற்குப் பிறகு அவர் செய்த ஒரு காரியம்தான் மகத்தானது.
வெற்றிக்களிப்புடன் க'அபாவுக்குள் நுழைந்த முஸ்லிம் ராணுவ வீரர்களுக்கு முகம்மது ஓர் உத்தரவை இட்டிருந்தார். யாரையும் கொல்லாதீர்கள். யாரையும் எதிரி என்று எண்ணாதீர்கள். யாரையும் கைது செய்யவும் வேண்டாம்.
உலக சரித்திரத்தில் இன்றுவரை இதற்கு நிகரானதொரு சம்பவம் எந்த தேசத்திலும், எந்தப் போர்க்களத்திலும் நடந்ததில்லை. தோல்வியுற்ற மெக்கா ராணுவத்தினர் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொல்லப்படவில்லை. மாறாக, "உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் விடுதலை பெற்றீர்கள். மனிதர்களுக்கு இடையில் இதுகாறும் இருந்துவந்த அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் வெறுப்பையும் காலடியில் இட்டு நசுக்கிவிடுவோம்" என்று சொன்னார் முகம்மது நபி.
இதனை அவர் மன்னராகச் சொல்லவில்லை. ஓர் இறைத்தூதராகச் சொன்னார்! அந்தக் கருணை பீறிட்ட உள்ளம்தான் இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம். அன்றைய தினம் தொடங்கி இஸ்லாம் "பரப்பப்படவேண்டிய" அவசியமே இன்றித் தானாகப் பரவத் தொடங்கியது. மனிதர்களுக்குள் ஜாதி, மத, இன வித்தியாசம் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து, இறைவனை மட்டுமே தொழத்தக்கவனாகச் சுட்டிக்காட்டிய இஸ்லாத்தின் எளிமை அரேபியர்களைக் கவர்ந்தது. அலையலையாக வந்து அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். சவூதி அரேபியா, ஈராக், ஈரான், லிபியா, சிரியா, பாலஸ்தீன் என்று ஒவ்வொரு தேசமாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டது. அதுநாள் வரை "நீங்கள் யார்?" என்று கேட்டால் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்த கோத்திரத்தினர்கள் என்றெல்லாம் பட்டியலிட்டுக்கொண்டிருந்தவர்கள், அதன்பின் "நாங்கள் முஸ்லிம்கள்" என்கிற ஒரு சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள். குர்ஆனை ஓதவேண்டும் என்கிற விருப்பம் காரணமாகவே அரபியில் எழுதப்படிக்கக் கற்கத் தொடங்கினார்கள். கல்வி பயிலத் தொடங்கியதனாலேயே தமது கலாசாரச் செழுமை புரிந்தவர்களானார்கள். கலாசாரபலம் உணர்ந்ததனாலேயே அதனைக் கட்டிக்காக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.
காட்டரபிகள்!
இனி யார் அப்படிச் சொல்லிவிடமுடியும்? இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அரேபியர்கள் தமது நிலப்பரப்பின் புவியியல், அரசியல் சார்ந்த உண்மைகளையும் உணரத் தொடங்கினார்கள். எல்லைகளால் பிரிந்திருந்தாலும் முஸ்லிம்கள் என்கிற அடையாளத்தால் தாங்கள் ஒரே மக்கள்தாம் என்பதையும் உணரத் தொடங்கினார்கள். தங்களுடன் இணைந்து வசிக்கும் யூதர்களும் கிறிஸ்துவர்களும் எந்தெந்த வகையில் தம்மிடமிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதையும் விழிப்புணர்வுடன் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
மெக்கா வெற்றிக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து முகம்மது நபி கி.பி. 632 ல் காலமானார். (சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.) அவரது இறப்புக்குப் பிறகு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபாவாக அதிகாரபூர்வமாகப் பதவியேற்றவர், அபூபக்கர். நபிகளாரின் முக்கியத் தோழர்களுள் ஒருவர் அவர். இரண்டு ஆண்டுகாலம் (கி.பி.632 லிருந்து 634 வரை) ஆட்சியில் இருந்தார்.
உண்மையில் ஒரு சக்ரவர்த்திக்கு நேரெதிரான துறவு மனப்பான்மை கொண்டவர் அவர். பரம சாது. அதைவிடப் பரம எளிமைவாதி. தானென்ற அகங்காரம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதனால், கலீஃபாவான பிறகும் ஒரு வயதான மூதாட்டியின் வீட்டுக்குத் தினசரி சென்று வீட்டுவேலைகளைச் செய்து வைத்துவிட்டு, ஊரிலுள்ள அத்தனை பேரின் ஆடுகளிலும் பால் கறந்து கொடுத்துவிட்டு வந்தவர்.
ஒரு சமயம் முகம்மது நபியிடம், "நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் யாரிடம் செல்வது?" என்று சில எளிய மக்கள் கேட்டார்கள். "அபூபக்கரிடம் செல்லுங்கள்" என்பதுதான் அவரது உடனடி பதிலாக இருந்தது. அந்தளவுக்கு இஸ்லாத்தில் தோய்ந்தவர் அவர். அவரது காலத்தில்தான் முதல்முதலாக குர்ஆன் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது.
அபூபக்கரின் காலத்துக்குப் பிறகு கலீஃபாவானவர் உமர். இவரை ஏற்கெனவே நாம் சந்தித்திருக்கிறோம். முஸ்லிமாகியிருக்கிறார்கள் என்கிற காரணத்துக்காகத் தன் தங்கையையும் மாப்பிள்ளையையும் கொலை செய்யும் வெறியுடன் சென்று, இறுதியில் குர்ஆனின் வரிகளில் தன்வசமிழந்து, இஸ்லாத்தைத் தழுவியவர். இறுதிக் காலம் வரை முகம்மது நபியின் வலக்கரமாக விளங்கியவர்.
இறக்கும் தறுவாயில், அபூபக்கரே தமக்குப்பின் உமர்தான் கலீஃபாவாக வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றதனால், கி.பி. 634 ல் உமர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ராஜாங்க ரீதியில் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான மதப்பிரசாரங்கள், குர்ஆனை உலகறியச் செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முகம்மது நபியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், அவரது பொன்மொழிகளைத் திரட்டும் பணியை மேற்கொள்ளுதல் போன்ற பல காரியங்கள் உமரின் காலத்தில்தான் ஆரம்பமாயின.
ஜெருசலேத்தில் கால்வைத்த முதல் இஸ்லாமியச் சக்ரவர்த்தி உமர்தான். அது கி.பி. 638 ம் ஆண்டு நடந்தது.
ஜெருசலேமில் முதல் முதலில் இஸ்லாமியர் ஆட்சி வந்தது கி.பி. 638 ல். அது கலீஃபா உமரின் காலம். (இரண்டு உமர்கள் இருக்கிறார்கள். இந்த முதலாவது உமர், முகம்மது நபியுடன் நேரடியாகப் பழகியவர். அவரது தலைமைத் தளபதி போல் இருந்தவர். இரண்டாவது உமர், கி.பி. 717 ல் ஆட்சிக்கு வந்தவர். இவரும் கலீஃபாதான். ஆனால் முகம்மது நபியின் நேரடித் தோழர்கள் வரிசையில் வந்தவர் அல்லர். மாறாக, "உமையாக்கள்" என்னும் ஆட்சியாளர்களின் வழிவந்தவர்.)
அதுவரை யூதர்களாலும் ரோமானியர்களாலும் கிறிஸ்துவர்களாலும் எகிப்திய பைசாந்தியர்களாலும் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது ஜெருசலேம். பாலஸ்தீன நிலப்பரப்பின் மூத்தகுடிகளான அரேபியர்களுக்கு, இது தங்கள் மண் என்கிற எண்ணமே கிட்டத்தட்ட மறந்துவிடும் அளவுக்குப் பல நூற்றாண்டுக் காலம் தொடர்ந்தது இது. யூதர்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஆளப்பிறந்தவர்கள், தாங்கள் அடங்கிவாழ விதிக்கப்பட்டவர்கள் என்று மிகவும் இயல்பாகவே அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு மாற்றுச் சிந்தனையாக தாங்களும் ஆளலாம் என்று எண்ணத் தொடங்கியதே உமரின் ஆட்சிக்காலத்தின் போதுதான்.
ஏனெனில், இஸ்லாமிய மன்னர்களுள் முதல் முதலாக, ஒரு திட்டவட்டமான செயல்திட்டம் வகுத்துக்கொண்டு தேசத்தின் எல்லைகளை விஸ்தரிப்பது என்று புறப்பட்டவர் உமர்தான். கைப்பற்றும் தேசங்களையெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவந்த உமர், மிகவும் ஜாக்கிரதையாக இஸ்லாத்தை அந்நாட்டு மக்களின்மீது திணிக்காமல் இருக்க தம் தளபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். பிரசாரங்களைக்கூட அரேபியர்களிடம் மேற்கொள்ளலாமே தவிர யூதர்களிடமோ, கிறிஸ்துவர்களிடமோ வேண்டாம் என்று உமர் ஓர் உத்தரவில் தாமே கைப்பட எழுதித் தந்திருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த சில இஸ்லாமியச் சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனை முகம்மது நபியின் மத நல்லிணக்க அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக எடுத்துக்கொள்வது இஸ்லாமியர் வழக்கம். ஆனால் ஒரு தெளிவான ராஜதந்திரியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்றே பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
உண்மையில், உமருக்கு இஸ்லாத்தைப் "பரப்ப" வேண்டிய அவசியம் அத்தனையன்றும் தீவிரமாக இருப்பதாக அப்போது தோன்றவில்லை. தானாகவே அது பரவிக்கொண்டிருந்தது. ஆகவே, அமைப்பு ரீதியில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை வலுவாக நிறுவுவதே அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அடிமைகளாகவே இருந்து பழகிவிட்ட அரேபியர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதே அவரது முதல் சிந்தனையாக இருந்திருக்கிறது. இந்தச் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும் பட்சத்தில், ஒட்டுமொத்த அரேபிய சமூகமும் இஸ்லாத்தில் இணைவது பெரிய விஷயமாக இருக்காது என்றே அவர் கருதினார். ஏனெனில், "மனப்பூர்வமாக அன்றி, உயிருக்குப் பயந்தோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவோ இஸ்லாத்தை ஏற்பது இறைவனாலேயே அங்கீகரிக்கப்படாது" என்ற பொருளில் வரும் குர்ஆனின் ஒரு வசனத்தின்மீது அவருக்கு அளப்பரிய நம்பிக்கை உண்டு.
இதன் அடிப்படையில்தான், அவர் தாம் கைப்பற்றும் தேசங்களில் உள்ள பிற இனத்தவர் அனைவரிடமும் "உங்கள் உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்படும்" என்று முதலில் சொல்லிவிடுவது வழக்கம். இன்னும் ஒரு படி மேலே சென்று ஒருமுறை, "இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதியாக ஓர் ஆளுநரை நான் உங்களுக்கு நியமிக்கிறேன். அவரது பணி உங்கள் தோலை உரிப்பதோ, உங்கள் சொத்தை அபகரிப்பதோ அல்ல. உங்கள் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றிச் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றிப் பாதுகாப்பது மட்டுமே. இதிலிருந்து எந்த ஆளுநராவது தவறுகிறார் என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். உரிய தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு" என்று பேசியிருக்கிறார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் உமர் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர்கள், பைசாந்தியர்கள். (பைசாந்தியர்கள் என்பது இனத்தின் அடையாளப்பெயர். மத ரீதியில் அவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களே.)
அன்றைய தேதியில் உலகின் மிக வலுவான ராணுவம் கொண்ட தேசங்களுள் ஒன்று எகிப்து. ரோமானிய ராணுவத்துக்கு அடுத்தபடி மிகப்பெரிய ராணுவமாக அது இருந்தது. பேரரசின் ஆண்டுச் செலவுக்கணக்கில் மூன்றிலொரு பங்கை ராணுவத்துக்குச் செலவழித்துக்கொண்டிருந்தார்கள். (மிகப்பெரிய குதிரைப்படையும், கடலளவு நீண்ட காலாட்படையும், அச்சமூட்டக்கூடிய யானைப்படையும் கொண்டது எகிப்து ராணுவம் என்று எழுதுகிறார் இப்னு அஜ்வி என்கிற ஒரு சரித்திர ஆசிரியர். யுத்தங்களுக்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து யானைகளை ஓட்டிவந்து வருடம் முழுவதும் பழக்குவார்களாம்.)
ஆனால், புதியதொரு பேரரசை நிறுவுவது என்கிற மாபெரும் கனவுடனும் தன்னம்பிக்கையுடனும் யுத்தத்தில் பங்குபெற்ற இஸ்லாமிய வீரர்களின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு முன்னால் பைசாந்திய ராணுவத்தால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. பல இடங்களில் தோல்வியை ஒப்புக்கொண்டு முழந்தாளிட்டார்கள். வேறு பல இடங்களில் வாளுக்கு இலக்காகி அவர்களது தலைகள் மண்ணைத் தொட்டன. (யுத்தத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட மிருகங்களின்மீது தாக்குதல் தொடுப்பதில்லை என்பதை உமர் ஒரு கொள்கையாக வைத்திருந்ததாகச் சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதற்குத் தக்க ஆதாரங்களாக மிகப்பழைய அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு மிக நெருக்கமான பிரதிகளிலிருந்து எதையும் பெற இயலவில்லை.)
சரித்திரத்தில், மிகக் கடுமையான யுத்தங்கள் என்று வருணிக்கப்படுவனவற்றுள் ஒன்று இது. எத்தனை தினங்கள் நடைபெற்றன என்பது பற்றிய திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் ஏதும் கிடைக்கவில்லையாயினும், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே பைசாந்தியர்கள் தோல்வியைத் தழுவியதாகத் தெரிகிறது.
எகிப்துப் பேரரசின் மீதான உமரின் இந்தத் தாக்குதலை முதலில் வைத்துத்தான், வாள் முனையில் இஸ்லாத்தைப் பரப்பத் தொடங்கினார்கள் என்று மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் ஆரம்பிக்கிறார்கள். ஆனால், யுத்தத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவத்தை ஒருகணம் சிந்திக்க இயலுமானால் இந்த வாதத்தின் அடிப்படை நொறுங்கிவிடுவதைப் பார்க்கலாம்.
அன்றைய எகிப்துப் பேரரசு என்பது இன்றைய எகிப்து நிலப்பரப்பு அளவே உள்ளதல்ல. வடக்கே பாலஸ்தீனைத் தாண்டி சிரியாவுக்கு அப்பாலும் சிறிது பரவியிருந்தது. வடகிழக்கில் ஜோர்டானின் சில பகுதிகளும் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. இன்னும் எளிமையாகப் புரிய வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒரு வட்டம் போட்டால், அந்த முழு வட்டமும் எகிப்து சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்டதாக இருந்தது.
யுத்தத்தில் வெற்றிகண்ட உமரின் ராணுவம், பெருத்த ஆரவாரத்துடன் ஜெருசலேத்தில் நுழைந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சிப் பெருக்கில் பிரமாண்டமான வரவேற்பு விழா எடுத்தார்கள். (உமர் பாலஸ்தீனுக்குள் நுழைவதற்கு முன்பே இஸ்லாம் அங்கே நுழைந்துவிட்டது என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) கிறிஸ்துவர்களின் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்துவிட்டோம் என்கிற பரவசத்தில், அந்த வெற்றியை இறைவனின் வெற்றியாக முழக்கமிட்டார்கள். பாலஸ்தீனில், யூதர்களின் மேலாதிக்கத்தை கிறிஸ்துவர்கள் அடக்கியிருந்தார்கள். இப்போது கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்துக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது என்கிற சந்தோஷம் அவர்களுக்கு.
இந்த மகிழ்ச்சியை எதிலிருந்து கொண்டாட ஆரம்பிக்கலாம்?
மிகச்சிறந்த வழி, ஜெருசலேம் நகரின் புகழ்பெற்ற, மாபெரும் கிறிஸ்துவ தேவாலயத்தில் உமர், தொழுகை செய்யவேண்டும். அதன்மூலம் பாலஸ்தீனில் இஸ்லாம் காலூன்றிவிட்டதை அழுத்தந்திருத்தமாக நிறுவிவிடலாம்.
ஒட்டுமொத்த பாலஸ்தீனத்து அரேபியர்களும் இத்திட்டத்தை ஆமோதித்து உமரிடம் தங்கள் விருப்பமாக இதனைத் தெரிவித்தார்கள்.
ஆனால் உமர் உடனடியாக இதை மறுத்துவிட்டார். அவர் சொன்ன காரணம் : "நான் தொழுகை நடத்தினால், முதல்முதலில் தொழுகை நடத்தப்பட்ட இடம் என்று சொல்லி நீங்கள் மசூதி கட்டிவிடுவீர்கள். அது கிறிஸ்துவர்களுக்கு வருத்தம் தரலாம்."
இது கதையல்ல. இஸ்லாமிய சரித்திரத்தின் ஓரங்கமான இச்சம்பவம் அனைத்து யூத, கிறிஸ்துவ வரலாற்று நூல்களிலுமேகூடப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. "முகம்மது நபியே ஒரு கட்டத்தில் யூத மதத்துக்கு மாறிவிடத் தயாராக இருந்தார்" என்று எவ்வித ஆதாரமும் இல்லாத வாதத்தை முன்வைத்த யூத சரித்திர ஆராய்ச்சியாளர் மார்ட்டின் கில்பர்ட் போன்றவர்கள் கூட உமரின் இந்த முடிவையும், இதனைத் தொடர்ந்து கலீஃபாக்களின் ஆட்சியில் யூதர்கள் எத்தனை நிம்மதியுடன் வாழ முடிந்தது என்பதையும் பக்கம் பக்கமாக வருணித்திருக்கிறார்கள்.
உமரின் தோற்றம் குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர்கள் அத்தனைபேரும் அவரை அபூபக்கரைக் காட்டிலும் எளிமையானவராகவே சித்திரித்திருக்கிறார்கள். அவர் புதிய ஆடைகள் அணிந்து ஒருபோதும் பார்த்ததில்லை என்று சொல்லுகிறார்கள். எப்போதும் துண்டு துண்டாக துணிகளைத் தொகுத்து, கையால் தைத்து ஒட்டுப்போட்ட அங்கியையே அவர் அணிந்திருப்பார். அணிந்திருக்கும் ஓர் அங்கி, மாற்று உடையாக ஓர் அங்கி. இதைத்தவிர வேறு உடைகள் அவருக்குக் கிடையாது. அபூபக்கரைப் போலவே, தன் அகங்காரம் மிகுந்துவிடாமலிருப்பதற்காக, வீடு வீடாகப் போய் காலைவேளையில் பால் கறந்து கொடுப்பது, வயதான பெண்மணிகளின் வீடுகளுக்குப் போய்ப் பாத்திரங்கள் தேய்த்துக் கொடுப்பது, துணிகளைத் துவைத்துக் காயவைத்து, மீண்டும் மாலை வேளையில் சென்று மடித்துத் தந்துவருவது என்பன போன்ற நம்பமுடியாத காரியங்களை கலீஃபா ஆன பிறகும் உமர் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்.
தங்களது சக்ரவர்த்தி எப்படியெல்லாம் இருப்பார் என்கிற பெரிய எதிர்பார்ப்புடன் ஜெருசலேமில் உமரின் நகர்வலத்தின்போது பார்க்கக் கூடிய அரேபியர்கள் வியப்பில் பேச்சு மூச்சற்றுப் போய்விட்டார்களாம். மாபெரும் வீரர் என்று வருணிக்கப்படும் உமர், அந்த நகர்வலத்தின்போது ஓர் எளிய சந்நியாசியைப் போலவே காட்சியளித்தார் என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.
"நிலமெல்லாம் ரத்தம்" குமுதம் ரிப்போர்ட்டரில்
எழுத்தாளர் பா. ராகவன்
ஜான் கிரிஸ்டோஃபரின் தொகுப்பிலிருந்து..
Monday, June 20, 2005
Tuesday, June 14, 2005
இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 8
சொல்லும் செயலும்!
மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.
யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.
இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.
அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.
இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.
மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.
கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.
நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
சமத்துவ மார்க்கம்
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.
நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ' அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!' என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் 'ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்' என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்' – கடவுளுக்குப் பொதுவாக' என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.
மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் 'மகான்' என்று சொல்லுகின்றோம்.
ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.
நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம். ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.
இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.
திருத்தொண்டு
கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.
யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.
சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.
எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.
சிறந்த மார்க்கம்
இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.
நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.
இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.
கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.
மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.
ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.
இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.
ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.
ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.
இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.
இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன். ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும் அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள். அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல. அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன. இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் .
மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.
இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.
மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.
பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.
எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் 'நாஸ்திகர்கள்' என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.
ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
அறப்பணி
என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக்கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.
ஏகதெய்வக்கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனேதேவன்" எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும், 1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை – நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால், அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்! மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!
எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து, நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.
அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன். வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது. அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.
இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும். பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.
பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
- அறிஞர் அண்ணா -
ஜே.எம். சாலி எம்.ஏ அவர்களின் "அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா"
வெளியீடு: காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர்
மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.
யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.
இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன? கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.
அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.
இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது? ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை, ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.
மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.
கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.
நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
சமத்துவ மார்க்கம்
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், 'உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்' என்று எழுதியிருக்கிறார்.
நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால், 1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால், 1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும், அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை 'மகான்' என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, 'மதம்' எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள், தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும். அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள். ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால், புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான். அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ' அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!' என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் 'ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்' என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்' – கடவுளுக்குப் பொதுவாக' என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.
மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் 'மகான்' என்று சொல்லுகின்றோம்.
ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.
நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம். காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம். ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும். இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.
இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை. இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.
திருத்தொண்டு
கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.
யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.
சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்? நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.
எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள். வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.
சிறந்த மார்க்கம்
இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.
நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.
இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது" என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை. எனவேதான், பழந்தமிழர் மக்கள் "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". "பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை" என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும். அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.
கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.
மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.
ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.
இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.
ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.
ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.
இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.
இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன். ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும் அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள். அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல. அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது. ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன. இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும் .
மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.
இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.
மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.
பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.
எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை. ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் 'நாஸ்திகர்கள்' என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.
ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
அறப்பணி
என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன். நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர், கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக்கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.
ஏகதெய்வக்கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனேதேவன்" எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும், 1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை – நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால், அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்! மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!
எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து, நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.
அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன். வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது. அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.
இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும். இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும். பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.
பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
- அறிஞர் அண்ணா -
ஜே.எம். சாலி எம்.ஏ அவர்களின் "அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா"
வெளியீடு: காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர்
Wednesday, June 08, 2005
இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 7
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் அரேபிய நாட்டில் மிக காட்டுமிராண்டித்தனம் கோலோச்சிய அந்த நேரத்தில் ஒரு மனிதர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்ட மக்களுக்கு மத்தியில் நின்று புரட்சிகரமான சில கொள்கைகளைச் சொல்லி, அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு யாராவது கிடைப்பார்களா? என்ற சந்தேகத்திற்கிடையே, அதைச் சொல்லத் தொடங்கி, முதலில் அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டவர் அவருடைய துணைவியர், கதீஜா அம்மையார் என்ற அளவில் முதலில் அளவிற்குதான் அவருடைய வழியை பின்பற்றுகிறவர்கள் என்று தொடங்கி, இன்றைய தினம் அகிலம் முழுவதும் முழுவதும் ஈடு இணையற்று பெரும் இயக்கமாக இஸ்லாமிய மார்க்கம் பரவியிருக்கிறது என்றால் 'ஐயோ' இதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லையே, நம்முடைய துணைவியார் மட்டும் தானே ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறார்' என்ற சோர்வு அவருக்கு வந்திருக்குமேயானால் அந்தக் கொள்கைகள் இறுதியாக ஆக்கப்பட்டிருக்கும், இந்த அளவிற்கு வளர்ந்திருக்க இயலாது.
நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார். உலக மக்களைத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில் உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார் வாளோடு வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார். சில நேரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும் சிலகாரியங்களை அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.
அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட பயணிகள் தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்களாம். அதற்குக் காரணம் வழியில் சமையல் செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல் செய்வார்களாம். நான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக் கல்லை வணங்குவதற்காகவாம். இந்த அளவிற்கு கல்லில் கடவுளை வணங்க, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில் அன்றைக்கே தங்களை ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள் உருவாக்கிய ஒரு மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன். அந்த இறைவன் இட்டவழி அறவழி, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க போதனையைச் செய்த மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.
நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்று நாட்டிலே பார்க்கிறோம். பலபேரை. தங்களைத் திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள் என்பதும், இன்றைக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை எந்த அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையிலே இருக்கிறது. உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமர்.
-கலைஞர் கருணாநிதி-
நன்றி:
ஜே.எம். சாலி எம்.ஏ அவர்களின் "அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா"
பக்கம் : 42, 43
வெளியீடு: காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர்
நபிகள் நாயகம் அவர்கள் உலகத்தைத் திருத்த முன் வந்தார். உலக மக்களைத் திருத்த முன் வந்தார். காட்டுமிராண்டித்தனத்தில் உழன்றவர்களைத் திருத்த முன்வந்தார். எதிர்ப்புக்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார் வாளோடு வாள் மோதுகின்ற போராட்டங்களுக்கிடையே சில காரியங்களைச் செய்தார். சில நேரங்களில் எதிரிகளால் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஒடக்கூடிய சூழ்நிலையிலும் சிலகாரியங்களை அவர் துணிவோடு செய்ய முன்வந்தார்.
அந்தக் காலத்தில் அராபிய நாட்டுநிலையை எப்படி இருந்தது என்றால். பயணம் செல்கின்ற நேரத்தில் கூட பயணிகள் தங்களுடைய பயணத்தின் போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்களாம். அதற்குக் காரணம் வழியில் சமையல் செய்ய மூன்று கற்களை வெத்து அதன் மீது பாத்திரங்களை வைத்து சமையல் செய்வார்களாம். நான்காவது கல் எதற்காக என்றால், ஆண்டவன் என்று அந்தக் கல்லை வணங்குவதற்காகவாம். இந்த அளவிற்கு கல்லில் கடவுளை வணங்க, இறைவனைக் காண, சிலையில் இறைவன் இருக்கிறான் என்ற உருவ வழிபாட்டில் அன்றைக்கே தங்களை ஆட்படுத்திக்கொண்டிருந்த உன்மத்தம் பிடித்த ஒரு நிலையை, தாங்கள் உருவாக்கிய ஒரு மாபெரும் புரட்சியால் தகர்த்துக் காட்டி ஒன்றே இறைவன். அந்த இறைவன் இட்டவழி அறவழி, அன்புவழி, அந்த வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற மார்க்க போதனையைச் செய்த மக்கள் சமுதாயத்தில் பெரும்பகுதியை தன்பால் ஈர்த்த மகத்தான சக்தி வாய்ந்த மனிதர்தான் நபிகள் நாயம் அவர்கள்.
நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்று நாட்டிலே பார்க்கிறோம். பலபேரை. தங்களைத் திருத்திக்கொள்ள வக்கற்றவர்கள்-வகையற்றவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்லுவதும்-மற்றவர்களைத் திருத்திக்கொள்-திருத்திக்கொள் என்பதும், இன்றைக்கு வழக்கமாக ஆகி விட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை எந்த அளவுக்குச்செம்மையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒப்பற்ற மாமனிதர், இறைவனுடைய நிலை உருவத்திலேயில்லை. அது அவரவர்களுடைய அபிமானத்திலே இருக்கிறது. உள்ளத்தின் கருணையிலே இருக்கிறது. உள்ளம் பொழிகின்ற அன்பிலே இருக்கிறது என்கிற உயரிய கருத்தை உலகுக்கு வழங்கிய உத்தமர்.
-கலைஞர் கருணாநிதி-
நன்றி:
ஜே.எம். சாலி எம்.ஏ அவர்களின் "அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா"
பக்கம் : 42, 43
வெளியீடு: காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர்
Sunday, May 29, 2005
இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 6
முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க, அவரவர் ஒவ்வொரு திட்டத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்துகிறார்கள். இதில் அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ், இஸ்ரேலின் ஏரியல் சாரோன், காவி இயக்கங்கள் மற்றும் அவர்களின் சேவகர்களால் செய்யப்படும் ஊடக வழி பிரச்சாரங்கள் போன்றவை உதாரணங்களாக இருந்தாலும் இதற்கு முன்மாதிரி ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறாகும்.
இந்திய முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் "வகுப்புவெறி கூடிய வன்முறைக் கூட்டங்களால்" பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எவ்வாறெல்லாம் செயல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன? என்பதை விளக்கியிருக்கும் இந்தச் சிற்றேட்டை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இக்கட்டுரையை மேற்கண்ட தொடரில் இணைத்ததன் காரணம், இன்று இஸ்லாத்தை விமர்ச்சிப்பவர்கள் முஸ்லிம்கள் அனைவரின் மேலும் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் அவதூறு பிரச்சாரங்களின் நோக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சகோதரர்களை மற்றவர்களிலிருந்து அந்நியப்படுத்த செய்யும் முயற்சிகளே ஆகும்.
ஒரு சாமியார் தவறு செய்தார் என்றால் எல்லா சாமியார்களும் அப்படியல்ல என்று இந்துக்களுக்கு அறிவுரை சொல்லுபவர்களுக்கு, தனக்கு ஒரு அளவுகோலும் மற்றவர்களுக்கு வேறு அளவுகோலும் தேவைப்படுகிறது.
வி.டி இராஜ சேகர் எழுதி, 1997 ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக பிரசுரமாகியிருந்த 'தலித் வாய்ஸ்'. குஜராத் கலவரங்கள் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே அரங்கேறிவரும் வன்முறைகளுக்குக் காரணங்கள் என்ன என்பது இச் சிற்றேட்டின் மூலம் புலப்படுகின்றது.
முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்
கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.
இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.
இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.
780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.
இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.
துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.
இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?
இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.
இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.
முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.
ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு
இந்தியாவில் இன்று இருப்பதைப் போல் அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:
1. அரபுகளின் கிளைஞர்கள்
2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.
3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.
முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.
ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.
ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள். இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.
கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.
திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.
ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.
ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.
அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:
1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,
2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.
4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.
5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.
6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.
8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.
9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.
பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.
விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.
உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.
மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.
அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.
இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.
இந்திய முஸ்லிம்களின் நிலை
ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் - நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது.
இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.
முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.
ஆங்கிலம் கற்ற முஸ்லிம்கள் பிராமணர்களோடு கை கோர்த்துக் கொண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்பதைவிட இந்துக்கள் வாழும் பகுதிகளில் குடியமர்வதையே விரும்புகின்றார்கள். பாமர முஸ்லிம்கள் சேரிகளிலும் சாலையோரங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தை இதய சுத்தியோடு பின்பற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள்.
இவர்கள் தாம் ஒவ்வொரு வகுப்புக் கலவரங்களின் போதும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுகின்றார்கள். இவர்கள் மொத்த முஸ்லிம்களில் 95 சதவிகித்தினர். மேட்டுக்குடியில் குடியிருக்கும் மெத்தப் படித்த மேதாவி முஸ்லிம்கள் 'இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் கலவரங்களுக்குக் காரணம்' என்ற அடிக்கடி ஆள்காட்டி இந்து வெறியர்களின் திருப்தியைப் பெறத்துடிக்கின்றனர். படித்த முஸ்லிம்களுக்கும் பாமர முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இணைக்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
பாமர முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள். மேட்டுக்குடியில் வாழும் படித்த முஸ்லிம்கள் 'இதை பாமர முஸ்லிம்கள் தங்கள் கைகளாலேயே தேடிக்கொண்டது' என்று பசப்புகின்றார்கள். எதுவும் செய்ய இயலாத முஸ்லிம் தலைமை, முறையிட இடம் தெரியாமல் திண்டாடுகின்றது.
இந்தியாவில் பொட்டுப் பூச்சிகளைப் போல முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் 'இது அநியாயம், அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்' என்று உலக முஸ்லிம்கள் பேசினால் 'ஐயோ! இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், தலை இட்டுவிட்டார்கள்' என்று உரக்க முழங்கி அவர்களின் அபயக் குரலை அடக்கிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கே உள்நாட்டு விவகாரம் முஸ்லிம்களைக் கூட்டமாகக் கொலை செய்வதும், அந்தக் கொலைவெறிக் கும்பலுக்கு ஆதரவு தருவதும் தான்.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. "குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்" எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.
ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.
ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் - ' தியாகிகள்' எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய 'தான்தியா தோப்பே', தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய 'ஜான்சி ராணி லட்சுமி பாய்' இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் 'தேசியத் தலைவர்கள்' எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.
விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த 'மௌலானா ஆஸாத்' 'ரபீ அஹ்மத் கித்வாய்', 'செய்யத் மஹ்மூத்', 'ஹுமாயூன் கபீர்' போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.
ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!
வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.
இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
- முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது,
- முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,
- காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்.
- மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.
- அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.
- முஸ்லிம் தனியார் சட்டத்தை 'பொது சிவில் சட்டம்' என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.
- வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.
- முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.
- முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் 'கடத்தல்' என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்' என விஷ வித்தை விதைத்தது.
- முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை அவர்கள் பால் திணித்தது.
- முஸ்லிம்கள் இந்து தலைமைக்குத் தலையசைத்துப் போகும்படி செய்தது.
இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.
இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.
இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.
இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.
இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.
இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!
- வி.டி. இராஜசேகர் -
இந்திய முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் "வகுப்புவெறி கூடிய வன்முறைக் கூட்டங்களால்" பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எவ்வாறெல்லாம் செயல் திட்டங்கள் தீட்டப்படுகின்றன? என்பதை விளக்கியிருக்கும் இந்தச் சிற்றேட்டை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். இக்கட்டுரையை மேற்கண்ட தொடரில் இணைத்ததன் காரணம், இன்று இஸ்லாத்தை விமர்ச்சிப்பவர்கள் முஸ்லிம்கள் அனைவரின் மேலும் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் அவதூறு பிரச்சாரங்களின் நோக்கம் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சகோதரர்களை மற்றவர்களிலிருந்து அந்நியப்படுத்த செய்யும் முயற்சிகளே ஆகும்.
ஒரு சாமியார் தவறு செய்தார் என்றால் எல்லா சாமியார்களும் அப்படியல்ல என்று இந்துக்களுக்கு அறிவுரை சொல்லுபவர்களுக்கு, தனக்கு ஒரு அளவுகோலும் மற்றவர்களுக்கு வேறு அளவுகோலும் தேவைப்படுகிறது.
வி.டி இராஜ சேகர் எழுதி, 1997 ஆம் ஆண்டு ஐந்தாம் பதிப்பாக பிரசுரமாகியிருந்த 'தலித் வாய்ஸ்'. குஜராத் கலவரங்கள் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே அரங்கேறிவரும் வன்முறைகளுக்குக் காரணங்கள் என்ன என்பது இச் சிற்றேட்டின் மூலம் புலப்படுகின்றது.
முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்
கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.
இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.
இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.
780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.
இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.
துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.
இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?
இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..
இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.
இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.
முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.
ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு
இந்தியாவில் இன்று இருப்பதைப் போல் அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:
1. அரபுகளின் கிளைஞர்கள்
2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.
3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.
முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.
ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.
ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள். இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.
கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.
திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.
ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.
ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.
அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:
1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,
2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.
4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.
5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.
6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.
8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.
9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.
பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.
ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.
விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.
உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.
மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.
அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.
இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.
இந்திய முஸ்லிம்களின் நிலை
ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் - நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது.
இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.
முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.
ஆங்கிலம் கற்ற முஸ்லிம்கள் பிராமணர்களோடு கை கோர்த்துக் கொண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்பதைவிட இந்துக்கள் வாழும் பகுதிகளில் குடியமர்வதையே விரும்புகின்றார்கள். பாமர முஸ்லிம்கள் சேரிகளிலும் சாலையோரங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தை இதய சுத்தியோடு பின்பற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள்.
இவர்கள் தாம் ஒவ்வொரு வகுப்புக் கலவரங்களின் போதும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுகின்றார்கள். இவர்கள் மொத்த முஸ்லிம்களில் 95 சதவிகித்தினர். மேட்டுக்குடியில் குடியிருக்கும் மெத்தப் படித்த மேதாவி முஸ்லிம்கள் 'இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் கலவரங்களுக்குக் காரணம்' என்ற அடிக்கடி ஆள்காட்டி இந்து வெறியர்களின் திருப்தியைப் பெறத்துடிக்கின்றனர். படித்த முஸ்லிம்களுக்கும் பாமர முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இணைக்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
பாமர முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள். மேட்டுக்குடியில் வாழும் படித்த முஸ்லிம்கள் 'இதை பாமர முஸ்லிம்கள் தங்கள் கைகளாலேயே தேடிக்கொண்டது' என்று பசப்புகின்றார்கள். எதுவும் செய்ய இயலாத முஸ்லிம் தலைமை, முறையிட இடம் தெரியாமல் திண்டாடுகின்றது.
இந்தியாவில் பொட்டுப் பூச்சிகளைப் போல முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் 'இது அநியாயம், அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்' என்று உலக முஸ்லிம்கள் பேசினால் 'ஐயோ! இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், தலை இட்டுவிட்டார்கள்' என்று உரக்க முழங்கி அவர்களின் அபயக் குரலை அடக்கிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கே உள்நாட்டு விவகாரம் முஸ்லிம்களைக் கூட்டமாகக் கொலை செய்வதும், அந்தக் கொலைவெறிக் கும்பலுக்கு ஆதரவு தருவதும் தான்.
இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. "குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்" எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.
ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.
ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் - ' தியாகிகள்' எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய 'தான்தியா தோப்பே', தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய 'ஜான்சி ராணி லட்சுமி பாய்' இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் 'தேசியத் தலைவர்கள்' எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.
விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த 'மௌலானா ஆஸாத்' 'ரபீ அஹ்மத் கித்வாய்', 'செய்யத் மஹ்மூத்', 'ஹுமாயூன் கபீர்' போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.
ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!
வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.
இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
- முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது,
- முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,
- காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்.
- மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.
- அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.
- முஸ்லிம் தனியார் சட்டத்தை 'பொது சிவில் சட்டம்' என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.
- வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.
- முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.
- முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் 'கடத்தல்' என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்' என விஷ வித்தை விதைத்தது.
- முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை அவர்கள் பால் திணித்தது.
- முஸ்லிம்கள் இந்து தலைமைக்குத் தலையசைத்துப் போகும்படி செய்தது.
இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.
இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.
இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.
இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.
இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.
இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!
- வி.டி. இராஜசேகர் -
Sunday, May 15, 2005
தலாக் புகழ் நந்தலாலாவிற்கு
நந்தலாலாவின் தலாக்.. தலாக்.. தலாக் பதிவிற்காக
அன்பின் நந்தலாலா,
வித்தியாசமாக எழுதும் பழக்கம் உள்ளவரான நீங்கள், தவறான விபரங்களை உங்களின் கட்டுரையில் இடம்பெறச் செய்துள்ளீர்கள்.
விவாகரத்து சட்டத்தை அரசாங்க சட்டத்திலிருந்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஆனால் தலாக்கிற்கு தலாக் விடவேண்டும் என்று சொல்வதற்கு காரணம், அதனை புரிந்துக்கொண்ட விதமும் முஸ்லிம்கள் அதனை தவறாக பயன்படுத்திய விதமும்தான். தலாக் என்பது உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் விவாகரத்து என்று சொல்லலாம். தவறொன்றும் இல்லை.
முஸ்லிம் பெண்களின் உரிமைகள்:
முஸ்லிம் பெண் ஆர்வல் சல்மாகூட தனது பேட்டியில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை முஸ்லிம்கள் நடைமுறைப் படுத்தவில்லை என்கிறார். தவிர இஸ்லாத்தில் இவ்வுரிமை இல்லை என்று சொல்லவில்லை.
இஸ்லாம் சொன்ன முறைப்படி பெண்களே ஆண்களை விவாகரத்து செய்யும் முறையும், ஒரு மனைவியை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் செய்ய விரும்பும் திருமணத்தை நடத்திவைக்கவும் கீழ்கண்ட அமைப்புகளின் ஒத்தாசையை நாடலாம். toabuumar@gmail.com என்ற முகவரிக்கு அவ்வமைப்புகளின் விபரங்கள் கேட்டு எழுதினால் தருவதற்கு தயார். இதுபற்றி சல்மா போன்றவர்கள்கூட தெரிந்துக்கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) என்ற அமைப்பும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) என்ற அமைப்பும் ஆயிரக்கணக்கான பகுத்தறிவு திருமணங்கள் (புரோகித தனம் தவிர்த்து) வரதட்சணை இல்லாமல் நடத்திக்காட்டியிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புக்கும் தமிழ்நாட்டில் பல கிளைகள் உண்டு. இந்த அமைப்பின் உதவிகள் இல்லாமல்கூட உள்ளூர் ஜமாஅத்துகளின் மூடத்தனமாக புரோகிதத் தனங்களையும், வரதட்சணை பழக்கத்தையும் எதிர்த்து என்னைப்போல எத்தனையோ இளைஞர்கள் ஒரு சவாலாக எடுத்து திருமணங்கள் செய்துள்ளார்கள்.
இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையை மீட்டித்தர பாடுபடும் சல்மா போன்ற ஆர்வலர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இஸ்லாம் தரும் பெண் உரிமையை தெரிந்துக்கொள்ளுங்கள், அதனை அவர்கள் பெற்றுக்கொள்ள போராடுங்கள். கூடவே சில முஸ்லிம் பெண்களின் தர்கா போன்ற மூட நம்பிக்கைகளை அடித்து விரட்டுங்கள். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவு பெற வகை செய்யுங்கள் என்பவைதான் அது.
டிஜிட்டல் விவாகரத்து:
sms, email மூலம் விவாகரத்து கோரல் சம்பந்தமாக நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்முஸ்லிம் கூட்டுப்பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.
ஜீவனாம்சம்:
இஸ்லாம் ஒப்பந்தத்திற்கு பிறகு கணவனிடம் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை. முன்பணமாக ஜீவனாம்சத்தை அல்லது மஹர் என்னும் மணக்கொடையை வாங்கிக்கொள்ளச் சொல்கிறது. இந்திய முஸ்லிம்களில் இவ்விஷயத்தில் தவறான பல விஷயங்கள் நடைமுறையில் உள்ளன.
அதாவது பெயருக்காக நூற்று ஒன்று, ஆயிரத்து ஒன்று என்று மஹர் தொகையை எழுதிக்கொள்வதும் அந்த பிச்சைக்காசைக் கூட அப்பெண்ணிடம் கொடுக்காமல் இருப்பதும்தான்.
திருமணம் என்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு ஒப்பந்தம் மட்டுமே. ஒப்பந்தம் செய்பவர்கள் தனக்கு உரிமையானதை மற்றும் தனக்கு பாதகம் இல்லாததை ஒப்பந்தத்தில் எழுதி பெற்றுக்கொள்வார் தவிர ஒப்பந்தத்தில் எழுதாமல் பிறகு கேட்டால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததே. அதுபோலத்தான் பெண்கள், தன்னை திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் தனது எதிர்கால கணவனிடத்தில் தனக்கு தேவையானதை அட்வான்ஸ் ஜீவனாம்சமாக மஹர் என்னும் மணக்கொடையின் பெயரால் முதலிலேயே பெற்றுக்கொள்ளச் செய்கிறது இஸ்லாம். இந்த தொகையை இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்ற அதிகபட்ச வரையறைகூட இஸ்லாமிய ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாது. இன்று சவுதிபோன்ற நாடுகளில் இந்த அட்வான்ஸ் ஜீவனாம்சத்தை (மஹர்) கொடுக்க முடியாத ஆண் குமர்கள் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதை பார்க்க முடியும். இதனை பெண் கேட்டும் வரதட்சணை என்று கொச்சைப்படுத்துவது நம்மவர்களுக்கு வழக்கம்.
இது ஜீவனாம்சம்தான் என்று சொல்வதற்கு காரணம், மனைவி கணவனை விவாகரத்து கோரினால் அப்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆண் விவாகரத்து கோரினால் அவள் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்நாட்டில் ஆண்கள் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட தொகையை ஏப்பம் விடுவது போல் அல்ல.
இந்த முஸ்லிம்பெண்களின் உரிமைகளை கலங்கப்படுத்தும் எத்தனையோ ஊர் ஜமாஅத்தார்கள் உண்டு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இதற்காக நாங்கள் போராடுகிறோம். அதற்காக எங்களைப் போன்றோர்களை ஊர்விட்டு விலக்கி வைத்துள்ளார்கள். இது குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களிடம் உள்ள குறைபாடுகள் என்று சொல்லாமல் இஸ்லாத்தில் இந்த உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் தவறான பிரச்சாரமாகும்.
பலதார மணம்:
பலதார மணம் என்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதியே தவிர அது மார்க்கத்தின் கடமையோ வணக்கமோ கிடையாது. சின்ன வீடு வைத்துக்கொண்டு கும்மாளம் இடுபவர்களுக்கு அவளும் ஒரு மனைவிதான் என்றும் அவளுக்கு பிறந்தவர்களும் சமசொத்துரிமை பெற்றுள்ளார்கள் என்று ஆணின் தலையில் சுமத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் மனைவிகளிடையே பாரபட்சம் காட்டவேண்டிவரும் என்று பயந்தால் அவனுக்கு பலதாரமணம் செய்துகொள்வதை ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்குகிறது இஸ்லாம். எனக்கு தெரிந்தவர்களில் யாரும் (தமிழ்மணத்தில் எழுதும் நண்பர்கள் உட்பட) பலதார மணம் புரிந்துக்கொள்ளவில்லை. எனக்கும் ஒரு மனைவிதான் ஐயா. பலதாரமணம் பற்றி பிறகு எழுதும் எண்ணம் உண்டு. (கடவுள் நாடினால்).
கற்பத்தடை
பெண் குழந்தையை கருவிலியே சமாதிகட்டுவதும், கள்ளிப்பால் இட்டு நிரந்தரத்தூக்கத்தை இட்டுச்சொல்வதும் இந்த கால வழக்கம் என்றால் பெண் குழந்தையை உயிரோடு புதைக்கும் காலம் முஹம்மது நபி எந்த அரபு சமுதாயத்தில் பிறந்தார்களோ அத்தகையவர்களின் பழக்கமாக இருந்தது. இதனை முற்றாக ஒழித்தவர்தான் முஹம்மதுநபி. மேலும் குழந்தைகளை வறுமைக்கு பயந்து கொள்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதுபோன்ற ஒரு வசனத்தைத்தான் திருக்குர்ஆனிலிருந்து (6:151) நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். தவிர இவ்வசனம் குழந்தைகளை கணக்கின்றி பெற்றுப்போடச் சொல்லவில்லை.
திருக்குர்ஆனில் 6:137, 6:140, 6:151 ஆகிய வசனங்களில் குழந்தைகளை கடவுளின் பெயரால் கொல்லாதீர்கள் என்றும் வறுமைக்கு பயந்து கொல்லாதீர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் என்ன பழைமைவாதம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
அதே நேரத்தில், இஸ்லாம் குழந்தை வளர்ப்பில் மிக்க கண்ணும் கருத்துமாக இருக்கச் சொல்கிறது. கவனிக்க முடியாத குழந்தைகளை பெற்றுப்போடச் சொல்லவில்லை. குழந்தைக்கு அறிவை ஊட்டுவது தந்தைக்கு கடமையாக்கியிருக்கிறது இஸ்லாம்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல், பெற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக ஒரு பெண் தன்னை தற்காலிக மலடாக ஆக்கி கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் தற்காலிக கருத்தடை ஏற்பாடுகளை செய்வதை தடுக்கவில்லை. நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிட்டால் என்று கவலைப்படுகிறீர்கள். நான் இறந்த பிறகு என் மனைவி மறுமணம் செய்துக்கொள்ள தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்று இஸ்லாம் கவலைப்படுகிறது. இது இருபாலருக்கும் பொருந்தும்.
கல்வியும் விழிப்புணர்வும் இருந்தால் அழகிய சமுதாயத்தை உருவாக்கலாம். நாங்கள் முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இத்தனை மாற்று ஏற்பாடுகளும் இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி ஏற்பாடுகளாகும். "அம்மா" என்று அழைப்பது பழைமையானது என்பதால் "மாமி"(ஆன்ட்டி) என்று மாற்றிக்கொள்வோமா?. பழைமையான விஷயம் என்பதால் ஒரு விஷயத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதில் பாதிப்பு இருந்தால்தான் எதிர்ப்போம். முத்தலாக் என்பது முஹம்மது நபி தடைசெய்த ஒன்று. மொத்தத்தில் இஸ்லாம் வெறுக்கும் ஒன்றை இஸ்லாத்தில் இருப்பதாக சொல்ல இத்தனை ஆர்பாட்டமா?
கடவுள் அனுமதித்த விஷயத்தில் வெறுக்கக்கூடிய ஒன்றுதான் இந்த விவாகரத்து(தலாக்) என்றும் ஆண்களுக்கு பெண்களை விவாகரத்து செய்ய திருப்பி அழைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பின் ஊடே இரண்டு விவாகரத்தும் மூன்றாவதில் நிரந்தரமாகவும் ஆக்குகிறது இஸ்லாம். ஆனால் பெண்களுக்கு ஒரே வாய்ப்பில் ஆண்களை விவாகரத்து செய்யும் உரிமை கொடுத்திருக்கிறது. முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தை அறியாமல் டிஜிட்டல் மற்றும் அதிரடி விவாகரத்து (முத்தலாக்) செய்கிறார்கள். இதில் எதை பழைமைவாதம் என்கிறீர்கள்?
திருமணம் செய்யப்போகும் கணவனிடம் ஜீவனாம்சத்தை அல்லது மணக்கொடையை (மஹர்) முதலிலேயே பெற்றுக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட பின்புதான் கணவனிடம் யாசித்து நிற்கவேண்டும் என்று சொல்வது. இதில் எது பழைமைவாதம்?
வேசிகளிடம் செல்லாதே, நல்ல பெண்களை வேசிகளாக்காதே என்று சொல்லி பாரபட்சம் இல்லாமல் சரிசமமாக நடத்த முடியும் என்றால் மட்டுமே மற்றவளை திருமணம் செய்துக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், தெருவுக்கு தெரு சின்ன வீடு வைத்துக்கொள்ளலாம், அவளுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டாம். நீ எறிந்த பிச்சைக்காசு போதும் என்னும் முறை பழைமைவாதமா?
தற்காலிக கருத்தடைகளுக்கு அனுமதியளித்த பின்னர், பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை போதிப்பதில் மிகக் கண்டிப்பாகவும் குழந்தைகளை கொலை செய்யாதே என்றும் சொல்கிறது இஸ்லாம். அதுவல்லாமல் குழந்தைகளை கொலைசெய்வது, கருவிலேயே சமாதி கட்டுவது, இறைவன் தந்த அருட்கொடைகளை நீக்கிக்கொள்வது இவற்றில் எது பழைமைவாதம்?
ஐயா, முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் இல்லை. நீங்கள் முஸ்லிம்கள் செய்வதை எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம். முத்தலாக் என்ற பெயரில் தன்னை நாடிவந்த பெண்ணை சட்டென்று நிற்கதியாக்கும் முஸ்லிம்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாத்தை கொச்சைப்படுத்த இதனை வாய்ப்பாக்கி கொள்ளாதீர்கள் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாத்தைப்பற்றி விமர்சனம் செய்ய விரும்புகிறீர்களா? தாராளமாக. இஸ்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. இதுவரை மிக மோசமாக இஸ்லாத்தின்பால் சேற்றை இறைத்தவர்களை எல்லாம்கூட விமர்சனம் செய்ய வரவேற்றே இருக்கிறோம். உதாரணத்திற்கு ஒரு சில சுட்டிகள் மட்டும்:
இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (அக்பர் பாட்சா)
வாருங்கள் விவாதிக்கலாம் (அப்துல்லாஹ்)
விவாதங்கள் விவாதங்களாகவே.. (நல்லார்க்கினியன்)
மற்றும் சுடர்
ஆனால் அதற்கு முன்பு எது இஸ்லாத்தின் ஆதாரம் என்பதையும் படித்துக்கொள்ளுங்கள்.
இஸ்லாம் மார்க்கம் தனது கொள்கையை அறிவுப்பூர்வமாக சிந்தித்து மட்டுமே ஏற்றுக்கொள்ளச் சொன்ன மார்க்கம். அதனால்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் சிந்திக்க மாட்டீர்களா என்று இறைவன் கேட்கிறான். இக்காலத்தில் மூட பழக்க வழக்கங்களை கண்டிப்பவர்களை அறிவு ஜீவிகள் என்கிறோம். அந்த அறிவு ஜீவிகளே செய்யக்கூடிய மூட பழக்கங்களையும் வன்மையாக கண்டித்ததுதான் இஸ்லாம். அதனால்தான் முஹம்மது நபிக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. இஸ்லாம் சொல்லும் பகுத்தறிவு கொள்கைகளை எனது அடுத்த (மாமனிதர்) தொடரில் எழுதலாம் என்று உள்ளேன். (கடவுள் நாடினால்).
திராவிட கழகத்தின் ஒரு சில கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நம்மிடம் காசு கேட்கும், பலி கேட்கும், மூடபழக்கங்களின் திறவுகோலான இந்த கடவுள்களை வணங்க வேண்டுமா என்ற இந்த கருத்து என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கிறது. தர்கா வாசல்களில் தவம் கிடப்பவர்களையும், வரதட்சணை வாங்கும் எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களையும் ஹஜ்ரத்துகளின் புரோகித தனத்தையும் எனக்கு கருத்து தெரிய வந்த நாட்களில் பார்த்தபோது இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்றுதானோ என்று நினைத்ததுண்டு. ஆனால் இஸ்லாம் பற்றி படித்தபோதுதான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தற்போது உள்ள வேறுபாடு புரிந்தது.
"கடவுள் இல்லை, (லாயிலாஹ) அல்லாஹ்வை தவிர (இல்லல்லாஹு)" என்கிறது இஸ்லாம். அதாவது கடவுளுக்கு நாம் கொடுக்கும் இலக்கணமான ஆசை, தூக்கம், குழந்தை உண்டு, பெற்றோர் உண்டு, கடவுளுக்குள் சண்டை இதுபோன்றவைகளை எப்படி கடவுள் என்று சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டு, இத்தகைய குறைபாடுகள் எவையும் அற்ற ஒருவன்தான் கடவுள் என்கிறது இஸ்லாம்.
இஸ்லாத்தை பலர் போற்றுவதற்கு காரணம் அது சொல்லும் பகுத்தறிவு கருத்துகள். இஸ்லாம் என்பது இறைவன் திருக்குர்ஆன் மூலமும், கடவுளின் தூதராக வந்த முஹம்மது நபி அவர்களின் மூலம் சொன்ன போதனைகள்தான் தவிர மற்ற எதுவும் இல்லை.
இஸ்லாம் பற்றி பலர் குறை சொல்லக் காரணம் முஸ்லிம்களின் தவறுகள் மட்டுமே. எல்லாருக்கும் இஸ்லாத்தைப்பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மற்றவர்கள் முஸ்லிம்களின் செயல்பாடுகள்தான் இஸ்லாம் என நோக்குகிறார்கள். ஆனால் முஸ்லிம்களில் பலர் தனது மனோ இச்சையை செயல்படுத்தி இஸ்லாத்திற்கு அவப்பெயர் உண்டாக்குகிறார்கள்.
என்னுடைய பதிவு உங்களின் கட்டுரைக்கு பதில் அல்ல. சிறு குறிப்புகள் மட்டுமே.
இதன் விரிவாக்கத்தை நண்பர் அபூமுஹையின் தொடரில் பார்ப்போம். முதலாம் தொடரின் சுட்டி:
தலாக் ஓர் விளக்கம்-1
_________________________________________
நந்தலாலா,
பெற்ற பெண்ணை ::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்யும்:: மற்றவர் கலாச்சாரத்துடன்::தலாக் என்று சேர்த்திருப்பது யாரை திருப்தி படுத்துவதற்காக?
அன்பின் நந்தலாலா,
வித்தியாசமாக எழுதும் பழக்கம் உள்ளவரான நீங்கள், தவறான விபரங்களை உங்களின் கட்டுரையில் இடம்பெறச் செய்துள்ளீர்கள்.
விவாகரத்து சட்டத்தை அரசாங்க சட்டத்திலிருந்து எடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். ஆனால் தலாக்கிற்கு தலாக் விடவேண்டும் என்று சொல்வதற்கு காரணம், அதனை புரிந்துக்கொண்ட விதமும் முஸ்லிம்கள் அதனை தவறாக பயன்படுத்திய விதமும்தான். தலாக் என்பது உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் விவாகரத்து என்று சொல்லலாம். தவறொன்றும் இல்லை.
முஸ்லிம் பெண்களின் உரிமைகள்:
முஸ்லிம் பெண் ஆர்வல் சல்மாகூட தனது பேட்டியில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை முஸ்லிம்கள் நடைமுறைப் படுத்தவில்லை என்கிறார். தவிர இஸ்லாத்தில் இவ்வுரிமை இல்லை என்று சொல்லவில்லை.
இஸ்லாம் சொன்ன முறைப்படி பெண்களே ஆண்களை விவாகரத்து செய்யும் முறையும், ஒரு மனைவியை மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் செய்ய விரும்பும் திருமணத்தை நடத்திவைக்கவும் கீழ்கண்ட அமைப்புகளின் ஒத்தாசையை நாடலாம். toabuumar@gmail.com என்ற முகவரிக்கு அவ்வமைப்புகளின் விபரங்கள் கேட்டு எழுதினால் தருவதற்கு தயார். இதுபற்றி சல்மா போன்றவர்கள்கூட தெரிந்துக்கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.
ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) என்ற அமைப்பும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) என்ற அமைப்பும் ஆயிரக்கணக்கான பகுத்தறிவு திருமணங்கள் (புரோகித தனம் தவிர்த்து) வரதட்சணை இல்லாமல் நடத்திக்காட்டியிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புக்கும் தமிழ்நாட்டில் பல கிளைகள் உண்டு. இந்த அமைப்பின் உதவிகள் இல்லாமல்கூட உள்ளூர் ஜமாஅத்துகளின் மூடத்தனமாக புரோகிதத் தனங்களையும், வரதட்சணை பழக்கத்தையும் எதிர்த்து என்னைப்போல எத்தனையோ இளைஞர்கள் ஒரு சவாலாக எடுத்து திருமணங்கள் செய்துள்ளார்கள்.
இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையை மீட்டித்தர பாடுபடும் சல்மா போன்ற ஆர்வலர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இஸ்லாம் தரும் பெண் உரிமையை தெரிந்துக்கொள்ளுங்கள், அதனை அவர்கள் பெற்றுக்கொள்ள போராடுங்கள். கூடவே சில முஸ்லிம் பெண்களின் தர்கா போன்ற மூட நம்பிக்கைகளை அடித்து விரட்டுங்கள். முஸ்லிம் பெண்கள் கல்வியறிவு பெற வகை செய்யுங்கள் என்பவைதான் அது.
டிஜிட்டல் விவாகரத்து:
sms, email மூலம் விவாகரத்து கோரல் சம்பந்தமாக நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்முஸ்லிம் கூட்டுப்பதிவில் எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.
ஜீவனாம்சம்:
இஸ்லாம் ஒப்பந்தத்திற்கு பிறகு கணவனிடம் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை. முன்பணமாக ஜீவனாம்சத்தை அல்லது மஹர் என்னும் மணக்கொடையை வாங்கிக்கொள்ளச் சொல்கிறது. இந்திய முஸ்லிம்களில் இவ்விஷயத்தில் தவறான பல விஷயங்கள் நடைமுறையில் உள்ளன.
அதாவது பெயருக்காக நூற்று ஒன்று, ஆயிரத்து ஒன்று என்று மஹர் தொகையை எழுதிக்கொள்வதும் அந்த பிச்சைக்காசைக் கூட அப்பெண்ணிடம் கொடுக்காமல் இருப்பதும்தான்.
திருமணம் என்பது இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு ஒப்பந்தம் மட்டுமே. ஒப்பந்தம் செய்பவர்கள் தனக்கு உரிமையானதை மற்றும் தனக்கு பாதகம் இல்லாததை ஒப்பந்தத்தில் எழுதி பெற்றுக்கொள்வார் தவிர ஒப்பந்தத்தில் எழுதாமல் பிறகு கேட்டால் எதுவும் நடக்காது என்பது தெரிந்ததே. அதுபோலத்தான் பெண்கள், தன்னை திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் தனது எதிர்கால கணவனிடத்தில் தனக்கு தேவையானதை அட்வான்ஸ் ஜீவனாம்சமாக மஹர் என்னும் மணக்கொடையின் பெயரால் முதலிலேயே பெற்றுக்கொள்ளச் செய்கிறது இஸ்லாம். இந்த தொகையை இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்ற அதிகபட்ச வரையறைகூட இஸ்லாமிய ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாது. இன்று சவுதிபோன்ற நாடுகளில் இந்த அட்வான்ஸ் ஜீவனாம்சத்தை (மஹர்) கொடுக்க முடியாத ஆண் குமர்கள் திருமணம் செய்ய முடியாமல் இருப்பதை பார்க்க முடியும். இதனை பெண் கேட்டும் வரதட்சணை என்று கொச்சைப்படுத்துவது நம்மவர்களுக்கு வழக்கம்.
இது ஜீவனாம்சம்தான் என்று சொல்வதற்கு காரணம், மனைவி கணவனை விவாகரத்து கோரினால் அப்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆண் விவாகரத்து கோரினால் அவள் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்நாட்டில் ஆண்கள் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட தொகையை ஏப்பம் விடுவது போல் அல்ல.
இந்த முஸ்லிம்பெண்களின் உரிமைகளை கலங்கப்படுத்தும் எத்தனையோ ஊர் ஜமாஅத்தார்கள் உண்டு என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இதற்காக நாங்கள் போராடுகிறோம். அதற்காக எங்களைப் போன்றோர்களை ஊர்விட்டு விலக்கி வைத்துள்ளார்கள். இது குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களிடம் உள்ள குறைபாடுகள் என்று சொல்லாமல் இஸ்லாத்தில் இந்த உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் தவறான பிரச்சாரமாகும்.
பலதார மணம்:
பலதார மணம் என்பது இஸ்லாத்தில் ஒரு அனுமதியே தவிர அது மார்க்கத்தின் கடமையோ வணக்கமோ கிடையாது. சின்ன வீடு வைத்துக்கொண்டு கும்மாளம் இடுபவர்களுக்கு அவளும் ஒரு மனைவிதான் என்றும் அவளுக்கு பிறந்தவர்களும் சமசொத்துரிமை பெற்றுள்ளார்கள் என்று ஆணின் தலையில் சுமத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் மனைவிகளிடையே பாரபட்சம் காட்டவேண்டிவரும் என்று பயந்தால் அவனுக்கு பலதாரமணம் செய்துகொள்வதை ஹராமாக (தடுக்கப்பட்டதாக) ஆக்குகிறது இஸ்லாம். எனக்கு தெரிந்தவர்களில் யாரும் (தமிழ்மணத்தில் எழுதும் நண்பர்கள் உட்பட) பலதார மணம் புரிந்துக்கொள்ளவில்லை. எனக்கும் ஒரு மனைவிதான் ஐயா. பலதாரமணம் பற்றி பிறகு எழுதும் எண்ணம் உண்டு. (கடவுள் நாடினால்).
கற்பத்தடை
பெண் குழந்தையை கருவிலியே சமாதிகட்டுவதும், கள்ளிப்பால் இட்டு நிரந்தரத்தூக்கத்தை இட்டுச்சொல்வதும் இந்த கால வழக்கம் என்றால் பெண் குழந்தையை உயிரோடு புதைக்கும் காலம் முஹம்மது நபி எந்த அரபு சமுதாயத்தில் பிறந்தார்களோ அத்தகையவர்களின் பழக்கமாக இருந்தது. இதனை முற்றாக ஒழித்தவர்தான் முஹம்மதுநபி. மேலும் குழந்தைகளை வறுமைக்கு பயந்து கொள்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதுபோன்ற ஒரு வசனத்தைத்தான் திருக்குர்ஆனிலிருந்து (6:151) நீங்கள் எடுத்துக்காட்டியிருந்தீர்கள். தவிர இவ்வசனம் குழந்தைகளை கணக்கின்றி பெற்றுப்போடச் சொல்லவில்லை.
திருக்குர்ஆனில் 6:137, 6:140, 6:151 ஆகிய வசனங்களில் குழந்தைகளை கடவுளின் பெயரால் கொல்லாதீர்கள் என்றும் வறுமைக்கு பயந்து கொல்லாதீர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் என்ன பழைமைவாதம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
அதே நேரத்தில், இஸ்லாம் குழந்தை வளர்ப்பில் மிக்க கண்ணும் கருத்துமாக இருக்கச் சொல்கிறது. கவனிக்க முடியாத குழந்தைகளை பெற்றுப்போடச் சொல்லவில்லை. குழந்தைக்கு அறிவை ஊட்டுவது தந்தைக்கு கடமையாக்கியிருக்கிறது இஸ்லாம்.
இரண்டு குழந்தைகளுக்கு மேல், பெற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக ஒரு பெண் தன்னை தற்காலிக மலடாக ஆக்கி கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. ஆனால் தற்காலிக கருத்தடை ஏற்பாடுகளை செய்வதை தடுக்கவில்லை. நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுவிட்டால் என்று கவலைப்படுகிறீர்கள். நான் இறந்த பிறகு என் மனைவி மறுமணம் செய்துக்கொள்ள தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்று இஸ்லாம் கவலைப்படுகிறது. இது இருபாலருக்கும் பொருந்தும்.
கல்வியும் விழிப்புணர்வும் இருந்தால் அழகிய சமுதாயத்தை உருவாக்கலாம். நாங்கள் முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இத்தனை மாற்று ஏற்பாடுகளும் இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி ஏற்பாடுகளாகும். "அம்மா" என்று அழைப்பது பழைமையானது என்பதால் "மாமி"(ஆன்ட்டி) என்று மாற்றிக்கொள்வோமா?. பழைமையான விஷயம் என்பதால் ஒரு விஷயத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதில் பாதிப்பு இருந்தால்தான் எதிர்ப்போம். முத்தலாக் என்பது முஹம்மது நபி தடைசெய்த ஒன்று. மொத்தத்தில் இஸ்லாம் வெறுக்கும் ஒன்றை இஸ்லாத்தில் இருப்பதாக சொல்ல இத்தனை ஆர்பாட்டமா?
கடவுள் அனுமதித்த விஷயத்தில் வெறுக்கக்கூடிய ஒன்றுதான் இந்த விவாகரத்து(தலாக்) என்றும் ஆண்களுக்கு பெண்களை விவாகரத்து செய்ய திருப்பி அழைத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பின் ஊடே இரண்டு விவாகரத்தும் மூன்றாவதில் நிரந்தரமாகவும் ஆக்குகிறது இஸ்லாம். ஆனால் பெண்களுக்கு ஒரே வாய்ப்பில் ஆண்களை விவாகரத்து செய்யும் உரிமை கொடுத்திருக்கிறது. முஸ்லிம்களில் சிலர் இஸ்லாத்தை அறியாமல் டிஜிட்டல் மற்றும் அதிரடி விவாகரத்து (முத்தலாக்) செய்கிறார்கள். இதில் எதை பழைமைவாதம் என்கிறீர்கள்?
திருமணம் செய்யப்போகும் கணவனிடம் ஜீவனாம்சத்தை அல்லது மணக்கொடையை (மஹர்) முதலிலேயே பெற்றுக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட பின்புதான் கணவனிடம் யாசித்து நிற்கவேண்டும் என்று சொல்வது. இதில் எது பழைமைவாதம்?
வேசிகளிடம் செல்லாதே, நல்ல பெண்களை வேசிகளாக்காதே என்று சொல்லி பாரபட்சம் இல்லாமல் சரிசமமாக நடத்த முடியும் என்றால் மட்டுமே மற்றவளை திருமணம் செய்துக்கொள் என்கிறது இஸ்லாம். அதுவல்லாமல், தெருவுக்கு தெரு சின்ன வீடு வைத்துக்கொள்ளலாம், அவளுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டாம். நீ எறிந்த பிச்சைக்காசு போதும் என்னும் முறை பழைமைவாதமா?
தற்காலிக கருத்தடைகளுக்கு அனுமதியளித்த பின்னர், பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவு, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை போதிப்பதில் மிகக் கண்டிப்பாகவும் குழந்தைகளை கொலை செய்யாதே என்றும் சொல்கிறது இஸ்லாம். அதுவல்லாமல் குழந்தைகளை கொலைசெய்வது, கருவிலேயே சமாதி கட்டுவது, இறைவன் தந்த அருட்கொடைகளை நீக்கிக்கொள்வது இவற்றில் எது பழைமைவாதம்?
ஐயா, முஸ்லிம்கள் செய்வதெல்லாம் இஸ்லாம் இல்லை. நீங்கள் முஸ்லிம்கள் செய்வதை எதிர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம். முத்தலாக் என்ற பெயரில் தன்னை நாடிவந்த பெண்ணை சட்டென்று நிற்கதியாக்கும் முஸ்லிம்களை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாத்தை கொச்சைப்படுத்த இதனை வாய்ப்பாக்கி கொள்ளாதீர்கள் என்று அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இஸ்லாத்தைப்பற்றி விமர்சனம் செய்ய விரும்புகிறீர்களா? தாராளமாக. இஸ்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. இதுவரை மிக மோசமாக இஸ்லாத்தின்பால் சேற்றை இறைத்தவர்களை எல்லாம்கூட விமர்சனம் செய்ய வரவேற்றே இருக்கிறோம். உதாரணத்திற்கு ஒரு சில சுட்டிகள் மட்டும்:
இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் (அக்பர் பாட்சா)
வாருங்கள் விவாதிக்கலாம் (அப்துல்லாஹ்)
விவாதங்கள் விவாதங்களாகவே.. (நல்லார்க்கினியன்)
மற்றும் சுடர்
ஆனால் அதற்கு முன்பு எது இஸ்லாத்தின் ஆதாரம் என்பதையும் படித்துக்கொள்ளுங்கள்.
இஸ்லாம் மார்க்கம் தனது கொள்கையை அறிவுப்பூர்வமாக சிந்தித்து மட்டுமே ஏற்றுக்கொள்ளச் சொன்ன மார்க்கம். அதனால்தான் திருக்குர்ஆனில் பல இடங்களில் சிந்திக்க மாட்டீர்களா என்று இறைவன் கேட்கிறான். இக்காலத்தில் மூட பழக்க வழக்கங்களை கண்டிப்பவர்களை அறிவு ஜீவிகள் என்கிறோம். அந்த அறிவு ஜீவிகளே செய்யக்கூடிய மூட பழக்கங்களையும் வன்மையாக கண்டித்ததுதான் இஸ்லாம். அதனால்தான் முஹம்மது நபிக்கு முஸ்லிம்கள் சிலை வைக்கவில்லை. இஸ்லாம் சொல்லும் பகுத்தறிவு கொள்கைகளை எனது அடுத்த (மாமனிதர்) தொடரில் எழுதலாம் என்று உள்ளேன். (கடவுள் நாடினால்).
திராவிட கழகத்தின் ஒரு சில கொள்கைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நம்மிடம் காசு கேட்கும், பலி கேட்கும், மூடபழக்கங்களின் திறவுகோலான இந்த கடவுள்களை வணங்க வேண்டுமா என்ற இந்த கருத்து என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கிறது. தர்கா வாசல்களில் தவம் கிடப்பவர்களையும், வரதட்சணை வாங்கும் எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களையும் ஹஜ்ரத்துகளின் புரோகித தனத்தையும் எனக்கு கருத்து தெரிய வந்த நாட்களில் பார்த்தபோது இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்றுதானோ என்று நினைத்ததுண்டு. ஆனால் இஸ்லாம் பற்றி படித்தபோதுதான் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தற்போது உள்ள வேறுபாடு புரிந்தது.
"கடவுள் இல்லை, (லாயிலாஹ) அல்லாஹ்வை தவிர (இல்லல்லாஹு)" என்கிறது இஸ்லாம். அதாவது கடவுளுக்கு நாம் கொடுக்கும் இலக்கணமான ஆசை, தூக்கம், குழந்தை உண்டு, பெற்றோர் உண்டு, கடவுளுக்குள் சண்டை இதுபோன்றவைகளை எப்படி கடவுள் என்று சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டு, இத்தகைய குறைபாடுகள் எவையும் அற்ற ஒருவன்தான் கடவுள் என்கிறது இஸ்லாம்.
இஸ்லாத்தை பலர் போற்றுவதற்கு காரணம் அது சொல்லும் பகுத்தறிவு கருத்துகள். இஸ்லாம் என்பது இறைவன் திருக்குர்ஆன் மூலமும், கடவுளின் தூதராக வந்த முஹம்மது நபி அவர்களின் மூலம் சொன்ன போதனைகள்தான் தவிர மற்ற எதுவும் இல்லை.
இஸ்லாம் பற்றி பலர் குறை சொல்லக் காரணம் முஸ்லிம்களின் தவறுகள் மட்டுமே. எல்லாருக்கும் இஸ்லாத்தைப்பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. மற்றவர்கள் முஸ்லிம்களின் செயல்பாடுகள்தான் இஸ்லாம் என நோக்குகிறார்கள். ஆனால் முஸ்லிம்களில் பலர் தனது மனோ இச்சையை செயல்படுத்தி இஸ்லாத்திற்கு அவப்பெயர் உண்டாக்குகிறார்கள்.
என்னுடைய பதிவு உங்களின் கட்டுரைக்கு பதில் அல்ல. சிறு குறிப்புகள் மட்டுமே.
இதன் விரிவாக்கத்தை நண்பர் அபூமுஹையின் தொடரில் பார்ப்போம். முதலாம் தொடரின் சுட்டி:
தலாக் ஓர் விளக்கம்-1
_________________________________________
நந்தலாலா,
பெற்ற பெண்ணை ::மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி, ஊரை வலம் வரச்செய்யும்:: மற்றவர் கலாச்சாரத்துடன்::தலாக் என்று சேர்த்திருப்பது யாரை திருப்தி படுத்துவதற்காக?
Wednesday, May 04, 2005
இஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் - 5
வேண்டாம் அற்புதங்கள்!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே "இதை நம்பு" என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
- அறிஞர் அண்ணா -
தொடரும்..
நன்றி:
அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் - இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் - அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன். காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு - அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் - அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் - என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே "இதை நம்பு" என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை - கருப்பொருள் - கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
- அறிஞர் அண்ணா -
தொடரும்..
நன்றி:
அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்
Tuesday, May 03, 2005
மாமனிதர் [தொடர்.. 3]
முஹம்மது நபி ஒரு ஆன்மீக தலைவராக மட்டும் இருந்துவிட்டால் அவரின் அடக்கமான பண்பிற்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஒரு வல்லரசின் அதிபதியாக இருந்துக்கொண்டு மக்கள் பணத்தில் பகட்டு வாழ்க்கை வாழவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயமாகும்.
வியக்க வைக்கும் புரட்சிப் பிரகடனம்
நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொதுநிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரணிடம் கூறி துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை நாம் ஸகாத் (பொதுநிதி) பொருளைச் சாப்பிடக்கூடாது (ஹராம்) என்பது உமக்குத் தெரியாதா? என்றும் பேரனிடம் கேட்டவர்தான் முஹம்மது நபி அவர்கள் (1)
எனது வாரிசு தங்க காசுகளுக்கு, வாரிசாகமாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று அறிவித்துச் சென்றார்கள்.) (1)
அதனால்தான் முஹம்மது நபிக்கு அடுத்து வந்த ஆட்சியாளர் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள், முஹம்மது நபியின் சொத்து ஒன்றை கேட்க வந்த முஹம்மது நபியின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம்
"எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்" என்று உங்கள் தந்தை முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். எனவே அதை உங்களிடம் தர இயலாது நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள் ஆயினும் நான் தர மறுப்பதற்கு காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான் என்று கூறிமறுத்து விட்டார்கள். (1)
பொது நிதியை பேணியவர்
ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பதற்காக வந்த பொது பணத்தைக்கூட அவர்களிடத்தில் சேர்ப்பதற்கு தாமத படுத்தாத மனிதர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்கத் திரும்பி வந்துவிட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தான் அவசரமாகச் சென்று திரும்பியதன் காரணம், "அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளித்துண்டு என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்கள். (1)
குடிமக்களின் உரிமையை பேணியவர்
நாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்துவிட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை எற்றி அனுப்புவீராக! உமது செல்வத்திலிருந்தோ உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் ஏற்றி அனுப்பப் போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை ஏற்ற மாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். நான் விடமாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறையும் விடமாட்டேன் என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்றபோது அவரை நோக்கி (தாக்குவதற்கு) விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக்கூடாது என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி இவரது ஒர ஒட்டகத்தில் கோதுமையையும் இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள்! என்றார்கள்.(6)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன் நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டத்தால் நெருக்கித் தள்ளியதால் அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள் என்று கூறினார்கள். இம்மரங்களின் உண்ணிகையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காணமாட்டீர்கள். எனவும் கூறினார்கள். (1)
கடன் கொடுத்தவனின் உரிமைக்கு மதிப்பளித்தவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது எனக் கூறினார்கள். அவர்கள் மேலும் தம் தோழர்களிடம் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதையே அவருக்குக் கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார் எனக் கூறினார்கள். (1)
மற்றவர்களின் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டவர்
ஒரு மனிதர் கடன் பட்ட நிலையில் (மற்றவர் பாதிக்கப்பட்ட நிலையில்) இறைவனை சேறுவதை முஹம்மது நபி அவர்கள் விரும்பவில்லை. அக்கடனை நண்பர்கள் அடைக்க வேண்டும் அல்லது தான் அடைக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும் இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா என்று அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம்! எனக் கூறப்பட்டால் கடனை நிறைவெற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா? எனக் கேட்பார்கள் ஆம்! எனக் கூறப்பட்டால் உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுஙகள் என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும் என்று கூறலானார்கள். (1)
கடமையை உணர்ந்த மாமன்னர்
என்னை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டுக்கு (Yemen) ஆளுநராக அனுப்பினார்கள். நான் எமன் நோக்கிப் புறப்படும் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடைபெறும் போது முஆதே! இவ்வருடத்திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்கமாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசல் அல்லது அடக்கத்தலத்தைத் தான் சந்திப்பீர் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள் என்று முஆத் பின் ஜபல்(ரலி) குறிப்பிடுகிறார்கள் (5)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியை சிந்தியிருந்தனர். இதை கண்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள். (1)
தனக்கென்று தனித்தன்மை பார்க்காத ஆட்சியாளர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டபோது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் தண்ணீர் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார் அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பவரை அழைத்து வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தத் தண்ணீரையே தாருங்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே என்று அப்பாஸ் கூறினார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள் எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள்.
பின்னர் புனிதமான கிணறாகக் கருதப்படும் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும். அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன் என்று கூறினார்கள். (1)
குடைப் பிடிக்கச் சொல்லாத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் அமர்ந்து கொண்டார். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான். என்று விடையளித்தார்கள். (4)
ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டுதான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான் என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார்கள். (7)
ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக்குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக்கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் எனவும் கூறினார்கள். (2)
போலி கவுரவம் பார்க்காத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறியமாட்டோம் எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும் எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களும் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். மரணிக்கும் வரை இப்படித்தான் இருப்பேன் எனக் கூறினார்கள். (3)
வீட்டில் நமது செருப்பைத் தாமே தைப்பார்கள் தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள் வீட்டு வேலைகளையும் செய்வார்கள். (5)
மக்களோடு மக்களாக
அகழ் யுத்தத்தின் போது அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள் மண் சுமந்தார்கள் அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. (1)
அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டியபோது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். (1)
ஒரு இளைஞர் அறக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஓதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன் என்றார்கள் தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள். (4)
அடக்கமான அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும் புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது. மக்களிடத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில்கூட, மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான் என்பதை மக்களிடம் அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். (1)
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் உற்ற தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் கூறிகிறார்கள். (4)
மாறுபட்ட ஆன்மீகத் தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனக்கு தெய்வத்தன்மை இருப்பதாக வணக்க வழிபாடு விஷயங்களில்கூட கூறிக்கொண்டது கிடையாது. அதனால்தான் முஸ்லிம்கள் அவரை, இறைவனிடமிருந்து ஜிப்ரீல் என்னும் வானவ தூதர் மூலம் வரும் இறைச்செய்தியை மக்களுக்கு தெரிவித்து அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மாமனிதராகவே பார்க்கிறார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் அப்போது வழக்கமாக தொழுவதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொழுதார்கள் தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவாகள் நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன் எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)
ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்தனர் அனைவரும் வரிசையில் நின்றனர் தொழுகைக்கு தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். அப்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் அப்படியே நில்லுங்கள் எனக் கூறி விட்டு சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். (1)
தன்விஷயத்திலும் பிறரின் சுயமரியாதையை பேணச் செய்தவர்
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன் அங்குள்ளவர்கள் தமது தலைவருக்கு ஸஜ்தா (சிரம் பணிந்து கும்பிடுதல்) செய்ததைப் பார்த்தேன் இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்ததும் நான் ஹியரா என்னும் ஊரக்குச் சென்றேன் மக்கள் தமது தலைவருக்கு சிரம் பணிவதைக் கண்டேன் நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கம் சிரம் பணிவீரோ எனக் கேட்டார்கள் மாட்டேன் என்று நான் கூறினேன் அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆம் அவ்வாறு செய்யக் கூடாது என்றார்கள். (4)
எனது அடக்கத்தலத்தை வணங்கி விடாதீர்கள்! (5) எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள். (4) என்று சொல்லிச் சென்ற ஒரே ஆன்மீக தலைவரும் இன்றுவரை கடவுளாக மதிக்காமல் ஒரு மாமனிதராகவும் ஆன்மீக தலைவராகவும் நினைக்கப்படுபவர்தான் முஹம்மது(ஸல்) அவர்கள்.
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்து போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக என்றார்கள் அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன் பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம் (நபிகள் நாயகம் ஸல்) மரணப்படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழமியிருந்தனர்) மக்களே நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம் எனவே உங்களில் எவருடைய மானத்திற்காவது எவருடைய முடிக்காவது எருடைய உடம்புக்காவது எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம் முஹம்மதின் முடி முஹம்மதின் உடல் முஹம்மதின் செல்வம்! பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாக நேரிடுமா என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூறவேண்டாம் அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும் வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும் அவை எனது பண்பிலும் இல்லாததாகும் என்று கூறிவிட்டு திரும்பினார்கள்.
மறுநாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள் யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்பதையும் சேர்த்துக் கூறினார்கள் என்று ஃபழ்லு(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (8)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது தன் உணவுக்காக தனது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடகுவைத்துவிட்டு மீட்காமலேயேதான் இறந்து போனார்கள்.
முப்பது படி கோதுமைக்காக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (1)
(தொடரும்..)
குறிப்பு நூல்கள்:
(1) புகாரி
(2) தப்ரானி
(3) பஸ்ஸார்
(4) அபூதாவூத்
(5) அஹமத்
(6) நஸயீ
(7) ஹாக்கீம்
(8) முஸ்னத் அபீயஃலா
வியக்க வைக்கும் புரட்சிப் பிரகடனம்
நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொதுநிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு என்று தமது பேரணிடம் கூறி துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை நாம் ஸகாத் (பொதுநிதி) பொருளைச் சாப்பிடக்கூடாது (ஹராம்) என்பது உமக்குத் தெரியாதா? என்றும் பேரனிடம் கேட்டவர்தான் முஹம்மது நபி அவர்கள் (1)
எனது வாரிசு தங்க காசுகளுக்கு, வாரிசாகமாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று அறிவித்துச் சென்றார்கள்.) (1)
அதனால்தான் முஹம்மது நபிக்கு அடுத்து வந்த ஆட்சியாளர் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள், முஹம்மது நபியின் சொத்து ஒன்றை கேட்க வந்த முஹம்மது நபியின் மகள் ஃபாத்திமா(ரலி) அவர்களிடம்
"எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்" என்று உங்கள் தந்தை முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். எனவே அதை உங்களிடம் தர இயலாது நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள் ஆயினும் நான் தர மறுப்பதற்கு காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான் என்று கூறிமறுத்து விட்டார்கள். (1)
பொது நிதியை பேணியவர்
ஏழைகளுக்கு தர்மம் கொடுப்பதற்காக வந்த பொது பணத்தைக்கூட அவர்களிடத்தில் சேர்ப்பதற்கு தாமத படுத்தாத மனிதர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்கத் திரும்பி வந்துவிட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தான் அவசரமாகச் சென்று திரும்பியதன் காரணம், "அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளித்துண்டு என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்" என்று தெரிவித்தார்கள். (1)
குடிமக்களின் உரிமையை பேணியவர்
நாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்துவிட்டது. முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களை எற்றி அனுப்புவீராக! உமது செல்வத்திலிருந்தோ உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் ஏற்றி அனுப்பப் போவதில்லை என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களை ஏற்ற மாட்டேன் என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். நான் விடமாட்டேன் என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறையும் விடமாட்டேன் என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்றபோது அவரை நோக்கி (தாக்குவதற்கு) விரைந்தோம். நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக்கூடாது என்று முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி இவரது ஒர ஒட்டகத்தில் கோதுமையையும் இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி நீங்கள் புறப்படுங்கள்! என்றார்கள்.(6)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன் நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டத்தால் நெருக்கித் தள்ளியதால் அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது. எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள் என்று கூறினார்கள். இம்மரங்களின் உண்ணிகையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காணமாட்டீர்கள். எனவும் கூறினார்கள். (1)
கடன் கொடுத்தவனின் உரிமைக்கு மதிப்பளித்தவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது எனக் கூறினார்கள். அவர்கள் மேலும் தம் தோழர்களிடம் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதையே அவருக்குக் கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார் எனக் கூறினார்கள். (1)
மற்றவர்களின் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டவர்
ஒரு மனிதர் கடன் பட்ட நிலையில் (மற்றவர் பாதிக்கப்பட்ட நிலையில்) இறைவனை சேறுவதை முஹம்மது நபி அவர்கள் விரும்பவில்லை. அக்கடனை நண்பர்கள் அடைக்க வேண்டும் அல்லது தான் அடைக்கவேண்டும் என்று விரும்பினார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும் இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா என்று அப்போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம்! எனக் கூறப்பட்டால் கடனை நிறைவெற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா? எனக் கேட்பார்கள் ஆம்! எனக் கூறப்பட்டால் உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுஙகள் என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும் என்று கூறலானார்கள். (1)
கடமையை உணர்ந்த மாமன்னர்
என்னை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டுக்கு (Yemen) ஆளுநராக அனுப்பினார்கள். நான் எமன் நோக்கிப் புறப்படும் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடைபெறும் போது முஆதே! இவ்வருடத்திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்கமாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசல் அல்லது அடக்கத்தலத்தைத் தான் சந்திப்பீர் எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள் என்று முஆத் பின் ஜபல்(ரலி) குறிப்பிடுகிறார்கள் (5)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியை சிந்தியிருந்தனர். இதை கண்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள். (1)
தனக்கென்று தனித்தன்மை பார்க்காத ஆட்சியாளர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டபோது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ் தண்ணீர் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார் அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பவரை அழைத்து வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தத் தண்ணீரையே தாருங்கள் எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே என்று அப்பாஸ் கூறினார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள் எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள்.
பின்னர் புனிதமான கிணறாகக் கருதப்படும் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும். அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன் என்று கூறினார்கள். (1)
குடைப் பிடிக்கச் சொல்லாத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் இந்த ஆட்டைச் சமையுங்கள் என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் அமர்ந்து கொண்டார். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான். என்று விடையளித்தார்கள். (4)
ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டுதான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான் என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார்கள். (7)
ஒரு முறை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக்குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக்கூறி அந்தத்துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் எனவும் கூறினார்கள். (2)
போலி கவுரவம் பார்க்காத தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறியமாட்டோம் எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயம்(ஸல்) அவர்கள் மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும் எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களும் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். மரணிக்கும் வரை இப்படித்தான் இருப்பேன் எனக் கூறினார்கள். (3)
வீட்டில் நமது செருப்பைத் தாமே தைப்பார்கள் தமது ஆடையின் கிழிசலையும் தாமே தைப்பார்கள் வீட்டு வேலைகளையும் செய்வார்கள். (5)
மக்களோடு மக்களாக
அகழ் யுத்தத்தின் போது அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள் மண் சுமந்தார்கள் அவர்களின் வயிற்றை மண் மறைத்தது. (1)
அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டியபோது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். (1)
ஒரு இளைஞர் அறக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஓதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன் என்றார்கள் தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள். (4)
அடக்கமான அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும் புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது. மக்களிடத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில்கூட, மக்காவாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான் என்பதை மக்களிடம் அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர். (1)
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகத்தின் உற்ற தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் கூறிகிறார்கள். (4)
மாறுபட்ட ஆன்மீகத் தலைவர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனக்கு தெய்வத்தன்மை இருப்பதாக வணக்க வழிபாடு விஷயங்களில்கூட கூறிக்கொண்டது கிடையாது. அதனால்தான் முஸ்லிம்கள் அவரை, இறைவனிடமிருந்து ஜிப்ரீல் என்னும் வானவ தூதர் மூலம் வரும் இறைச்செய்தியை மக்களுக்கு தெரிவித்து அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மாமனிதராகவே பார்க்கிறார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள் அப்போது வழக்கமாக தொழுவதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொழுதார்கள் தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது முஹம்மது நபி(ஸல்) அவாகள் நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன் எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)
ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்தனர் அனைவரும் வரிசையில் நின்றனர் தொழுகைக்கு தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். அப்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் அப்படியே நில்லுங்கள் எனக் கூறி விட்டு சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள். (1)
தன்விஷயத்திலும் பிறரின் சுயமரியாதையை பேணச் செய்தவர்
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன் அங்குள்ளவர்கள் தமது தலைவருக்கு ஸஜ்தா (சிரம் பணிந்து கும்பிடுதல்) செய்ததைப் பார்த்தேன் இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்ததும் நான் ஹியரா என்னும் ஊரக்குச் சென்றேன் மக்கள் தமது தலைவருக்கு சிரம் பணிவதைக் கண்டேன் நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கம் சிரம் பணிவீரோ எனக் கேட்டார்கள் மாட்டேன் என்று நான் கூறினேன் அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆம் அவ்வாறு செய்யக் கூடாது என்றார்கள். (4)
எனது அடக்கத்தலத்தை வணங்கி விடாதீர்கள்! (5) எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள். (4) என்று சொல்லிச் சென்ற ஒரே ஆன்மீக தலைவரும் இன்றுவரை கடவுளாக மதிக்காமல் ஒரு மாமனிதராகவும் ஆன்மீக தலைவராகவும் நினைக்கப்படுபவர்தான் முஹம்மது(ஸல்) அவர்கள்.
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்து போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக என்றார்கள் அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன் பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம் (நபிகள் நாயகம் ஸல்) மரணப்படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழமியிருந்தனர்) மக்களே நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான் உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம் எனவே உங்களில் எவருடைய மானத்திற்காவது எவருடைய முடிக்காவது எருடைய உடம்புக்காவது எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம் முஹம்மதின் முடி முஹம்மதின் உடல் முஹம்மதின் செல்வம்! பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும் பகைமைக்கும் ஆளாக நேரிடுமா என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூறவேண்டாம் அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும் வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும் அவை எனது பண்பிலும் இல்லாததாகும் என்று கூறிவிட்டு திரும்பினார்கள்.
மறுநாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள் யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்பதையும் சேர்த்துக் கூறினார்கள் என்று ஃபழ்லு(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (8)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது தன் உணவுக்காக தனது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடகுவைத்துவிட்டு மீட்காமலேயேதான் இறந்து போனார்கள்.
முப்பது படி கோதுமைக்காக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (1)
(தொடரும்..)
குறிப்பு நூல்கள்:
(1) புகாரி
(2) தப்ரானி
(3) பஸ்ஸார்
(4) அபூதாவூத்
(5) அஹமத்
(6) நஸயீ
(7) ஹாக்கீம்
(8) முஸ்னத் அபீயஃலா
Sunday, May 01, 2005
மாமனிதர் [தொடர்.. 2]
பஞ்சு தலையணை இல்லாத அரசர்.
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது (2) என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதை கதவாக பயன்படுத்திக் கொள்வார்கள் (1) என்றும் நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால்மாட்டில் தோல் பதனிடப் பயன்படுத்தப்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப்பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்கவிடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே என்று நான் கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? எனக் கேட்டார்கள் என உமர்(ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். (1)
மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா எடுத்துக்காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)
அரண்மனை இல்லாத அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆன்மீக தலைவராகவும், அரசராகவும் இருந்தாலும் கூட தங்களுக்கென்று அரண்மனை கட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் வீட்டில் தொழுவதற்கு கூட இடம் பற்றாக்குறைதான் என்பதை பின்வரும் சம்பவம் விளக்குகிறது:
நான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் (தொழுகையின் போது தலையை கீழே வைக்கும்) இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யம்போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள் உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து முடித்ததும் மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது என முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள். (1)
தொடரும்..
ஆதார நூல்கள்:
(1) புகாரி
(2) முஸ்லிம்
கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது (2) என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதை கதவாக பயன்படுத்திக் கொள்வார்கள் (1) என்றும் நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால்மாட்டில் தோல் பதனிடப் பயன்படுத்தப்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப்பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்கவிடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன். ஏன் அழுகிறீர் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே என்று நான் கூறினேன். அதற்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகம் அவர்களுக்கும் மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்கு திருப்தியளிக்கவில்லையா? எனக் கேட்டார்கள் என உமர்(ரலி) அவர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். (1)
மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா எடுத்துக்காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள். (1)
அரண்மனை இல்லாத அரசர்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆன்மீக தலைவராகவும், அரசராகவும் இருந்தாலும் கூட தங்களுக்கென்று அரண்மனை கட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் வீட்டில் தொழுவதற்கு கூட இடம் பற்றாக்குறைதான் என்பதை பின்வரும் சம்பவம் விளக்குகிறது:
நான் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் (தொழுகையின் போது தலையை கீழே வைக்கும்) இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யம்போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள் உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து முடித்ததும் மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது என முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) கூறினார்கள். (1)
தொடரும்..
ஆதார நூல்கள்:
(1) புகாரி
(2) முஸ்லிம்
Subscribe to:
Posts (Atom)