Thursday, December 08, 2005

லிங்கமும் கருப்புக்கல்லும்

மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள "ஹஜருல் அஸ்வத்" என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஆனால் இந்து சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.

இது தான் முக்கியமான வித்தியாசம்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர். "ஹஜ்ருல் அஸ்வத்" பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி "நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்"என்று கூறினார்கள். (புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித் தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது மூதாதையர்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகளை உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

"ஹஜருல் அஸ்வத்" என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

"ஆம்ஸ்ட்ராங்" தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக்கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

Source

2 comments:

Thangamani said...

//ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும். //

வேடிக்கையான புரிதல். ஒருவரது குழந்தை ஒன்று பசியால் துடிக்கும் போது அவர் அதைக்கண்டு வருந்துவது ஒரு சிறுகுழந்தை பசியால் வாடுகிறது என்பதை விட தனது குழந்தை என்ற அபிமானத்தாலேயே வருந்துகிறார். ஒருகுழந்தையிடம் அவர்காண்பது தனது என்ற அடையாளத்தை முன்வைத்தே. அதாவது ஒரு குழந்தையில் ஒருவர் தன்னைக் காணமுடியும் போது, ஒரு கல்லில் இறைவனைக்காண முடியாததல்ல. அப்படியொரு மாதிரியான பார்வையே சிலைவணக்கமும். சிலையை வணங்குகிறவர் கல்லின் மேல் மரியாதையும் நம்பிக்கையும் வைப்பதில்லை அதில் கடவுளையே காண்பதால்தான் வணங்குகிறார்கள். அதனால்தான் எந்த அற்ப வடிவமும் கடவுளுக்கான வடிவமாகக் கருதப்படமுடிகிறது.

எப்படி இஸ்லாத்தை/ இஸ்லாமியர்களைப் பற்றி பல மடத்தனமான புரிதல்கள் இருக்கின்றனவோ அப்படி ஒரு சிலைவணக்கத்தைப் பற்றிய புரிதல்தான் நீங்கள் குறிப்பிட்டிருப்பது. இந்தப்பிரச்சனை மற்றவர்களிடம் தன்னுடைய வழியை நியாயப்படுத்த முனைகிற அற்ப விசுவாசிக்கு ஏற்படுகிற ஒன்றே ஒழிய எந்த விதத்திலும் ஆன்மீக ரீதியிலானதல்ல. ஆன்மீக ரீதியிலான தேட்டமும், நம்பிக்கையும் கொண்ட ஒருவனுக்கும் அவனே போதுமானவன்.

இதை நான் சிலைவழிபாடுகளின் ஆதரவாளனாக எழுதுகிறேன் என்று புரிந்துகொள்ளவேண்டாம்; தனது வழியை, நம்பிக்கையை எல்லோருக்குமானதாக காணச்செய்வதன் மூலம் சமாதானமும், மற்றவர்க்கு நல்வழியைக் காட்டித்தருகிற பெருமிதமும் கொண்ட சகல நம்பிக்கையாளர்களுக்குமாகவே எழுதுகிறேன்.

இதைப்பற்றிய மயிர் பிளக்கிற விவாதமெதையும் நான் செய்ய விரும்பவில்லை நண்பரே. இது உங்களுக்கு பயனளிக்காவிட்டால் ஒதுக்கி விடுங்கள்.

G.Ragavan said...

நண்பரே!

கல்லை வணங்குவதல்ல எங்கள் வழக்கம். கல்லில் கடவுளை வணங்குவதுதான். அதுதான் உண்மையா எங்கள் தத்துவம்.

அச்சத்தினால் வணங்குவது இறைவணக்கமே ஆகாது. அன்பால் வணங்குவதுதான் இறைவணக்கம்.

அதைத்தான் கண்ணதாசன், கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் என்று எழுதியிருக்கின்றார்.

அன்புடன்,
கோ.இராகவன்