Monday, December 12, 2005

நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்-1

இந்நூல் உருவாகப் பேருதவியாக அமைந்தது எக்னோமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி (டிசம்பர் 16,1995) இதழில் ஃபிளேவியா அக்னஸ் எழுதிய "ஹிந்து மென், மோனோகாமி அண்டு யூனிபார்ம்சிவில் கோட்" என்ற கட்டுரையாகும். - பேராசிரியர் இ.அருட்செல்வன்

1. உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பு

சர்லா முத்கல் வழக்கில் உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியதை அனைவரும் அறிவர்.

ஏற்கனவே திருமணம் செய்திருந்த இந்து ஒருவர் இஸ்லாத்தைத் தழுவுகிறார். பிறகு இன்னொரு திருமணம் செய்கிறார்.

இவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இவரது இரண்டாவது திருமணம் செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான குல்தீப் சிங்கும், சஹாயும் தீர்ப்பு வழங்கினார்கள். முதல் மனைவியுடன் திருமணப் பந்தம் இருக்கையிலே இவர் இஸ்லாத்தைத் தழுவி இரண்டாம் திருமணம் செய்து கொண்டது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 494-வது பிரிவின் படி குற்றமாகும் என்று இரு நீதிபதிகளும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர். (494வது பிரிவு இக்குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கின்றது).

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாண்புமிகு நீதிபதிகள் அனுமானங்களின் அடிப்படையிலேயே இத்தீர்ப்பை அளித்துள்ளனர்.

அந்த அனுமானங்கள் வருமாறு:

1) இந்துத் திருமணங்கள் இயற்கையாகவே ஒரு தாரத்தை மட்டும் அனுமதிக்கக் கூடியவை.

2) இந்துவாக இருப்பவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்யக் கூடாது என்ற கோட்பாட்டை நீதிமன்றங்கள் தொடர்ந்து அங்கீகரித்து வந்துள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்த ஆடவர்களைத் தண்டித்தும் வந்துள்ளன.

3) இந்துவாக இருப்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்ய விரும்பினால் அதற்காக ஒரே வழி இஸ்லாத்திற்கு மதம் மாறுவது தான் என்று இஸ்லாம் பகிரங்கமாக இந்துக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

4) இரண்டாம் திருமணம் செய்யும் நோக்கத்தில் முஸ்லிமாக மதம் மாறும் குறுக்கு வழியை அடைக்க பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவே இந்துப் பெண்களின் துயரத்தைத் துடைக்கும்.

இந்த அனுமானங்களின் அடிப்படையிலேயே மாண்புமிகு நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த அனுமானங்கள் சரியானவைதாமா? பலதாரமணம் செய்ய விரும்பக்கூடிய இந்துவுக்கு உள்ள ஒரேவழி இஸ்லாம்தானா? பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், இந்த வழி அடைக்கப்பட்டுவிடுமா? - இவற்றை ஆராய்வதே இந்தச் சிறு நூலின் நோக்கமாகும்.

இந்துத் திருமணங்கள் இயற்கையாகவே ஒரு தாரத்தை மட்டுமே அனுமதிக்கக் கூடியவை என்பது நீதிபதிகளின் முதல் வாதம். இந்துக்கள் போற்றும் கிருஷ்ணர், முருகன், தசரதன் போன்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ததாக இந்துமதப் புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தின் எந்த வேதத்திலும், புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் இந்து ஆண்கள் ஒரே ஒரு திருமணத்தைத்தான் செய்யவேண்டும். ஒன்றுக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்று கூறப்படவே இல்லை.

இந்து மதம் எப்போது தோன்றியது என்று கூற முடியாத அளவுக்கு புராதனமானது என்று இந்துக்கள் கூறுவர். இந்து மதம் தோன்றியதிலிருந்து கி.பி. 1955-ஆம் ஆண்டு வரை பலதாரமணம் செய்யும் வழக்கம் சர்வசாதாரணமாக இந்துக்களிடம் இருந்து வந்தது. அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்தது.

ஆகவே, இந்துத் திருமணங்கள் இயற்கையாகவே ஒருதாரத்தை மட்டுமே அனுமதிக்கின்றது என்ற நீதிபதிகளின் வாதம் தவறானதாகும். இந்து மதம் 1955-இல் தான் தோன்றியது என்று நீதிபதிகள் கூறினால்தான் அவர்களின் வாதம் சரியானதாக இருக்க முடியும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் பலதாரமணத்தைத் தடை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது எனில், இந்துமதம் இயற்கையாகவே ஒருதாரத்தை மட்டுமே அனுமதிக்கின்றது என்ற வாதத்தில் எள்முனையளவு கூட உண்மையில்லை என்பது தெளிவாகின்றது.

1955-இல் நிறைவேற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டம்தான் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்வதைத் தடுத்தது. நியாயமான பொது சிவில் சட்டத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் மாபெரும் முயற்சி என்று இச்சட்டத்தை நீதிபதி குல்தீப் சிங் இத்தீர்ப்பினிடையே வர்ணித்துள்ளார்.

நீதிபதி குல்தீப் சிங் மட்டுமல்லாது இன்னும் பலர் 1955-இல் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தை நாகரீகமானது. முன்னேற்றத்திற்கு வழிவகுப்பது. பெண்களுக்கு ஆதரவானது என்றெல்லாம் போற்றுகின்றனர்.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் ஏற்பட்ட விளைவுகள் யாவை?

சமத்துவத்தை நோக்கி (TOWARDS EQUALITY) என்று தலைப்பிட்டு 1974-இல் வெளியான ஒரு புள்ளிவிபர அறிக்கை இந்த வினாவுக்கு விடையளிக்கின்றது. பெண்களின் நிலையை ஆய்வு செய்த குழு ஒன்று அந்த அறிக்கையை வெளியிட்டது. 1951 முதல் 1960 வரை இந்து-முஸ்லிம் மற்றும் பழங்குடி மக்களிடையே பலதார மணம் புரிந்தோர்கள் பற்றிய விபரங்கள் அந்த அறிக்கையில் தரப்பட்டிருந்தன. அந்தப் புள்ளிவிபரம் இதுதான்.

இந்து 5.06
முஸ்லிம் 4.31
பழங்குடியினர் 17.98

பலதாரத் திருமணத்தைத் தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் இந்துக்களிடையே இந்த வழக்கம் குறையவில்லை என்பதை இந்தப் புள்ளிவிபரம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பழங்குடியினரும் இந்துக்கள்தாம். அவர்கள் தனி மதத்தவர்களல்லர் என்பதைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் முஸ்லிம்களை விட இந்துக்கள் தாம் அதிக அளவில் பலதாரமணம் செய்யதுள்ளனர் என்பது தெரியவரும். பலதாரமணம் செய்ய அனுமதிக்கப்பட்ட முஸ்லிம்களைவிட அதற்குத் தடைவிதிக்கப்பட்ட இந்துக்கள் அதிக அளவில் பலதாரமணம் செய்து கொண்டனர் என்பதால், இந்தச் சட்டத்தினால் எந்தப் பயனும் விளையவில்லை என்பது தெளிவு.

பழங்கால இந்துச் சட்டமும், வழக்கங்களும் பலதாரமணத்தை அங்கீகரித்தன இரண்டாம் மனைவியர் பராமரிப்புச் செலவையும், இருப்பிடத்தையும் பெற உரிமை பெற்றிருந்தார்கள். ஆனால், 1955-இல் இயற்றப்பட்ட இந்துத் திருமணச்சட்டம், இந்துக்களால் இரண்டாவதாக மணக்கப்பட்ட பெண்களின் நிலையை மோசமாக்கிவிட்டது. அவர்கள் பராமரிப்புச் செலவு பெறமுடியாது. சட்டபூர்வமான மனைவி என்ற அந்தஸ்தும் பெற முடியாது.

இதுமட்டுமின்றி தெளிவற்ற இந்துத் திருமணச் சட்டத்தினால் பலதாரமணம் செய்து கொண்ட பலர் தண்டனை அனுபவிப்பதிலிருந்து விதிவிலக்குப் பெற்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்தும் அவர்கள் விலக்குப் பெற்றனர்.

நீதிமன்றத் தீர்ப்புகள் பல, பலதாரமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு ஆதரவாகவும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படும் பெண்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளன. இந்துவாக இருப்பவர் இரண்டாவது திருமணம் புரிவதை தடுத்ததோடு மட்டுமின்றி அத்தகையோரை நீதிமன்றங்கள் தண்டித்திருக்கின்றன என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இரண்டாவது அனுமானம் தவறானது என்பதைச் சந்தேகமின்றி அந்தத் தீர்ப்புகள் நிரூபிக்கின்றன.
இது பற்றி அடுத்து ஆராய்வோம்.

(தொடரும்..)

- பேராசிரியர் இ.அருட்செல்வன்
நன்றி: நீதிமன்றங்களின் பார்வையில் பலதாரமணம்

_______________________

புத்தொளி வெளியீட்டகம்
முதல் பதிப்பு: ஜுன் 1997

புத்தகம் கிடைக்கும் இடம்:
ஸாஜிதா புக் சென்டர்
204 தம்புச் செட்டித் தெரு, 2-வது மாடி
சென்னை - 600 001

No comments: