Monday, August 09, 2004

அறிவு ஜீவிகளும் மரண தண்டனையும்

நெஞ்சை உலுக்கும் மரணங்கள் தொடர்கின்றன. மரண தண்டனை மட்டும்... அரிதாக, மிக அரிதாக - அதுவும் எதிர்ப்புக் குரல்களுக்கிடையில்.
14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்ட தனஞ்சய சாட்டர்ஜி என்ற கோல்கத்தா கொடியவனுக்கு, மரண தண்டைனை நீக்க சொல்லி வக்காலத்து வாங்குவது அறிவுஜீவிகளுக்கு பொருந்தாத செயலாகும்.

ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் அறிவுஜீவிகளும்?! தனஞ்சயவுக்கு மரண தண்டனை அளிப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். மகசேசே விருது பெற்ற எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி, இயக்குநர் மிருணாள் சென், நடிகையும் இயக்குநருமான அபர்ணா சென் உள்ளிட்ட மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற அறிவுஜீவிகள் பலர், மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது என்ற கோஷத்துடன் தனஞ்சயவுக்கு அளிக்கப்பட்ட து}க்குத் தண்டனைக்கு எதிராக உரக்கப் பேசியிருக்கிறார்கள்.

தனது மகள் ஒரு கொடியவனால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருந்தால், கொலையாளி மன்னிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுப்பார்களா? தனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயமா?

இவ்விஷயத்தில் இஸ்லாம் அழகியதொரு தீர்வை தருகிறது.

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது ................இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 2:178)

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:179)

1) கொலை செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், கொலை செய்யப்பட்டவனின் வாரிசு நினைத்தால் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக்கொண்டு அல்லது எதுவும் பெறாமல் கொலை செய்தவனை மன்னிக்கலாம். (இஸ்லாமிய குற்றவில் சட்டத்தில் மத தலைவரோ, நாட்டின் அரசரோ அல்லது குடியரசு தலைவரோ தலையிட்டு குற்றவாளியை மன்னிக்க இயலாது - பாதிக்கப்பட்டது அவரது வாரிசாக இருந்தாலே தவிர).

2) கொலையாளிக்கு மட்டும் மரண தண்டனையே தவிர அவனின் குடும்பங்களை கொலைசெய்து நாசப்படுத்துவது போன்ற வரம்பு மீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

3) கொலையாளிக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் அதனை பார்க்கும் மற்ற மக்களுக்கு நாம் இப்படி செய்தால் நமக்கும் இதே கதிதான் என்ற அச்சஉணர்வை ஏற்படுத்தி குற்றங்கள் பெருகாமல் தடுக்கிறது.


கொலைக்கு கொலை என்பதை பலர் வரட்டுகவுரவத்தால் மறுக்கிறார்கள். ஆனால் தன் உறவினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தன் கண்ணுக்கெதிரே ஒரு அநியாயம் நடந்தால் அது லஞ்சமாக இருந்தால் கூட அவனை கொலை செய்யவேண்டும் என்று குதிப்பார்கள்.

'இந்தியன்' என்ற சினிமா கதையை அதிகமானோர் விரும்பினார்கள். விரும்பியதற்கு காரணம், மாயா மச்சிந்தா மச்சம் பார்க்க வந்தீரா? அல்லது டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா? போன்ற கவர்ச்சி பாடல் காட்சிகளுக்காக அல்ல. உயிரை துச்சமாக மதித்து வெள்ளையர்களை விரட்டிய ஒரு விடுதலை வீரர், (லஞ்ச லாவன்யங்களுக்கு பெயர் போன நிர்வாக) கொள்ளையர்கள் கையில் மாட்டிக்கொண்ட நாட்டை மீட்டெடுக்கும் கதை.

தான் கற்றிருந்த வர்மகலையை பிரயோகித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக (மகனுக்கும் மரண தண்டனை கொடுக்கும் தந்தையாக) வருகிறார் கமல் தாத்தா. கடைசியாக அவர்கொடுக்கும் மரணதண்டனையை இவ்வுலகம் முழுவதும் பார்க்கும்படி தொலைகாட்சியில் ஒளிப்பரப்பு செய்கிறார். பிறகு போலீஸ் கண்ணுக்கு மண்ணைத்து}வி தலைமறைவாகி தான் எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்க வருவேன் என்று சூழுரைக்கிறார்.

லஞ்சத்திற்கு பஞ்சமில்லாத இந்திய திருநாட்டில் இப்படிபட்ட 'இந்தியன்' தாத்தாக்கள் நாடுமுழுக்க தீமைகள் நடக்கும் போது தட்டிக்கேட்க வரவேண்டும் என்று அந்த படத்தை பார்க்கும் இதயங்கள் படபடக்கும்.

'இந்தியன்' படம் சொல்லும் நியாயத்தை ஏற்றுக்கொண்ட பல உள்ளங்கள், இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தை வெறுப்பது ஏனோ தெரியவில்லை?...

எழுத்தாளர் குறிப்பு:
மந்திரம் தந்திரம் கற்று சமுதாயத்தை ஏமாற்றியவர்கள், தான் இஸ்லாத்தை ஏற்றபிறகு மந்திர தந்திரமெல்லாம் டெக்னிக்ஸ்தான் நைனா என்று சமுதாயத்துக்கு பாடம் நடத்துவார்கள். அதேபோல படம் பார்ப்பது தவறு என்று உணர்வதற்கு முன் (கிட்டதட்ட ஏழு வருடத்திற்கு முன்பு) பார்த்த ஒரு திரைப்படத்தின் மூலம் சில பாடங்களை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன் தவிர உங்களை படம் பார்க்க சொல்லவில்லை.

1 comment:

Anonymous said...

இனிய அபூ உமர்,

"கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்குக் கிடையாது. அரசுக்கும் கிடையாது" = காந்தியடிகள்.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பை எழுதும்போது, நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் காந்தியடிகளின் மேற்சொன்ன வாக்கியத்தை எடுத்துக்காட்டி மரணதண்டனை ஒழிக்கவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

எழுபது நாடுகளில் மரணதண்டனை முற்றுமாக ஒழிக்கப்ட்டுள்ளது. பதினான்கு நாடுகளில் போர்க்குற்றங்கள் தவிர மற்ற குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதில்லை. சட்டத்தில் வெறுமனே மரணதண்டனை வழங்குவதற்கான சாத்தியங்களைவைத்துக்கொண்டு, மரணதண்டனை வழங்காமல் இருப்பதாக இருபது நாடுகள் உறுதிமொழி எடுத்துள்ளன.

இவற்றால் நன்றாக விளங்கிக்கொள்ளக்கூடிய விஷயம் என்னவென்றால் மரணதண்டனை என்பதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை நோக்கியே அனைத்து நாடுகளின் சட்டங்களும் செல்கின்றன.

மரணதண்டனையை ஒழிப்பதற்கான முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது, 'மனித உரிமை மறுக்கப்படுகிறது' என்பது. அடுத்த வாதம், குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்பது.

எந்தத் தண்டனையும் மூன்று அடிப்படைக் காரணங்களுக்குள் இருக்கும்.
1.திருத்துவது
2.பழி தீர்ப்பது
3.தயக்கப்படுத்துவது.

இதற்கும் மேல் ஒன்றை நாம் சொல்லவேண்டுமென்றால், 'மற்றவர்களுக்கு நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்தி குற்றம் செய்கின்ற எண்ணத்தை அவர்கள் மனதிலிருந்து நீக்குவது'.

மரணதண்டனையால் விளையக்கூடிய பெரிய பலன் இதுவாகத்தான் இருக்கமுடியும். இந்த அச்ச உணர்வு ஒரு மனிதனைக் குற்றம் செய்வதிலிருந்து தப்புவிக்குமென்றால், மரணதண்டனை அவசியமே.

ஒருபக்கம் சிலர் மரணதண்டனையை எதிர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கையில், தேசிய கட்சித்தலைவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் ஒருவர் கற்பழிப்புக் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கவெண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவரை மனோரீதியாக மிகவும் வேதனைக்குள்ளாக்குவது பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவருக்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரமின்மையுமே. இதனால்தான் நமது சமூகத்தில் பல பாலியல் வன்முறைக் குற்றங்கள் நீதிமன்றம் வரை செல்வதில்லை. வழக்கு நீதிமன்றம் செல்லாததால் சில குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புகிறார்கள். நீதிமன்றம் செல்லும் சில வழக்குகளிலும் குற்றத்தை நிரூபிப்பதென்பது பிரம்மப்பிரயத்தனமாகி, சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கு அளிக்கப்பட்டு சில குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புகிறார்கள்.

நீதிமன்றம் வரை இழுக்கப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படும் குற்றவாளிகளும் கருணை காட்டப்படுவதால் அதிகபட்ச தண்டனையிலிருந்து தப்புகிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் குற்றவாளி அதிகபட்ச தண்டனையிலிருந்து தப்பிக்க எதாவது ஓட்டை இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

அபூ உமர், நீங்கள் சொல்லும் வழக்கில் குற்றவாளிக்குக் கிடைத்திருக்கும் அதிகபட்ச தண்டனை சிலரால் எதிர்க்கப்பட்டாலுமே, தண்டனை தரப்படும் என்று நம்புவோம்.

அன்புடன்
அபூ ·பாத்திமா