Thursday, January 04, 2007

சதாமின் கடைசி நிமிடங்களும் பா.ராவும்

குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன், சதாமின் கடைசி நேரம் பற்றியும் இராக்கின் முக்கிய சம்பவங்கள் மற்றும் மத்திய கிழக்கின் அடுத்த கட்ட பிரதிபலிப்பு பற்றியும் எழுதியிருந்தார்.

பொதுவாக, பா.ராகவனின் ஆழமான எழுத்துக்கள் எல்லோராலும் விரும்பப் படுபவை. அவரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்து, அவரது நிலமெல்லாம் தொடருக்கு பிரத்யேகப் பதிவை இட்டேன். ஆனால், சதாமைப் பற்றிய பா.ராவின் கட்டுரை தவறான ஒரு தகவலுடன் ஆரம்பிக்கிறது:

//உயிர் விடும் கணத்தில், அவர் தாம் இருபத்து நான்கு வருடங்கள் ஆண்ட இராக்கை வாழ்த்தியிருக்கலாம். அல்லது இறைவன் பெயரை உச்சரித்திருக்கலாம். இரண்டும் இல்லாமல், வாழ்நாளெல்லாம் பரம விரோதியாகவே கருதிய ஷியா இனத்தைச் சேர்ந்த முக்தாதா அல் சத்ர் என்ற முப்பத்து மூன்று வயது குட்டிப் போராளியின் பெயரைச் சொல்லிவிட்டு உயிரைவிட்டது விநோத மர்மம்தான். ஒரு வேளை எப்போதும் அவர் எதிரிகளை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்பதன் அடையாளம்தான் அதுவோ, என்னவோ! - பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில்//


"முக்ததா, முக்ததா, முக்ததா" என்று மும்முறை (உற்சாகக் குரலில்) கூவுபவர், தண்டனைக் காட்சியைப் பார்வையிட அனுமதி பெற்றிருந்த ஷியாக்களுள் ஒருவர்.

அரபி தெரியாததால் அங்கு நடைபெற்ற உரையாடல்களை, பா.ரா அவர்களால் ஊகிக்க முடியாமல் போய்விட்டது துரதிஷ்டவசமானதாகும். ஒருவேளை சி.என்.என் தொலைக்காட்சி சதாமின் கடைசி வார்த்தைகள் என்று தவறாகக் குறிப்பிட்டதை பா.ரா. நம்பி விட்டார் போலும். (சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வெளிவந்து விட்டது).

அமெரிக்கா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அவரது மகன்கள் "உதை" மற்றும் "குஸை" போன்று சதாமும் வீரமரணம் அடைவார் என்றுதான் அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ பதுங்குக்குழிக்குள் இருந்து எலிபோல் பிடித்துக் கொண்டு வரப்பட்டது அவரது வீரத்தை மரணிக்கச் செய்திருந்தது. அதனால்தான் என்னவோ, பிடித்துக் கொண்டுவரப்பட்டது சதாம் இல்லை என்ற புரளி கற்பனை ஆதாரங்களுடன் பரப்பப்பட்டு வந்தது.

அந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாமை "அசத்" (சிங்கம்) என்று போற்றுவதற்குக் காரணமாக அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அவரது கடைசி நிமிடங்கள் அமைந்துவிட்டன‌.

கடைசி நேரத்தைப் பதிவு செய்த கைத்தொலைபேசிகாரர் எந்த எண்ணத்தில் இதனைப் பதிவு செய்தாரோ தெரியாது. ஆனால் அந்த வீடியோ பதிவு பல புரட்சிகளுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமையவிருக்கிறது என்பதுதான் பா.ரா தொடங்கி பலரின் யூகமாகும்.

அதிபராக இருந்த சதாம் தவறு செய்யாதவரல்லர். அமெரிக்காவின் நீதிமன்ற நாடகத்தில் குர்ஆன் பிரதியுடன் காட்சியளித்த‌ அதே சதாம்தான், முன்பு ஈராக்கின் வீதிகளில் தனது சிலையை வைத்திருந்தார். அவரது சிலையை இராணுவ டாங்கிகளில் கட்டி இழுத்து உடைத்த அந்த விநோதமான சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்த யாராலும் மறக்கவியலாது.

இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், இங்கிலாந்தும் என்ன செய்துக்கொண்டிருக்கின்றதோ அதற்கு ஒரு படி கீழாகத்தான் சதாமின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதற்கெல்லாம் காரணமான அதே அமெரிக்கா முன்னொரு காலத்தில் சதாமின் பின்னணியில் இருந்தது மறைக்க முடியாத உண்மை.

He "was courteous, as he always had been, to his U.S. military police guards," Maj. Gen. William B. Caldwell said. "He spoke very well to our military police, as he always had. And when getting off there at the prison site, he said farewell to his interpreter. He thanked the military police squad, the lieutenant, the squad leader, the medical doctor we had present, and the colonel that was on site."

Source : Yahoo news


தூக்கிலிடப்பட்ட காட்சியின் அலைபேசி பதிவு (கூகில் வீடியோ)

வீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று கருப்புத் துணி தவிர்த்து, சற்றும் பதட்டப்படாமல், பார்வையாளர்களாகச் சென்றிருந்த ஷியாக்கள் எழுப்பிய "முக்ததா முக்ததா" என்ற பின்னிணி சப்தத்துடன் அவருக்கு முன்னே வெளிப்படுத்திய கிண்டல்களையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் "ஹிய ஹாய் அல் மர்ஜலா" ("இதுதான் உங்கள் வீரமா?") என்று ஷியாக்களை நோக்கி வெளிப்படுத்தினார்.

இறுதி நேரம் நெருங்கும்போது "அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹ்; வ‌அஷ்ஹது அன்ன‌ முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" என்று இஸ்லாத்தின் கொள்கை வரியை முதன்முறை முழுதுமாக முழங்கினார். இரண்டாவது முழக்கத்தின் "முஹம்மத்" என்ற வார்த்தை வரை வந்தபோது தூக்கு மேடை விசை அழுத்தப்படவே, அவர் நின்ற தட்டு மிக சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட்டு கொலைக் கயிறு 69 வயது திடமான வீரமிக்க முன்னாள் அதிபரின் கழுத்தில் இறுகி உடலைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டது. அந்தக் கயிறு எதிர்பார்த்ததுபோல் அவரது உயிர் மேலெழுந்துவிட்டது.

மேலெழுந்தது சதாமின் உயிர் மட்டும் அல்ல. அவரது புகழும்தான். ஆமாம், மத்திய கிழக்குத் தலைவர்கள் தொடங்கி கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் மக்கள் மனங்களில் மரணத்தை காதலித்த மாவீரராக உயர்ந்து நிற்கிறார் சதாம்.

- Abu Umar
Jeddah, KSA