Tuesday, February 21, 2006

இந்தியாவில் இஸ்லாம்-18

தொடர்-18: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்...

Unfortunately the missing plates are the first and last plates of second grant. They are very important because the first plate contains the name the of sovereign who granted it and the time of the granting, and the last plate bears the signatures of witnesses in Pahlavi, Kuffic and Hebrew characters which talked the emergence of great scholars like Burneld, Harg, West and Gundert to decipher.

சாட்சி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள பர்னல், ஹாக், வெஸ்ட், குண்டர்ட் போன்ற பெரும் அறிஞர்கள் கடும் முயற்சிகள் செய்தனர் என்று கோபிநாத ராவ் கூறுகிறார். ஆனால் அவர்களால் இப்பெயர்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் சற்று முயன்றிருந்தால் இந்தப் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாட்சிப் பெயர்கள் முக்கியமல்ல என்ற குறுகிய நினைப்பில் முயற்சிகளைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரையில் இவ்வாய்ப்புக்கு அப்பெயர்கள் தான் மிகமுக்கியம்.

இந்த கடைசிச் செப்பேட்டில் சாட்சிகள் கையொப்பம் போட்ட மொழிகள் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு ஆகியவை. கூஃபி என்பது அரேபியாவிலுள்ள கூஃபா எறும் பகுதியில் அன்று நடைமுறையில் இருந்து வந்த அரபி மொழியின் வேறு ஒரு எழுத்து வடிவமாகும். ஈப்ரு யூதர்களுடைய மொழி யூத (இஸ்ரேல்) நாட்டு மொழி.

"அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் காத்தே 'கூஃபி' எனப்படும் கூஃபா எழுத்துக்கள் (லிபி) தான் புழக்கத்தில் இருந்தன. (M.R.M.அப்துல் ரஹீம் - இஸ்லாமிய கலைக் களஞ்சியம், தொகுதி 3) முதல்முதலாக கூஃபா லிபியில் திருக்குர்ஆன் எழுதப்பட்டதாக வரலாற்று தந்தையென அறியப்படுகின்ற இப்னு கல்தூன் தம்முடைய உலகப் புகழ்பெற்ற 'முகத்திமா' எனும் நூலில் குறிப்பிடுகிறார். கூஃபி லிபியில் சாட்சிகள் கையொப்பம் போட்டிருப்பதாக டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுவதிலிருந்து கையொப்பம் போட்டவர்கள் முஸ்லிம்கள் என்று உறுதியாகின்றது. தரீசா பள்ளி செப்பேட்டில் கூஃபி லிபியில் (அரபி மொழியில்) கை ஒப்பம் போட்டவர்களுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. மைமூன் இப்னு இப்ராஹீம்
2. முஹம்மது இப்னு மானி
3. ஸால்க் இப்னு அலி
4. உதுமான் இப்னு அல்மர்சிபான்
5. முஹம்மது இப்னு யஹியா
6. அம்ரு இப்னு இப்ராஹீம்
7. இப்ராஹீம் இப்னு அல்தே
8. பஹர் இப்னு மன்சூர்
9. அல்காசிம் இப்னு ஹாமித்
10. அல்மன்சூர் இப்னு ஈசா
11. இஸ்மாயில் இப்னு யாகூப்

டாக்டர் வி.ஏ.கபீரின் 'Muslim Momument in Kerala' எனும் நூலில் 64வது பக்கத்தில் 1 வது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தவிர, Roland E.Miller-ருடைய Mappila Muslims of Kerala எனும் ஆய்வு நூலிலும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. (Revised Edition 1992, Published by Orient Longman Ltd. page 43)

கிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட செப்பேட்டில் முஸ்லிம்களையும் யூதர்களையும் சாட்சிகளாக்கியுள்ளனர். ஆனால் சமீப காலம் வரை இந்த செப்பேட்டைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் யாருமே முஸ்லிம்கள் கையொப்பம் போட்டிருப்பதாக எங்கும் குறிப்பிடவே இல்லை. காரணம், கூஃபி லிபி பிற்காலத்தில் நடைமுறையில் இல்லாததால் அவர்களால் வாசிக்க முடியாமல் இப்பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்.

கி.பி.1750களில் இவ்விடம் விஜயம் செய்த பிரெஞ்சு நாட்டு பயணியான ஆன்கொட்டில் டூ பேரான் (Anquetil du Perron) இந்த செப்பேட்டை ஆய்வு செய்யும் வகைக்காக, பொன்னானி மகுதூம், கொயிலாண்டி ஆகியோரிடம் இதன் நகல் இருக்குமென்ற நம்பிக்கையில் அவர்களை அணுகியதாக Walter J. Fischel கூறுகிறார். ஆனால் அந்த செப்பேட்டை (மூல செப்பேடு) பற்றி எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த செம்பேடுகளை ஆய்வு செய்த எவரும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றியோ, அரேபியர்களைப் பற்றியோ குறிப்பிடாமலிருந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 13 - 19, 2006

Sunday, February 19, 2006

இந்தியாவில் இஸ்லாம்-17

தொடர்-17: தோப்பில் முஹம்மது மீரான்

செப்பேடு தரும் செய்தி

முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள 'தரீசாப் பள்ளி' என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.

இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய 'ஈசோ சபீர்' என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.

தென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலாற்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.

தரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.

இந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட 'ஸ்தாணு ரவி வர்ம்மா' என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.

ஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.

கொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 06 - 12, 2006

Saturday, February 18, 2006

படம் பார்த்து பகை கொள் (cartoon issue)

ஓவிய தூரிகையால் பற்றவைக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடைதான் கடந்த சில வாரங்களாக நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்.

திருக்குர்ஆனும் முஹம்மது நபியின் வாழ்க்கையும் (The Quran and the prophet Muhammad's life) என்ற குழந்தைகளுக்கான புத்தகம் எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகம்மது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் முன்னணி பத்திரிக்கையான Jyllands-Posten டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் (to draw Muhammad as they see him) என்று கூறியிருக்கிறது.

செப்டம்பர் 30, 2005ல் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்ற வாசகம் எழுதிய திரி கொளுத்தப்பட்ட வெடிகுண்டுத் தலைப்பாகையை அணிந்தவர் போல தொடங்கி 12 கார்ட்டூன்களை இந்த பத்திரிக்கை வெளியிட்டது. இதனால் டென்மார்க் முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு ஆளானார்கள். பிறகு உலகின் பல பகுதியிலிருந்து இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இருந்தாலும் இவையனைத்தும் கருத்துச் சுதந்திரம் என்ற வார்த்தையை வைத்து அந்தப் பத்திரிக்கை நிறுவனம் தனது காதை அடைத்துக்கொண்டது. இதனைப்பார்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற இஸ்லாமிய எதிர்ப்பு பத்திரிக்கைகள் ஜனவரியில் அதனை மறு பதிப்பு செய்தன. மறுபதிப்பு செய்த இதழ்களில் ஒன்றான நார்வே கிறிஸ்டியன், வாசகர்களிடமிருந்து வரும் முஹம்மது நபி பற்றிய சிறந்த கார்ட்டூனுக்கு பரிசு என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் பிரதமர் ஆண்டர்ஸ் ஃபோக்ரஸ்முஸ்ஸென் இது கருத்துச் சுதந்திரம் பற்றிய விஷயம் எனவும் இதில் தங்களால் தலையிட முடியாது என்று சொன்னதோடு உலகின் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் நான்கு நாடுகளில் டென்மார்க்-கும் ஒரு நாடு என்பதாக பீற்றிக்கொண்ட நேரத்தில், விஷயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

கதை சொல்வதற்கு கார்ட்டூன் வரைந்ததுபோலவும் முஸ்லிம்கள் முஹம்மது நபியின் கார்ட்டூன் வரைந்ததற்காக ஏன் கோபப்படவேண்டும் என்ற கேள்வி கேட்டு பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் மீடியாவை முடுக்கிவிட்டுள்ளார்கள். இவர்கள் என்ன கதை சொல்ல விரும்புகிறார்கள் என்பதை வெடிகுண்டு தலைப்பாகை கார்ட்டூனைப் பார்த்தாலேயே எவருக்கும் எளிதில் புரியும்.

12 கார்ட்டூன்களை தவிர இதே சூழ்நிலையில் வெளிடப்பட்ட வேறு ஒரு கார்ட்டூனையும் இங்கு உதாரணத்திற்கு சொல்லலாம். "முஸ்லிம்கள் தொழவில்லை. தலையை மண்ணில் புதைக்க முயலுகிறார்கள்" என்ற பொருள்பட உள்ள கார்ட்டூன், இவர்களின் நெஞ்சில் உள்ள காழ்ப்புணர்வை அறிந்துக்கொள்ள உதவுகிறது.

முஹம்மது நபியைப்பற்றி கேலிச்சித்திரம் வெளியாக்கிய பத்திரிக்கை நிர்வாகம் முன்பு ஏசு கிருஸ்து பற்றி கேலிச் சித்திரம் வெளியிட மறுத்த செய்தி இப்போது வெளிவந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அல்-ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் தலைமை நிலையத்தை கப்பற்படையிலிருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆக மேற்கத்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தின் லட்சணம் இதுதான் போலும்.

அரபு நாடுகளில் பெட்ரோலை ஏற்றுமதி செய்து எவ்வாறு செல்வம் கொழிக்கிறதோ, அதே போல பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் செல்வம் கொழிக்கும் டென்மார்க்கின் மடியில் அடிவிழுந்துள்ளது. டென்மார்க் பொருட்களை வாங்க மாட்டோம் என்ற வகையில் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிக்கவே, டென்மார்க் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் தற்போது நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.

டென்மார்க், உலக வர்த்தக சபையில் (WTO) சவுதிக்கு எதிராக முறையிடப்போவதாக மிரட்டவே, டென்மார்க் பொருள் புறக்கணிப்பிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சவுதி அரசாங்கம் கூறிவிட்டது. கடந்த டிசம்பர் 11, 2005-ல் உலக வர்த்தக சபையில் சவுதி அரேபியா முழுமையான உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் வாழும் பல கோடி முஸ்லிம்கள் எதிர்ப்பு பேரணி தொடங்கவே, நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கடைசியாக லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள டென்மார்க் தூதரகத்தை ஆர்பாட்டக்காரர்கள் எரிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

'ஜைலாண்ட்ஸ் போஸ்டன்' நாளிதழின் முதன்மை ஆசிரியர், தங்களின் தவறுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டாலும், குறிப்பிட்ட கேலிச்சித்திரங்களை இணையத்திலும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகள் ஒன்றும் புதிது அல்ல. முன்பு சல்மான் ருஷ்டி சாத்தானின் வசனங்கள் என்ற நாவல் வெளியிட்டு முஹம்மது நபி மற்றும் அவர்களின் மனைவியரை கேவலமாக எழுதியதால், ஈரான் அரசாங்கம் மரண தண்டணை விதித்தபோது, பல மில்லியன் டாலர்களை செலவழித்து சல்மான் ருஷ்டிக்கு UK பாதுகாப்பு வழங்கியது.

இப்பிரச்னை இவ்வளவு பூதாகரமாகும் என்று ஐரோப்பா எதிர்பார்க்கவில்லை. மறுபதிப்பு செய்த சில நாளிதழ்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சமரசத்திற்காக ஐரோப்பிய ஒறுங்கிணைப்பு (E.U) அரபுநாடுகளுக்கு தனது தூதரை அனுப்பி வைத்துள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட இந்த கார்ட்டூன்களால் டென்மார்க் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல், லெபனான் தூதரக எரிப்பு என்று தொடங்கி பாகிஸ்தானில் கே.எஃபிஸியிலிருந்து பிட்ஸா ஹட் வரை பற்றி எரிவதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. ஈராக் விவகாரத்தால் மேற்குலகிற்கும் அரபுலகிற்கும் ஏற்கனவே வெறுப்பு கனன்றுக் கொண்டிருக்கும் நிலையில், டென்மார்க் பத்திரிக்கையால் பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்திற்கெதிரான செயல்களுக்கு எதிர்ப்பைப் பதியவைக்கும் வகையில் பேரணி நடத்துவது ஜனநாயக உரிமை என்றாலும், பொருட்களை நாசப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.

முஹம்மது நபி பற்றி அவதூறாக படம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் தலையை கொண்டு வருபவருக்கு 51 கோடி ரூபாயும் தனது எடைக்கு நிகராக தங்கமும் பரிசு என்று உத்திர பிரதேச மாநில ஹஜ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது யாகூப் கூறியுள்ளாராம். இவருக்கு மறைந்த ஈரான் இமாம் "கொமைனி" போல் பிரபலமடைய ஆசை வந்துவிட்டதோ என்னவோ.

பரிசு கொடுக்க இவருக்கு ஏது இவ்வளவு பணம், கார்ட்டூனிஸ்ட் ஒருவர் அல்ல பலர், குற்றவாளி கார்ட்டூன் வரைந்தவரா, வெளியிட்டவரா?, இவர்தான் அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பாளரா? போன்ற கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம். (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!).

"படம் பார்த்து கதைச் சொல்"வதற்காக வரையப்பட்ட கார்ட்டூன்கள் அல்ல இவை. "படம் பார்த்து பகை கொள்"வதற்காக வரையப்பட்டவை என்பதே உண்மை.

Related and ref. news links:
http://porukki.weblogs.us/archives/4
http://thamizhsasi.blogspot.com/2006/02/blog-post_05.html
http://thoughtsintamil.blogspot.com/2006/02/blog-post_07.html
http://athusari.blogspot.com/2006/02/blog-post.html
http://athusari.blogspot.com/2006/02/blog-post_03.html
மற்றும் தினமணி (18.02.2006)

Wednesday, February 15, 2006

இந்தியாவில் இஸ்லாம்-16

தொடர்-16: தோப்பில் முஹம்மது மீரான்

செம்பேடு தரும் சான்றுகள்..

சேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் 'இராஜசேகர வர்மா' என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள 'வாழப்பள்ளி' என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான 'தினாரை' சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். "திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது...." (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) "...மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் - ஐயன் காட்டு

மற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ" (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)

சேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு "வாழப்பள்ளி சாசனம்" என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான 'தினார்' இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான 'தினாரை' குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.

Those who stop the perpetually endowed bali ceremony (muttappali in the "Thiruvarruvay (temple) should pay to the King (or the god) a time of one hundred dinara...(T.A.S.Page 14 (English Translatio)

கோயிலில் வழக்கமாக நடைபெறும் 'பலி' எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) 'நூறு தினாரம்' பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.

".....both situated in Uragan and yielding one hundred and fifty tumi of paddy and three dinaras, two "velis' in the land in Ayyankadu Damodaran's"

கோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை தனியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் 'தினாரம்' இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.

8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.

சிலர் 'தினாரம்' என்ற தங்க நாணயத்தை 'தங்க நாணயம்' என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் 'தினாரம்' என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

தினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய 'முகத்திமா' என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் 'மாலிக் இபுனு தீனார்' என்றாகும்.

அரேபியர்களிடையே 'தினார்' என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் 'தினார்' என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.

'தினார்' என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான 'டாலர்' எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ்
டிசம்பர் 30, 2005 - ஜனவரி 5, 2006

Sunday, February 12, 2006

இந்தியாவில் இஸ்லாம்-15

தொடர்-15: தோப்பில் முஹம்மது மீரான்

மாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்

மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.

பிறகு, தமது சிறிய தகப்பனாரான மாலிக் இபுனு தீனாரை சந்திப்பதற்காக கொடுங்கல்லூருக்குச் சென்றார். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபின் தாம் கட்டிய அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழுகை நடத்தவும், முஸ்லிம் அல்லாதவரைக் கொண்டு நிரம்பிய ஒரு நாட்டில் இஸ்லாத்தின் கொள்கையைப் பரப்பியதில் பூரிப்படைந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மீண்டும் கொடுங்கல்லூருக்கு திரும்பி வந்தார்.

மாலிக் இபுனு தீனார், மாலிக் இபுனு ஹபீப், தோழர்கள், சேவகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். மாலிக் இபுனு தீனாரும் சில நண்பர்களும் நீங்கலாக, ஏனையோர்களை கொல்லத்தில் தங்கவைத்துவிட்டு இவர்கள் ஸஹருக்கு திரும்பிப் போனார்கள், ஸஹரில் வைத்து மறுமை எய்த மன்னரின் கபரிடத்தில் மாலிக் இபுனு தீனாரும் தோழர்களும் விஜயம் செய்தனர்.

அதற்குப் பின் குராசானுக்கு அவர்கள் சென்றனர். அங்குதான் மாலிக் இபுனு தீனார் மரணமடைந்தார். மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் சில பிள்ளைகளை கொல்லத்தில் தங்க வைத்துவிட்டு மனைவியுடன் கொடுங்கல்லூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவரும் மனைவியும் இறைவனடி சேர்ந்தனர். மலபாரில் முதல்முதலாக நடந்த இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தின் வரலாறு இதுவாகும்.

இது எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று குறிப்பாக சொல்வதற்கு தகுந்த தடயங்கள் ஏதுமில்லை. ஹிஜ்ரி 200ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்திருக்கலாமென்பது பெரும்பான்மையோரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட மன்னரின் இஸ்லாம் மத மாற்றம் நபிகள் நாயகத்தின்(ஸல்) காலத்தின் என்றும், 'சந்திரப்பிளப்பை' மன்னர் நேரடியாகப் பார்த்ததாகவும், அவர் திருத்தூதரிடத்தில் சென்றதாகவும், திருத்தூதரை சந்தித்த பின் ஒரு முஸ்லிம் குழுவுடன் மலபாருக்கு திரும்பிவரும் வழியில் ஸஹரில் வைத்து இறந்ததாகவும் நிலவிவரும் ஊகம் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.

இன்று மக்களிடையே பரவி இருப்பது போல் மன்னரின் கபர் ஸஹரில் அல்ல, ஏமன் நாட்டிலுள்ள 'ஸஃபரி'யிலாகும். 'சாமூரிக் கபர்' என்ற பேரில் அறியப்படும் அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அந்த நாட்டு மக்கள் கருதி வருகின்றனர்.

அரசர் காணாமல் போன நிகழ்ச்சி மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அதிகம் பிரச்சார மிகுந்த கதையாகும். மன்னர் மேல் உலகிற்கு (வான உலகிற்கு) ஏறிச் சென்றதாகவும், ஒரு நாள் இறங்கிவருவார் என்றும் ஹிந்துக்கள் நம்பிவருகின்றனர். இதன் அடிப்படையில் தான் கொடுங்கல்லூர் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில விசேஷ தினங்களில் மிதியடியும் தண்ணீரும் தயார் செய்து வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் ஆகும்.

(திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் "கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம்)

சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டது முதல் இஸ்லாம் இங்கு தோன்றியதாக சிலர் கூறிவருகின்றனர். இங்கு இஸ்லாம் தோன்றியதோடு சேரமான் பெருமாள் கதையை இணைத்து வருவதால் சிலர் பெருமாள் காலத்தையே குழப்பி விடுகின்றனர். ஏதோ ஒரு பெருமாள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த பெருமாளுடைய காலம் 10-வது நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் என்று குழப்புகின்றனர்.

இங்கு சேரமான் பெருமாள் நாயனாரோ, பள்ளி - பாண பெருமாள் என்ற பெளத்த அரசரோ இஸ்லாத்தைத் தழுவியதன் அடிப்படையில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியதில்லை, இவர்களுடைய மத மாற்றம் இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுடைய மத மாற்றம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய திரும்புமுனை என்ற அடிப்படையில் இதை ஆராய்வோமானால் ஆண்டு தேதிகளிலும் பெயர்களிலும் காணப்படும் குளறுபடிகளால் உண்மையை சரிவர ஆராய முடியாது. இவ்விரு பெருமாள்களைப் பற்றித் தனியாக ஆராய்வோம். தற்போது கையிலிருக்கும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றின் அடிப்படையில் உண்மையின் வேர்களைத் தேட வேண்டும்.

தொடரும்..

நன்றி: மக்கள் உரிமை - டிசம்பர், 23 - 29, 2005

Saturday, February 11, 2006

இந்தியாவில் இஸ்லாம்-14

தொடர்-14: தோப்பில் முஹம்மது மீரான்

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான "துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்" என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் "கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).

குடும்பங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு யூத, கிறிஸ்தவ குழுக்கள் மலபாரிலுள்ள துறைமுகமான கொடுங்கல்லூரில் கப்பலில் இறங்கினர். அன்றைய அரசர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு தங்குவதற்காக வீடும் தோட்டங்களும் தேவைக்கேற்ப வழங்கினர். அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கலாயினர்.

சில வருடங்களுக்குப் பின் அரேபியாவிலிருந்து முஸ்லிம்களான சில புகராக்கள், கண்ணியமிக்கவரும் அறிஞருமான ஒரு ஷெய்க்கின் தலைமையில் இலங்கைக்கு செல்லும் வழியில் கொடுங்கல்லூரில் இறங்கினார். புகராக்களின் வருகையை கேள்விப்பட்ட அரசர், அவர்கள் வருந்தினராக அரண்மனைக்கு வரவழைத்து வரவேற்று கொடுத்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய அரசர் ஆர்வம் காட்டினார்.

பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் போதனை செய்த தூய இஸ்லாத்தைப் பற்றியும் மானிட திறனுக்கப்பாற்பட்ட 'சந்திரப் பிளப்பை' பற்றியும் விளக்கமாக அரசருக்கு எடுத்துரைத்தார் ஷெய்க் அவர்கள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய வரலாற்றையும் அற்புத நிகழ்ச்சிகளையும் ஷெய்க்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரசருடைய இதயத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின் வாய்மை இடம்பெறவும் பெருமானார்(ஸல்) அவர்கள் மீது தனி அன்பும் மதிப்பும் ஏற்பட்டன. தூய இஸ்லாத்தின் பால் கவரப்பட்ட அரசர், அவர்களுடன் அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்தோடு இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் இங்கு இறங்க வேண்டுமென்று ஷெய்க்கிடத்திலும் குழுவினரிடத்திலும் வேண்டினார்.

ஷெய்க் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் மக்கள் தெரிய வேண்டாதென அரசர் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டார், ஷெய்க்கும் குழுவினரும் இலங்கை சென்று ஆதம் மலை தரிசனம் செய்துவிட்டு, வாக்களித்தபடி கொடுங்கல்லூரில் வந்து அரசரை சந்தித்தார்கள். மிக இரகசியமான முறையில் பயணத்திற்காக கப்பலும் ஏனைய தயாரிப்புகளும் ஏற்பாடு செய்ய அரசர் ஷெய்க்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகர்களின் ஏராளமான கப்பல்கள் வந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரை அணுகி தானும் தம்முடைய புகராக்குழுவும் அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள எண்ணுவதாகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர இயலுமா என்று ஷெய்க் கேட்டார். கப்பல் உரிமையாளர் அந்த வேண்டுதலை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

பயண நாள் நெருங்கிய போது குடும்பத்தினரோ, ஊழியர்களோ, அமைச்சர்களோ யாருமே ஏழு தினங்களுக்கு தம் அரண்மனைக்குள் நுழைவதையும் தம்மை சந்திப்பதையும் தடைசெய்து கட்டளைப் பிறப்பித்தார். தமது நாட்டை பல பகுதிகளாக பிரிவினை செய்து எல்லையை வரையறுத்து ஆட்சி முறைகளையும் சட்டங்களையும் வகுத்து ஒவ்வொரு பகுதி மீதான ஆட்சி உரிமையை அரச குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எழுதிவைத்தார். மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் மலபாரின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மலபாரின் எல்லைகள் தெற்கு கும்ஹுரியும் (கன்னியாகுமரி) வடக்கு காஞ்சன் கூத்தும் (காசர்கோடு) ஆகும்.

அரசு தொடர்பான பொறுப்புக்களை ஒப்படைத்த பின் அவர் ஷெய்க்குடனும் புகராக்குழுவுனனும் சேர்ந்து இரகசியமாக இரவே கப்பல் ஏறி பயணமானார். வழியில் ஃபந்தரீனாவில் (பந்தலாயனி) இறங்கி ஒருநாள் தங்கியபின் தஹ்ஃபத்தனுக்குப் (தர்ம்மடம்) போனார். அங்கு இறங்கி மூன்று தினங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். தஹ் ஃபத்தனிலிருந்து நேரடியாக ஹைருக்கே சென்றுவிட்டார். அரசரும் குழுவினரும் அங்கு இறங்கினர்.

அங்கு தங்கியிந்த சந்தர்ப்பத்தில், மலபாருக்கு வந்து இஸ்லாம் மார்க்க பிரச்சாரம் செய்யவும் பள்ளிவாசல்கள் கட்டவும் திட்டமிட்டிருந்த ஒரு குழு அவருடன் இணைந்தது. அவர்களுக்கு எல்லாவித உதவி ஒத்துழைப்புக்கள் நல்குவதாக அரசர் மகிழ்ச்சியுடன் வாக்களித்தார். அரசருடன் சேர்ந்து மலபாருக்கு வருவதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசர் நோய்வாய்ப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. நோய் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மலபார் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்களில் முக்கிய நபர்களை ஷரபு இப்னு மாலிக், அவருடைய தாயாரின் சகோதரன் மாலிக் இப்னு தீனார், அவருடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப் இப்னு மாலிக் ஆகியோரையும் பிரச்சாரக் குழுவிலுள்ள பிற உறுப்பினர்களையும் அழைத்து அரசர் பின்வருமாறு உபதேசம் செய்தார்: "இந்த நோய் மூலம் நான் இறந்துவிட்டாலும் உங்களுடைய மலபார் பயணத்தை தாமதப்படுத்தவோ, அதிலிருந்து பின்வாங்கவோ செய்யக் கூடாது."

"தங்கள் நாடு எங்கு இருக்கிறதென்றும், தங்கள் அதிகார எல்லை எவ்வளவு உண்டு என்றும் எங்களுக்குத் தெரியாது. அதனாலேயே நாங்கள் உங்களுடன் பயணம் செய்ய முடிவு எடுத்தோம்." அவர்களுடைய இந்த பதில் கேட்டபோது அரசர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் ஒப்படைத்தார். அக்கடிதத்தில் அவருடைய இராஜியத்தின் பெயரும், குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள அரசர்கள் ஆகியோரின் விவரங்கள் விளக்கப்பட்டிருந்தன.

கொடுங்கல்லூரிலோ, தஹ்ஃபத் தனிலோ (தர்ம்மடம்) ஃபந்தரீனா (பந்தலாயனி)விலோ, கவுல் (கொல்லம்)த்திலோ இறங்க வேண்டுமென்றும், தம்முடைய நோய் நிலைமைப் பற்றியோ, தாம் இறந்துவிட்டால் அந்த தகவலையோ மலபாரில் யாரிடத்தில் சொல்லவேண்டாமென்றும் அவர்களிடம் தனியாக நினைவுபடுத்தினார்.

அதிக நாட்கள் செல்லும் முன் அரசர் இம்மையை விட்டு பிரிந்தார். அல்லாஹ் அவர் மீது பெருவாரியாக அருளாசிகள் பொழியட்டும்!

சில வருடங்களக்குப் பின், கண்ணியம் மிகுந்த ஷரபு இப்னு மாலிக்' மாலிக் இப்னு தீனார், மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக், அவருடைய துணைவியார் கமரியா, அவருடைய பிள்ளைகள், தோழர்கள் ஆகியோருடன் மலபாருக்கு கப்பல் ஏறி நீண்டநாள் பயணத்திற்குப் பின் அவர்கள் கொடுங்கல்லூரில் கரை இறங்கினார்கள். மன்னர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை அங்குள்ள அரசரிடத்தில் ஒப்படைக்கவும், மன்னரின் மரணச் செய்தியை இரகசியமாக பாதுகாத்துக் கொள்ளவும் செய்தனர். கடிதத்தின் மூலம் செய்திகள் தெரிந்துகொண்ட அரசர். அவர்களுக்கு தங்குமிடங்களும், தோட்டங்களும் மற்றும் நிலங்களும் கொடுத்தார். அவர்கள் அங்கேயே தங்கினார்கள். காலம் தாழ்த்தாமல் ஒரு பள்ளிவாசலையும் அங்கு (கொடுங்கல்லூரில்) கட்டினார்கள். (இதுதான் இந்தியாவிலுள்ள முதல் பள்ளிவாசல்.)

மாலிக் இப்னு தீனார் அங்கேயே தங்கியிருந்து கொண்டு தம்முடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக்கை மலபாரின் பிற பகுதிகளில் பள்ளிவாசல் நிறுவவும், இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் பணித்தார்.

தொடரும்..

மக்கள் உரிமை வாரஇதழ்: டிசம்பர், 09 - 15, 2005

Thursday, February 09, 2006

இந்தியாவில் இஸ்லாம்-13

தொடர்-13: தோப்பில் முஹம்மது மீரான்

ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய 'துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்' (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் "பள்ளி பாண பெருமாள்" என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் "இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் "சேரமான் பெருமாள்" என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.

இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.

"ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது." (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.

"இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது"

திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:

கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.

எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது 'தடை' எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.

பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான "துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்" என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் "கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.

தொடரும்..

நவம்பர் 25 - டிசம்பர் 1, 2005

Sunday, February 05, 2006

இந்தியாவில் இஸ்லாம்-12

தொடர்-12: தோப்பில் முஹம்மது மீரான்

9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் "துஹ்பத்துல் முஜாஹிதீன்" என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.

"......மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் - ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு - கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் - வேலாயுதன் பணிக்கச்சேரி - பக்கம் 70)

"துஹ்பத்துல் முஜாஹிதீன்" என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். "மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்" என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.

அவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, 'மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்' என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)

சேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறார்.

சேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் - பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, 'மாத்தியமம்' மலையாளம் ஆண்டு மலர் - 1988 பக்.62)

இது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

நன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - நவம்பர், 18 - 24, 2005